திருமணமுறிவு சிகிச்சை பிரிவு

திருமணங்கள் சொர்கத்தில் நிச்சயிக்கப்படுகின்றன என்று சொல்வார்கள். ஆனால் அந்த திருமணங்களின் எதிர்காலம், இன்று நீதிமன்றங்களில்தான் நிச்சயிக்கப்படுகிறது. திருமணமான வெகு சில வருடங்களிலே, சின்ன சின்ன கருத்து வேறுபாடுகளால், அந்த உறவையே முறித்துக்கொள்கின்றனர். காமத்துப்பால், காமசூத்ரம் எனும் காதல் வேதங்களை உலகுக்கு வழங்கிய நம் நாட்டில், ஒருவனுக்கு ஒருத்தி என்று, மகிழ்ச்சியாக வாழ்ந்து கொண்டிருந்த நமது நாட்டில் ஏன் இப்படியொரு நிலை உருவானது? அதிலும், காதலித்து ஒருவரை ஒருவர் நன்கு புரிந்துகொண்டு, செய்துகொள்ளும் திருமணங்களும், சீக்கிரமே உடைந்துவிடுகிறதே, என்ன காரணம்?

இன்று விவாகரத்துக்காக தொடரப்படும் வழக்குகளில் பல, காதல் திருமணங்கள்தான். நம் நாட்டில், காதலிப்பவர்களில், 25 முதல் 30 சதவிகிதம் பேர் மட்டுமே, காதலித்தவர்களையே திருமணம் செய்துகொள்கிறார்கள். இதிலும், பெரும்பான்மையினர், பெற்றவர்களை எதிர்த்து திருமணம் செய்துகொள்பவர்கள். இப்படி இணைந்தவர்கள்தான், அதிகமாக விவாகரத்து கோருகிறார்கள். இதற்க்கான காரணங்கள் என்று பார்த்தால், முக்கியமானது, இவர்களுக்கு, திருமணமான சில மாதங்களிலேயே, காதல் கசந்துவிடுகிறது என்று சொல்வார்கள். ஆனால், இதனை ஆராய்ந்துப் பார்த்தால், சரியான புரிந்துகொள்ளல் இல்லாததே காரணமாக இருக்கும். அதாவது, காதலித்தபோது இருந்த நிலைக்கும், திருமணத்திற்கு, பின் நடந்துகொள்ளும், விதமும் மாறுபடுவதை, தவறாக புரிந்துகொள்கின்றனர். இதனால், ஒரு சிறு மாற்றமோ, தவறோ கூட பெரிதாக தெரிகிறது.

மற்றொரு முக்கிய  காரணம், இவர்களுக்குள் ஏற்படும் கருத்து வேறுபாடுகளை, தீர்த்து வைப்பதற்கு ஆள் இல்லாதது. பெற்றவர்களை எதிர்த்து, நண்பர்களின் உதவியோடு திருமணம் செய்துகொண்டவர்களுக்கு, அதற்குப் பின் வரும் பிரச்னைகளில், ஆலோசனை வழங்கவோ, சமரசம் செய்து வைக்கவோ யாரும் இருப்பதில்லை. அதாவது, நண்பர்கள் முயர்ச்சி எடுத்தாலும், இவர்கள் ஏற்றுகொள்வதில்லை. அதனால் சின்ன சின்ன கருத்து வேறுபாடுகள் கூட பெரிதாகி, விவாகரத்து வரை சென்றுவிடுகின்றன.

திருமணமான சில காலத்திலேயே பிரச்னை வருவது, சகஜம்தான். பெற்றோர்களால் நிச்சயிக்கப்பட்ட திருமணங்களிலும், இத்தகைய சம்பவங்கள் நிகழ்கின்றன. ஆனால், அங்கே பெற்றவர்களும், பெரியவர்களும் தலையிட்டு, அதனை தீர்த்து வைத்துவிடுவர். ஆனால், இன்று, பெற்றவர்கள் சொல்வதை  ஏற்றுக் கொள்ளாமல், பிடிவாதமாக இருந்து, பிரிந்துவிடுகின்ற தம்பதிகள் அநேகம் பேர். இத்தகைய சம்பவங்கள் நடக்கக் காரணம், தம்பதிகளிடையே இருக்கும் அகம்பாவமும், பிடிவாதமும்தான்.

இன்று பல குடும்பங்களிலும், கணவன், மனைவி இருவரும், வேலைக்குச் செல்பவர்களாகவே இருக்கிறார்கள். அலுவலகத்தில் நடக்கும் பிரச்னைகள் வீட்டிலும் எதிரொலிக்கின்றன. மேலும், இருவரும் சம்பாதிப்பதால், ஒருவித கர்வம் ஏற்பட்டுவிடுகிறது. பெண்ணுக்கு,சாதாரண பிரச்னைகள் எழும்போது கூட, நான் சுயமாக சம்பாதிக்கிறேன், எதற்கு கணவரை எதிர்பார்த்து, அவர் சொல்வதைக் கேட்டு வாழ வேண்டும் என்ற எண்ணம் தோன்றுகிறது. ஆண்களுக்கு, தான் சொல்வதை கேட்காமல் தன்னிச்சையாக செயல்படுகிறாலே என்ற கோபமும், சம்பாதிக்கிறாளே, என்ற பொறாமையும், எங்கே தன்னை விட அதிகம்  சம்பாதிக்கத் தொடங்கிவிடுவாலோ என்ற பயமும் ஏற்படுகிறது.

பெரும்பாலும் முற்றிய பிறகே, பெற்றோருக்கு இந்த பிரச்னைகள் தெரிய வருகின்றன. அதன் பிறகு அவர்களின் சமாதானமும், சமரச முயற்ச்சிகளும் எடுபடுவதில்லை. இதற்க்குக் காரணம், இன்று பிள்ளைகள், தந்தையை விட தாங்கள் அதிகம் சம்பாதிக்கிறோம், அவர்களை விட தங்களுக்கு, அதிகம் தெரியும், என்ற எண்ணத்தில், அவர்களது, கருத்துக்களை மதிப்பதில்லை. இதனால், இவர்கள் எடுக்கும் முயற்சிகள் தோற்று, தம்பதிகள், விவாகரத்து கேட்டு, நீதிமன்றம் செல்கின்றனர்.

இன்னும் சில குடும்பங்களில், பெற்றவர்களே பிள்ளைகளுக்குத் தவறான வழியைக் காட்டிவிடுகின்றனர். இவர்களுக்குள் எழும் பிரச்னைகளும், பரஸ்பரம் ஒருவர் மீது ஒருவர் காட்டும் மதிப்பும், பிள்ளைகளுக்கு,  திருமணத்தைப் பற்றியும் கணவன் மனைவி உறவைப் பற்றியும், தவறான கண்ணோட்டத்தை ஏற்படுத்திவிடுகிறது.

சில வசதியான குடும்பங்களில், பெற்றவர்களே, பிரித்து வைத்துவிடுகின்றனர். அதாவது, கணவன் மனைவிக்குள் பிரச்னைகள் எழும்போது, இவர்கள் தங்கள் வாரிசுகளுக்கு தவறான ஆலோசனைகள் வழங்கிவிடுகின்றனர். ஒரு தந்தை, தன் மகளிடம், மாப்பிள்ளை குடும்பத்தைவிட, நாம் எந்த வகையிலும் குறைந்தவர்களில்லை, அதனால், அவர்கள் சொல்வதை கேட்க வேண்டிய  அவசியமில்லை என்றும், மாப்பிள்ளையின் பெற்றோர், அவர்களுக்கு வேண்டுமென்றால், இறங்கி வந்து பேசட்டும் என்று தன் மகனிடமும், தவறான அணுகுமுறையை ஏற்படுத்தி விடுகின்றனர்.

இந்தப் பிரச்னைகளுக்குத் தீர்வுதான் என்ன?

நான், திருமணம் செய்துகொள்ளும் என் நண்பர்களுக்கு, ஒரே ஒரு அறிவுரை சொல்வதுண்டு. கணவனிடம், நீ எவ்வளவுதான் சம்பாதித்து, அவளை மாளிகை போன்ற வீட்டில் தங்க வைத்தாலும், நீ அவளுடன் செலவிடும் நேரத்திற்கு இணையாகாது. அதனால், என்ன வேலை இருந்தாலும், வாரத்தில் இரண்டு நாட்களோ, அல்லது ஒரு நாளோ, முழுதும் அவளுக்காக ஒதுக்கிவிடு என்று சொல்வேன்

மணமகளிடம், திருமணம் முடிந்து சில காலத்தில் அவன் உன்னுடன் அதிகம் நேரம் செலவிட முடியாமல் போனாலோ, உன்னை விட்டு விலகிப் போவது போல் தோன்றினாலோ, அப்போது இதனை நினைவில் கொள். உன் கணவன் செய்யும் காரியங்கள் எல்லாம் உனக்காகவும் உன் எதிர்காலத்திர்க்காகவும்தான். அவன் சம்பாதிப்பது உன்னை வசதியாக வாழவைக்கத் தான். இதனை புரிந்துகொண்டு, அவனை அரவணைத்துக்கொள்.

இந்த விஷயங்களைப் பெற்றவர்கள், தம்பதிகளுக்குள் பிரச்னைகள் வரும்போது புரியவைத்தால், விவாகரத்து கேட்டு யாரும் நீதிமன்றம் செல்ல மாட்டார்கள்.

1 கருத்துரைகள்:


You are totally wrong dear.After got love married few months after girl's parent enter 1st especially girl's mother do a politics with boy and create problem .You can check with any of them once girl's mother enter to this couple's house then problem start.I research in this case


Post a Comment

Design by WPThemesExpert | Blogger Template by BlogTemplate4U