திருமணமுறிவு சிகிச்சை பிரிவு

திருமணங்கள் சொர்கத்தில் நிச்சயிக்கப்படுகின்றன என்று சொல்வார்கள். ஆனால் அந்த திருமணங்களின் எதிர்காலம், இன்று நீதிமன்றங்களில்தான் நிச்சயிக்கப்படுகிறது. திருமணமான வெகு சில வருடங்களிலே, சின்ன சின்ன கருத்து வேறுபாடுகளால், அந்த உறவையே முறித்துக்கொள்கின்றனர். காமத்துப்பால், காமசூத்ரம் எனும் காதல் வேதங்களை உலகுக்கு வழங்கிய நம் நாட்டில், ஒருவனுக்கு ஒருத்தி என்று, மகிழ்ச்சியாக வாழ்ந்து கொண்டிருந்த நமது நாட்டில் ஏன் இப்படியொரு நிலை உருவானது? அதிலும், காதலித்து ஒருவரை ஒருவர் நன்கு புரிந்துகொண்டு, செய்துகொள்ளும் திருமணங்களும், சீக்கிரமே உடைந்துவிடுகிறதே, என்ன காரணம்?

இன்று விவாகரத்துக்காக தொடரப்படும் வழக்குகளில் பல, காதல் திருமணங்கள்தான். நம் நாட்டில், காதலிப்பவர்களில், 25 முதல் 30 சதவிகிதம் பேர் மட்டுமே, காதலித்தவர்களையே திருமணம் செய்துகொள்கிறார்கள். இதிலும், பெரும்பான்மையினர், பெற்றவர்களை எதிர்த்து திருமணம் செய்துகொள்பவர்கள். இப்படி இணைந்தவர்கள்தான், அதிகமாக விவாகரத்து கோருகிறார்கள். இதற்க்கான காரணங்கள் என்று பார்த்தால், முக்கியமானது, இவர்களுக்கு, திருமணமான சில மாதங்களிலேயே, காதல் கசந்துவிடுகிறது என்று சொல்வார்கள். ஆனால், இதனை ஆராய்ந்துப் பார்த்தால், சரியான புரிந்துகொள்ளல் இல்லாததே காரணமாக இருக்கும். அதாவது, காதலித்தபோது இருந்த நிலைக்கும், திருமணத்திற்கு, பின் நடந்துகொள்ளும், விதமும் மாறுபடுவதை, தவறாக புரிந்துகொள்கின்றனர். இதனால், ஒரு சிறு மாற்றமோ, தவறோ கூட பெரிதாக தெரிகிறது.

மற்றொரு முக்கிய  காரணம், இவர்களுக்குள் ஏற்படும் கருத்து வேறுபாடுகளை, தீர்த்து வைப்பதற்கு ஆள் இல்லாதது. பெற்றவர்களை எதிர்த்து, நண்பர்களின் உதவியோடு திருமணம் செய்துகொண்டவர்களுக்கு, அதற்குப் பின் வரும் பிரச்னைகளில், ஆலோசனை வழங்கவோ, சமரசம் செய்து வைக்கவோ யாரும் இருப்பதில்லை. அதாவது, நண்பர்கள் முயர்ச்சி எடுத்தாலும், இவர்கள் ஏற்றுகொள்வதில்லை. அதனால் சின்ன சின்ன கருத்து வேறுபாடுகள் கூட பெரிதாகி, விவாகரத்து வரை சென்றுவிடுகின்றன.

திருமணமான சில காலத்திலேயே பிரச்னை வருவது, சகஜம்தான். பெற்றோர்களால் நிச்சயிக்கப்பட்ட திருமணங்களிலும், இத்தகைய சம்பவங்கள் நிகழ்கின்றன. ஆனால், அங்கே பெற்றவர்களும், பெரியவர்களும் தலையிட்டு, அதனை தீர்த்து வைத்துவிடுவர். ஆனால், இன்று, பெற்றவர்கள் சொல்வதை  ஏற்றுக் கொள்ளாமல், பிடிவாதமாக இருந்து, பிரிந்துவிடுகின்ற தம்பதிகள் அநேகம் பேர். இத்தகைய சம்பவங்கள் நடக்கக் காரணம், தம்பதிகளிடையே இருக்கும் அகம்பாவமும், பிடிவாதமும்தான்.

இன்று பல குடும்பங்களிலும், கணவன், மனைவி இருவரும், வேலைக்குச் செல்பவர்களாகவே இருக்கிறார்கள். அலுவலகத்தில் நடக்கும் பிரச்னைகள் வீட்டிலும் எதிரொலிக்கின்றன. மேலும், இருவரும் சம்பாதிப்பதால், ஒருவித கர்வம் ஏற்பட்டுவிடுகிறது. பெண்ணுக்கு,சாதாரண பிரச்னைகள் எழும்போது கூட, நான் சுயமாக சம்பாதிக்கிறேன், எதற்கு கணவரை எதிர்பார்த்து, அவர் சொல்வதைக் கேட்டு வாழ வேண்டும் என்ற எண்ணம் தோன்றுகிறது. ஆண்களுக்கு, தான் சொல்வதை கேட்காமல் தன்னிச்சையாக செயல்படுகிறாலே என்ற கோபமும், சம்பாதிக்கிறாளே, என்ற பொறாமையும், எங்கே தன்னை விட அதிகம்  சம்பாதிக்கத் தொடங்கிவிடுவாலோ என்ற பயமும் ஏற்படுகிறது.

பெரும்பாலும் முற்றிய பிறகே, பெற்றோருக்கு இந்த பிரச்னைகள் தெரிய வருகின்றன. அதன் பிறகு அவர்களின் சமாதானமும், சமரச முயற்ச்சிகளும் எடுபடுவதில்லை. இதற்க்குக் காரணம், இன்று பிள்ளைகள், தந்தையை விட தாங்கள் அதிகம் சம்பாதிக்கிறோம், அவர்களை விட தங்களுக்கு, அதிகம் தெரியும், என்ற எண்ணத்தில், அவர்களது, கருத்துக்களை மதிப்பதில்லை. இதனால், இவர்கள் எடுக்கும் முயற்சிகள் தோற்று, தம்பதிகள், விவாகரத்து கேட்டு, நீதிமன்றம் செல்கின்றனர்.

இன்னும் சில குடும்பங்களில், பெற்றவர்களே பிள்ளைகளுக்குத் தவறான வழியைக் காட்டிவிடுகின்றனர். இவர்களுக்குள் எழும் பிரச்னைகளும், பரஸ்பரம் ஒருவர் மீது ஒருவர் காட்டும் மதிப்பும், பிள்ளைகளுக்கு,  திருமணத்தைப் பற்றியும் கணவன் மனைவி உறவைப் பற்றியும், தவறான கண்ணோட்டத்தை ஏற்படுத்திவிடுகிறது.

சில வசதியான குடும்பங்களில், பெற்றவர்களே, பிரித்து வைத்துவிடுகின்றனர். அதாவது, கணவன் மனைவிக்குள் பிரச்னைகள் எழும்போது, இவர்கள் தங்கள் வாரிசுகளுக்கு தவறான ஆலோசனைகள் வழங்கிவிடுகின்றனர். ஒரு தந்தை, தன் மகளிடம், மாப்பிள்ளை குடும்பத்தைவிட, நாம் எந்த வகையிலும் குறைந்தவர்களில்லை, அதனால், அவர்கள் சொல்வதை கேட்க வேண்டிய  அவசியமில்லை என்றும், மாப்பிள்ளையின் பெற்றோர், அவர்களுக்கு வேண்டுமென்றால், இறங்கி வந்து பேசட்டும் என்று தன் மகனிடமும், தவறான அணுகுமுறையை ஏற்படுத்தி விடுகின்றனர்.

இந்தப் பிரச்னைகளுக்குத் தீர்வுதான் என்ன?

நான், திருமணம் செய்துகொள்ளும் என் நண்பர்களுக்கு, ஒரே ஒரு அறிவுரை சொல்வதுண்டு. கணவனிடம், நீ எவ்வளவுதான் சம்பாதித்து, அவளை மாளிகை போன்ற வீட்டில் தங்க வைத்தாலும், நீ அவளுடன் செலவிடும் நேரத்திற்கு இணையாகாது. அதனால், என்ன வேலை இருந்தாலும், வாரத்தில் இரண்டு நாட்களோ, அல்லது ஒரு நாளோ, முழுதும் அவளுக்காக ஒதுக்கிவிடு என்று சொல்வேன்

மணமகளிடம், திருமணம் முடிந்து சில காலத்தில் அவன் உன்னுடன் அதிகம் நேரம் செலவிட முடியாமல் போனாலோ, உன்னை விட்டு விலகிப் போவது போல் தோன்றினாலோ, அப்போது இதனை நினைவில் கொள். உன் கணவன் செய்யும் காரியங்கள் எல்லாம் உனக்காகவும் உன் எதிர்காலத்திர்க்காகவும்தான். அவன் சம்பாதிப்பது உன்னை வசதியாக வாழவைக்கத் தான். இதனை புரிந்துகொண்டு, அவனை அரவணைத்துக்கொள்.

இந்த விஷயங்களைப் பெற்றவர்கள், தம்பதிகளுக்குள் பிரச்னைகள் வரும்போது புரியவைத்தால், விவாகரத்து கேட்டு யாரும் நீதிமன்றம் செல்ல மாட்டார்கள்.

அதிகார அழிவுகள்

"உலகத்திலே பயங்கரமான ஆயுதம் எது?"

"நிலைகெட்டுப் போன நயவஞ்சகரின் நாக்கு தான் அது"

கலைவானர் என்.எஸ்.கிருஷ்ணனும், புரட்சித் தலைவர், எம்.ஜி.ஆர். அவர்களும் பாடும் பழைய பாடல் இது.

இதன்படி, உலகத்திலே பயங்கரமான போதை வஸ்து எது? என்று கேட்டல், அதிகாரம் என்று சொல்லலாம்.

போதை வஸ்துக்கள் அனைத்தும், மனிதனுக்கு அறிமுகமாகி, அவன் சொல்வதைக் கேட்கத் தொடங்கி, பின் மெல்ல மெல்ல அவனை ஆட்சி செய்யத் தொடங்கிவிடும்.கொஞ்சம் கொஞ்சமாக ஆக்கிரமித்து, அழித்துவிடும்

அது போல, அதிகாரம் என்றவொன்று கையில் கிடைத்தவுடன், மனிதன் தன்னிலை இழந்துவிடுகிறான். தனக்கு கீழ்ப்படியவும், தனது கட்டளைகளை ஏற்று நடக்கவும் உலகமே காத்திருக்கிறது என்ற எண்ணத்தில், அவர்களை ஆட்டிப் படைக்க நினைக்கிறான். அதுவே அவனது அழிவுக்கு வழிவகுத்துவிடுகிறது.

ஆசையே மனிதனின் எதிரி, என்று புத்தர் சொன்னார். அப்படிப் பார்த்தால், மனிதனுக்கு, மண்ணாசை, பெண்ணாசை, பொன்னாசை, இவைதான் முதன்மையான, கேடுவிளைவிக்கக் கூடிய ஆசைகள். இதில் அதிகாரம் வரவில்லையே என்று பார்க்கிறீர்களா? இந்த அதிகாரம் இவை மூன்றுக்கும் மேலாக இருக்கிறது. எப்படி என்றால், அதிகாரம் இருந்தால், இந்த மூன்றையும் அடையலாம் என்பது மனிதனின் எண்ணம்.

இதுவே இன்றைய அரசியல்வதிகளுக்கும் பொருந்தும். அதிகாரம் இருப்பதால், என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என்ற எண்ணத்தில், செயல்படுகிறார்கள்..எதேச்சாதிகாரம், சர்வாதிகாரம் என்று எதிர்க் கட்சிகள், ஆளுங்கட்சியைப் எதிர்த்து குரல் எழுப்புவதெல்லாம் இந்த அதிகார   துஷ்ப்ரயோகத்தால்தான்.

"தத்துவஞானிகளே தலைமையேற்று ஆள வேண்டும்" என்றார் கிரேக்க அறிஞர் பிளாடோ.தத்துவ ஞானிகள் என்பவர்கள், இந்த அதிகாரத்தின் தத்துவத்தை உணர்ந்தவர்கள். அந்த போதைக்கு அடிமையாகாமல், சரியான முறையில் பயன்படுத்துவார்கள் என்பதுதான் இதன் கருத்து.

ஒரு மனிதன், தனக்கு மேல்மட்டத்தில் உள்ளவர்களிடம் எப்படி மரியாதை செலுத்துகிறான், என்பதை வைத்து அறியப்படுவதில்லை. அவனுக்கு கீழே உள்ளவர்களை எப்படி மதிக்கிறான் என்பதை வைத்தே, அறியப்படுகிறான். அவனது குணம் வெளிப்படுகிறது. அதிகாரத்தில் உள்ள சிலர், தங்களுக்கு கீழ் பணிபுரியும் ஊழியர்களையும், மக்களையும், அடிமைகளாக கருதுகின்றனர்.

அண்மையில் ஒரு அமைச்சர், "நான் ஒரு I. A. S. அதிகாரியாகியிருந்தால், கார் கதவுகளைத் திறந்துவிட்டுக்கொண்டிருந்திருப்பேன்" என்று கூறியிருந்தது, அவர்களை ஆட்டிப் படைக்கும் அதிகாரம் தன்னிடம் இருக்கிறது எண்ணத்தில்தான்.இந்த எண்ணத்தால், அவர்களின் படிப்பையும், தகுதியையும் மதிப்பதில்லை.

இந்த சர்வாதிகாரிகள், தங்களின் அழிவை தாங்களே தேடிக்கொள்கின்றனர். அவர்களால் ஒடுக்கப்பட்ட மக்களின் கூட்டத்திலிருந்தே, இவர்களை அழிக்கும் சக்தி புறப்படுகிறது. இது வரலாற்றில் பல முறை நிரூபணமாகியுள்ளது. ரஷ்யப் புரட்சியும், பிரெஞ்சுப் புரட்சியும் இதற்கு சிறந்த உதாரணங்கள்.

நமது புரானங்களிலும் இந்த கருத்து பல இடங்களில் வலியுறுத்தப் பட்டிருக்கிறது.கம்சனும், மகிஷனும், நரகாசுரனும், தங்களது செயல்களாலேயே அழிவைத் தேடிக்கொண்டனர். இவர்களின் மூலம் மக்களுக்கு அதிகாரத்தின் தன்மையை உணர்த்தவே, இந்த புராணங்கள் கூறப்பட்டிருக்கின்றன.

சர்வாதிகாரமும், அதிகார துஷ்ப்ரயோகமும் அரசியலிலும், ஆட்சி செய்பவர்களிடம் மட்டுமல்ல, சமுதாயத்தின் ஒவ்வொரு மட்டத்திலும் இருக்கிறது. வெவ்வேறு நிலைகளில் உள்ளவர்கள், தங்களின் சக்திக்கு ஏற்ப அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்துகின்றனர். சில ஆசிரியர்கள் மாணவர்களை தங்கள் சொந்த காரியங்களுக்குப் பயன்படுத்துவது, சில காவல் துறை அதிகாரிகள், தங்களுக்கு கீழ்நிலையில் பணிபுரியும் காவலர்களை, தங்களின் வீட்டு வேலைகளை செய்யச் சொல்வது, அலுவலகத்தில் மேலதிகாரிகள், கீழ்மட்ட ஊழியர்களை அடிமைபோல் நடத்துவது என்று அனைத்து மட்டங்களிலும் இந்த அதிகார போதை பரவியுள்ளது.

நமது தேசத் தந்தையான மகாத்மா காந்தியும், கறுப்பின மக்களின் விடிவேல்லியகத் திகழும் நெல்சன் மண்டேலாவும், அவர்களுக்கிருந்த அதிகாரத்தை உபயோகித்து இந்த உலகையே ஆண்டிருக்கலாம். ஆனால் காந்தி, அவருக்கு அளிக்கப்பட தல்வைவர் பதவியை மறுத்துவிட்டார். மண்டேலா, மீண்டும் பிரதமராக பதவியேற்றுக்கொளும்படி தேசமே கேட்டுக்கொண்டபோதும், மறுத்து வேறொருவருக்கு வழிவிட்டு விலகினார். அதிகாரத்தின் தனமையை அறிந்ததாலும், மக்களுக்கு சேவை செய்ய, அதிகாரம் தேவையில்லை என்பதை உணர்ந்ததாலுமே இவர்கள் இன்றும் சிறந்த தலைவர்களாக மனிதர்களின் இதயத்தில் இடம் பெற்றிருக்கிறார்கள்.

அதிகாரம் என்பது, மக்களை நெறிப்படுத்தி, சரியான பாதையில் வழி நடத்திச் செல்வதற்காகவே வழங்கப்படுகிறது. அவர்களை அடிமைப்படுத்தி, ஆட்சி செய்ய அல்ல.
இப்படி அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி, தங்களின் அழிவுக்கு வழிவகுதுக்கொள்ளும், எத்தனையோ பேரை சமகால வரலாற்றிலும் பார்த்துக்கொண்டிருக்கிறோம். 'தீதும் நன்றும் பிறர் தர வாரா' எண்டும் கூற்றை மிகச் சிறப்பாக நமக்கு உணர்த்துபவர்கள் இவர்களே.சர்வாதிகாரிகளால் பாதிக்கப்பட்ட மக்கள் கூட்டத்திலிருந்தே, அவர்களுக்கான் அழிவுசக்தி பிறக்கிறது.தாங்கள் செயல்களாலேயே எதிரிகளை உருவாக்கி, தங்களை அழிக்கும் ஆய்தத்தையும், இந்த சர்வாதிகரிகளே கொடுத்துவிடுகின்றனர். ஹிட்லர், ரஷ்ய ஜார் மன்னர்கள், போன்றவர்கள் இதற்க்கு சிறந்த உதாரணங்கள்.

ஆட்சியாளர்கள், தங்களுக்கு வழங்கபப்ட்டிருகும் அதிகாரத்தை, ஆக்க சக்தியாக மட்டுமே பயன்படுத்தி, மக்களை சரியான பாதையில் வழிநடத்திச் செல்ல மட்டுமே அதனை உபயோகிக்க வேண்டும். இல்லையென்றால், இன்றில்லை என்றாலும் விரைவில், அவர்ளது செயல்களுக்கு மக்கள் மத்திய்லிருந்து, எதிர்ப்பும், புரட்சியும் கிளம்பி இவர்களை அழித்துவிடும். மாவோயிஸ்டுகள் போன்ற தீவிரவாத அமைப்புகள் தோன்றி, மக்களையும், ஆட்சியாளர்களையுமே அழித்துவிடும்.இதனை உணர்ந்துகொண்டு இன்றைய அரசியல்வாதிகள் செயல்படவேண்டும் 

மாப்பிள்ளை வேட்டை

முன்னணி நாளிதழ் ஒன்றின், இலவச இணைப்பு புத்தகத்தில் வெளிவந்த, வாசகர் கடிதமொன்று, என் கவனத்தை ஈர்த்தது. நெருங்கிய நண்பரின் மகளுக்கு வரன் தேடுவதாகவும், அவர்கள் சுய தொழில் செய்யும் மணமகன்களை நிராகரிப்பதாகவும் எழுதியிருந்தார்.

இது பற்றி சிந்தித்தபோது, மேலும் பல விஷயங்களை உணர முடிந்தது. அவர் கூறியிருந்தது போல் திருமணங்களில் இப்படியொரு நிலை இருப்பதே யதார்த்தமான உண்மை. ஆனால், இந்த நிலையும், யதார்த்தமும் காலத்திற்கு ஏற்ப மாறுபடுவதாக எனக்குத் தோன்றுகிறது.

சொந்தத் தொழில் செய்வோரை பெண் வீட்டார் தவிர்க்கும் காரணம் என்ன? நிச்சயமில்லாதது, வருமானமும் நிலையில்லாதது, என்பவையே முக்கிய காரணங்கள்.


சரி இவர்கள் வரன் தேடும்போது அப்படி எதைத்தான் பார்க்கிறார்கள்?
சில வருடங்களுக்கு முன்பு, பெண்ணுக்கு வரன் தேடுவோர், அரசு உத்தயோகத்தில் இருக்கும் மணமகனாக இருக்க வேண்டுமென்று விரும்பினர்.இன்றும் கிராமப் புறங்களில் இந்த நிலை தொடர்கிறது.

பின்னர், டாக்டருக்கும் இன்ஜினியருக்கும் மதிப்பு கொடுத்தார்கள். இன்றும் இந்த நிலையில் இருப்பவர்களுக்கு, எவ்வளவு செலவு செய்தும் திருமணம் செய்துவைக்க, பெண் வீட்டார் தயாராக இருக்கிறார்கள்.

பின் தொண்ணூறுகளின் இடைப்பகுதியில், வெளிநாட்டு, குறிப்பாக அமெரிக்கா மாப்பிள்ளைகளுக்கு முன்னுரிமை அளித்தனர்.

இறுதியாக, கணினி மென்பொருள் துறை வல்லுனர்களைத் தேடினர்.

இப்படி ஒவ்வொரு காலகட்டத்திலும், பெண் வீட்டாரின் தேடல் மாறியிருக்கிறது. இந்த மாற்றங்களுக்கான காரணங்களைப் பார்க்கும்போதுதான், வேடிக்கையாக இருக்கிறது.

முதலில், அரசு உத்தியோகம்தான் நிரந்தரமானது, பாதுகாப்பானது என்ற எண்ணம் மக்களிடம் இருந்தது. "காலணா காசா இருந்தாலும், கவர்மென்ட் காசாக இருக்கணும்" என்று விரும்பினர். இதனால் பெண்களைப் பெற்றவர்கள், தங்கள் மகளின் வாழ்க்கை சிறப்பாக இருக்க அரசுப் பணியாளர்களுக்கே மணமுடித்தனர்.

பிறகு, டாக்டருக்கும், என்ஜினியருக்கும் சமுதாயத்தில் இருக்கும் மதிப்பையும் வருமானத்தையும் பார்த்து, அவர்களை விரும்பினர். இந்த வரன்களுக்காக எவ்வளவு கடன் வாங்கியும் திருமணம் செய்து வைக்கவும் தயாராக இருக்கிறார்கள்.

வெளிநாட்டு வேலையால் கிடைக்கும் பெருமையும், கௌரவமும், அதற்கேற்ற  சம்பளமும், பெண்ணைப்  பெற்றவர்களை, இவர்கள் பின்னால் அலையவைத்தது.

அடுத்ததாக, இன்றைய நிலையில் மென்பொருள் வல்லுனர்களுக்கு அதிக மவுசு இருக்கிறது. இவர்கள் வாங்கும் சம்பளம், பெண் வீட்டாரை கவர்ந்து இழுக்கிறது.

இது தான், மாப்பிளையைத் தீர்மானிக்கும் அம்சங்கள். இவற்றை வைத்துத்தான், பெண் வீட்டார் மணமகனைத் தேர்வு செய்கின்றனர்.

மேற்ச்சொன்ன காரணங்களை நீங்களே நன்றாக யோசித்துப் பாருங்கள். இவை அனைத்தும் சரியானதா? ஆசையாக வளர்த்த மகளுக்கு சிறப்பான வாழ்க்கை அமைத்துக் கொடுக்க, பெற்றோர் எடுத்துக்கொள்ளும் முயற்சிகள் உங்களுக்குத் திருப்தியளிக்கிறதா?

தங்கள் ஆசை மகளுக்கு, பெற்றோர் மிகுந்த சிரமப்பட்டு செய்து வைக்கும் திருமணங்களின் (அதாவது மணமகன்களின்), மறுபக்கத்தையும் பார்த்த பிறகு ஒரு முடிவுக்கு வருவது நல்லது.

அரசு உத்த்யோகம். நிலையனதுதான்.பாதுகாப்பும், சலுகைளும் நிறைந்தது தான். வருமானமும் அதிகம்தான். ஆனால், சில அரசாங்க ஊழியர்கள், கடமை உணர்சசியற்றவர்களாகவும், லஞ்சம் வாங்குவதால், பலரின் வருத்தத்திற்கு ஆளாகிறார் என்றும், இவர்களைத் தவிர்க்கும் பெற்றோரும் இருக்கிறார்கள். அனைத்து அரசு அலுவலர்களும் இப்படி இல்லையென்றாலும், சிலர் செய்யும் தவறுகளால், பொதுவான அவப்பெயர் ஏற்பட்டுவிட்டது.

டாக்டரும் என்ஜினியர்களும் நல்ல வரண்கள்தான் என்றாலும், மாப்பிள்ளை வீட்டாரின் அதிகப்படியான எதிர்பார்ப்புகளாலும், ஒருவித கர்வத்தோடு திகழ்வதாலும், பெண் வீட்டார் இவர்களை விரும்புவதில்லை.

வெளிநாட்டு மாப்பிள்ளைகளில் நடக்கும் ஏமாற்று வேலைகளால், இவர்களையும் ஒதுக்கி விடுகின்றனர்.

இறுதியாக இன்றைய நிலையில், சாப்ட்வேர் எஞ்சினியர். தொடக்கத்திலேயே கொடுக்கப்படும் அதிகப்படியான சம்பளம்,பெண் வீட்டாரைக் கவரும் அம்சம்.இதனால், தங்கள் மகளின் வாழ்வு செழிப்பாக இருக்குமென்று இந்த வரன்களை  அதிகம் விரும்புகின்றனர்.

இப்படி முதல் நிலைத் தேர்வுகளை முடித்துவிட்டு, அடுத்த நிலையாக, மணமகனின் குடும்பத்தைப் பற்றியும், அவரது குணாதிசயங்கள், பண்புகள் பற்றியும் விசாரிக்கின்றனர். அதன் பிறகே திருமண ஏற்பாடுகள் நடக்கிறது.

இதிலும் கவனிக்க வேண்டிய முக்கியமான விஷயம் என்னவென்றால், இந்தப் பெண் வீட்டார், இந்த முடிவுகளுக்கு தாங்களாக வருவதில்லை. அடுத்தவர்களைப் பார்த்துத்தான் தீர்மானிக்கிறார்கள். அவர்களுக்குத் தெரிந்த யாரோ ஒருவரின் மகள், வெளிநாட்டுப் பையனை திருமணம் செய்துகொண்டு சந்தோஷமாக வாழ்கிறாள் என்றும், அவர் சம்பளம் இவ்வளவு வாங்குகிறார் என்றும் அறிந்தால், உடனடியாக தங்கள் மகளுக்கும் வெளிநாட்டு மாப்பிளையைத் தேடுவார்கள். அதுவே பக்கத்து வீட்டுக்காரரின் மகளுக்கு ஒரு சாப்ட்வேர் எஞ்சிநியருடன் திருமணம் நடந்து, அவரும் கை நிறைய சம்பளம் வாங்கி மகிழ்ச்சியாக வாழ்கிறார்கள் என்றால், அப்படிப்பட்ட. மாப்பிள்ளையைத் தேடத் தொடங்குவார்கள். இது தான் இன்றைய யதாத்த நிலை.

இவற்றைப் படித்த பிறகு உங்களுக்கு என்ன தோன்றுகிறது? மணமகனை அளவிட, பெண்ணின் பெற்றோர் உபயோகிக்கும் அளவுகோல் சரியானதா? உத்தியோகத்தையும், வருமானத்தையும், குடும்பப் பின்னணியையும் மட்டும் வைத்து சரியான மாப்பிள்ளையைத் தேர்ந்தெடுத்துவிட முடியுமா?

வேறு என்ன வேண்டுமென கேட்கிறீர்களா?

இப்படி பெண் வீட்டார் பார்த்து செய்து வைத்த அத்தனைத் திருமணங்களும் வெற்றிகரமாக தொடர்கின்றனவா?

வெளிநாட்டு மாப்பிள்ளைக்கு ஆசைப்பட்டு திருமணம் செய்து வைத்துவிட்டு, பின் அவரது நடவடிக்கைகளில் திருப்தியில்லாமல் பிரிந்த பெண்கள் எத்தனை பேர்? இந்த மாப்பிளைகள் மோசடிப் பேர்வழிகள் என்று உணர்ந்து தங்கள் மகளின் வாழ்க்கை பலியானதை கண்டு வருந்தும் பெற்றோர் எத்தனைப் பேர்?

அத்தனைத் திருமணங்களும் தோற்றுவிடுவதில்லை என்றாலும், பல இடங்களிலும், பிரச்னைகளும், மனக் கசப்புகளும் இருப்பதை மறுக்க முடியாது. தங்கள் மகள் சந்தோஷமாக வாழ்கிறாள் என்று ஊருக்கு சொன்னாலும், ஒவ்வொரு தாய் தந்தையின் மனசாட்சிக்குத் தெரியும், தங்கள் வாரிசுகள் எப்படிப் பட்ட வாழ்க்கை வாழ்கிறார்கள் என்று.

ஒரு மனிதனை அறிந்துகொள்ள அவனது உத்தியோகமும், வருமானமும், பண்புகளும் மட்டும் போதாது. எந்த உத்தியோகமும் நிலையில்லாததுதான். பண்புகளும், குணங்களும் எப்போது வேண்டுமானாலும் மாறலாம்.

அவனிடம் எப்பொழுதும் மாறாத ஒன்று இருக்கிறது.அவனது  திறமை. ஒவொரு மனிதனுக்கும் தனிப்பட்ட திறமை உண்டு. அதுவே அவனை வாழ்க்கையில் முன்னேற வைக்கும்.

திறமையிருந்தால் வருமானம் எந்த வகையிலும் வரும். திறமையிருந்தல்தான், அவன் செய்யும் வேலையே நிலைக்கும். வாழ்வின் எந்தச் சூழ்நிலையிலும் கை கொடுப்பது இந்தத் திறமைதான்.

எந்தக் கஷ்டம் வந்தாலும் தங்கள் மகளைக் காப்பாற்றும் திறமை உள்ளவனா, வாழ்க்கையின் சவால்களை நம்பிக்கையோடு எதிர்கொல்பவனா என்பதையே பெற்றவர்கள் பார்க்க வேண்டும். அடுத்த நிமிடம் என்ன நடக்குமென்று நிச்சயமில்லாத வாழ்க்கையிது. அப்படி எந்தச் சந்தர்ப்பத்தையும் எதிர்கொள்ள உதவுவது இந்தத் திறமையும் நம்பிக்கையும்தான்.

குணாதிசயங்களும், பண்புகளும் மனிதனோடு பிறந்தவை என்றாலும், அவை மாறக் கூடியவை. ஒரு பெண் நினைத்தால், கோழையை வீரனாக்க முடியும், குடிகாரனைத் திருத்த முடியும், சோர்ந்திருப்பவனுக்கு நம்பிக்கை ஊட்டி சாதிக்கவைக்க முடியும். இவை எல்லாத்துக்கும் திறமையே அடிப்படை.கணவனின் திறமையை உணர்ந்து அவனை வழிநடத்துவதே மனைவியின் திறமை.

மணமகன் என்ன உத்தியோகம் பார்க்கிறான், எவ்வளவு சம்பாதிக்கிறான் என்று பார்க்காமல், பெண்ணின் பெற்றோர்கள், எந்த கஷ்டத்தையும் சமாளிக்கக் கூடிய திறமை உள்ளவனா என்று அறிந்து தேர்வு செய்ய வேண்டும்.

அதுவே அவர்கள் ஆசையாக வளர்த்த மகளுக்கு ஏற்படுத்திக் கொடுக்கும் சிறப்பான வாழ்க்கையாக அமையும்.

அன்பின் முகவரி

அன்னை தெரசாவின் பிறந்த நாள் விழா சில தினங்களுக்கு முன் கொண்டாடப்பட்டது. அன்பையும் கருணையையும் மட்டுமே பரப்பிய அந்த உன்னதமான அன்னையை உலகமே நினைவுகூர்ந்தது. ஆனால், இது போன்ற மகிழ்ச்சியான தருணங்களில், வருத்தம் தரக்கூடிய சில சம்பவங்களும் நடப்பதுண்டு. அன்னை தெரசாவிற்கு புனிதர் பட்டம் வழங்குவது குறிந்து எழுந்துள்ள சர்ச்சைகளே, இந்த இடத்தில வருத்தமான விஷயங்களாக உள்ளன.

புனிதர் பட்டமென்பது, இறந்த ஒருவர், அங்கீகரிக்கப்பட்ட புனிதர்களின் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளார் என்பதற்கான அடையாளம். இந்தப் புனிதர் பட்டத்தை அளிக்கும் அதிகாரம், ரோமன் திருச்சபை வசம் உள்ளது. இந்தப் புனிதர் நிலையை அடைய, மூன்று நிலைகளில் தேர்வு பெற வேண்டும்.

அதாவது, ஒருவர் முதலில், இறைப் பணியாளர் என்று அறிவிக்கப்பட வேண்டும்.

அடுத்ததாக, அவர், வணக்கதிற்க்குரிய்வராக அறிவிக்கப் பட வேண்டும்.

மூன்றாவது நிலையாக, அருளாளர் நிலை.


இந்த நிலைகளைத் தன் சேவைகளால் கடந்த அன்னை, அவரது, மறைவுக்குப் பின், புனிதர் பட்டத்தின் முந்தைய நிலையான, முக்திப் பேரு நிலையை அடைந்துவிட்டரா? அதாவது, ஏதாவது அற்புதங்கள் செய்திருக்கிறாரா, என்பது தான் இப்போது கேட்கப்படும் கேள்வி.

19 . 10 . 2003 . இல், அன்னை அருளாளர் பட்டத்தை அடைய, எந்தத் தடையும் இல்லை என்று அறிவித்து, அருளாளர் பட்டம் வழங்கப்பட்டது. இதன் பிறகு, புனிதர் பட்டம் கொடுப்பதுதான் சரியென்று, அன்னையை அறிந்தவர்களும், அவரை நேசித்தவர்களும் வலியுறுத்துகிறார்கள்.

முன்பே கூறியதுபோல், அருளாளர் பட்டம் பெற ஏதேனும் ஒரு அற்புதம் நிகழ்த்திக் காட்டியிருக்க வேண்டும் என்பது விதி. அதன்படி, மோனிக்கா பெஸ்ரா என்ற இந்திய கிறிஸ்த்தவப் பெண்ணின், வயிற்றில் இருந்த கட்டி, அன்னை தெரேச உருவம் பதிக்கப் பட்ட சங்கிலியை அணிந்ததும், பூரண குணமாகிவிட்டதாக சொல்லப்பட்டது. இதனையே அற்புதமாக அங்கீகரிக்கலாம், என்று அன்னையின் அபிமானிகள் சொல்கிறார்கள். அன்னையின் உருவத்தில் இருந்து புறப்பட்ட ஒளி வெள்ளம், புற்றுநோய்  கட்டியை குணப்படுத்தியதாக மோனிக்கா பெஸ்ரா தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், அன்னைக்கு புனிதர் பட்டம் கொடுப்பதை எதிர்த்து, பத்திரிக்கையாளர் ஒருவர், "தெரசாவின் நோக்கம், மக்களுக்கு உதவி செய்வதல்ல. நல்ல செயல்களுக்குப் பயன்படுத்துகிறேன் என்று பொய் சொல்லி நன்கொடைகளைப் பெற்றவர். அவர் ஏழ்மையைப் போக்க உழைக்கவில்லை, கத்தோலிக்கர்களின் எண்ணிக்கையை பெருக்குவதிலேயே குறியாக இருந்தார்" என்று அவதூறு கூறி இருக்கிறார்.

ஆனாலும் திருச்சபை, "பெண்ணின் வயிற்றில் இருந்த கட்டி மறைந்ததை, அன்னையின் அற்புதமாக அங்கீகரித்து, அருளாளர் பட்டம் அளிக்கப்பட்டது உண்மை. ஆனால், அவர் புனிதர் பட்டம் பெற இன்னுமோர் அதிசயம் நிகழ வேண்டும்" என்று அறிவித்துள்ளது.

இந்தச் செய்திகளைப் படிக்கும்போது, எனக்கு ஆச்சர்யமாகவும் அதிர்ச்சியாகவும் இருக்கிறது. அன்னை வாழ்ந்த காலத்தில், அவர் செய்த சேவைகளும், காட்டிய அன்பும் அனைவரும் அறிந்ததே. இந்த உலகத்தில் அவர் பரப்பியது மனித நேயம் மட்டுமே. இதனை உலகமே உணர்ந்திருக்கிறது. இப்படி இருக்கும்போது, ஒருவர் அன்னையைப் பற்றி அவதூறு கூறுவது, வேதனையாக உள்ளது.

அடுத்ததாக, அன்னைக்கு புனிதர் பட்டம் வழங்குவது பற்றி நடந்து வரும் விவாதங்கள். அன்னையின் தூய்மையான அன்பை, அறிந்த உலகமே அவருக்கு புனிதர் பட்டம் வழங்குவதை மகிழ்ச்சியோடு ஏற்றுக்கொள்ளும். ஆனாலும் கிறித்துவ திருச்சபையின் விதிகள் அதனைத் தடுக்கிறது எனும்போது, வருத்தம்தான்.

ஆனால் அன்னை தெரசா, புனிதர் பட்டத்தை விட உயர்ந்த பட்டத்தை அவர் வாழ்நாளிலேயே பெற்று விட்டார்.

ஆம். கிட்டத்தட்ட அவரது பெயராகவே மாறிவிட்ட "அன்னை" என்ற பட்டம், புனிதர் பட்டத்தை விட மேலானதல்லவா?

மாதா பிதா குரு தெய்வம் என்று சொல்லப் பட்டதில், முதன்மை நிலையாக இருப்பது, மாதா எனும் அன்னை தான். ஒரு தாய் எப்படி தன் குழந்தைகளிடம் கருணை காடுவாலோ, அப்படி இந்த உலகத்தில் உள்ள அனைத்து மனிதர்களிடமும் பாரபட்சமின்றி அவர் அன்பு செலுத்தியதால், உலகமே அவரை அன்னையென்று அழைக்கிறது. அவரது அப்பழுக்கற்ற தூய்மையான அன்புக்கு கிடைத்த உன்னதமான அங்கீகாரம் இது.

இதனை விட மேலான நிலையாக புனிதர் பட்டதை நான் கருதவில்லை. அப்படியே அவருக்கு புனிதர் பட்டம் வழங்குவதென்றாலும், இந்த மாசற்ற அன்னையென்ற அங்கீகாரம் ஒன்றே போதுமே. அவர் உலக மக்களிடம் செலுத்திய அன்பு அதற்கு சாட்சியாக இருக்குமே?

இன்று உலகில், தன்னலமற்ற, உண்மையான, சேவை செய்பவர்களும், கருணை, அன்பு செலுத்தி மனித நேயத்தைப் பரப்புபவர்களும் வெகு சிலரே. அத்தைகைய அன்னை தெரசாவை நிச்சயம் உலகம் அங்கீகரிக்க வேண்டும்.

முல்லாவின் அல்லா

முல்லா நஸ்ருதினை நமக்குத் தெரியும். குழந்தைகள் கதையில் வரும் ஒரு வேடிக்கையான கதாபாத்திரம். அனால் அவரது கதையில் சொல்லபப்டும் கருத்துகள், ஆழ்ந்த பொருள் உடையதாக இருக்கும். அவரை ஒரு ஞானி என்றே சொல்லலாம். அவர் நகைச்சுவையாக பேசினாலும், அதில் பல விஷயங்களை நமக்கு உணர்த்துவதாக இருக்கும். அப்படிப்பட்ட முல்லா நஸ்ருதீன் மீது ஒரு நாள் ஒரு வழக்கு தொடரப்பட்டது.அவரது பெருமை, புகழ் கண்டு பொறாமை கொண்ட சிலர் இந்த வழக்கைத் தொடர்ந்திருந்தனர்.

புகாரின் முக்கிய அம்சம், முல்லா மதத்துக்கு எதிராக பிரச்சாரம் செய்கிறார் என்பதுதான். மன்னரிடமும் முல்லாவுக்கு மிகுந்த செல்வாக்கு உண்டு. ஆனாலும் வேறு எந்த வழக்காக இருந்தாலும் மன்னர் தள்ளுபடி செய்திருப்பார், மதத்துக்கு எதிராக செயல்படுவாதாக கூறப்பட்டபடியால், மன்னர் அரசவையில் முல்லாவிடம் விளக்கம் கேட்க முடிவு செய்தார்.

முல்லா அவைக்கு வந்தார். அவர் மீது விசாரணை என்று கேள்விப்பட்டு, அவரது ஆதரவாளர்கள் பலரும் அரசவையில் கூடி இருந்தனர்.

வழக்கு தொடந்தவர்கள் எழுந்தனர். முல்லா ஊர் ஊராகச் சென்று கடவுளுக்கு எதிராகப் பிரசாரம் செய்கிறார் என்று குற்றம் சாட்டினர். பல ஊர்களிலும் முல்லா பேசியதாக சொல்லப்பட்ட விஷயங்களை தெரிவித்தனர்.

"முல்லா இதற்கு உங்களின் விளக்கம் என்ன?" அமைதியாக கேட்டார் மன்னர்.

முல்லா நஸ்ருதீன் எழுந்து நின்று, "அரசே! ஆன்றோர்கள் நிரம்பிய இந்த அவையிலிருந்து, பத்து புத்திசாலிகளைத் தேர்ந்தெடுங்கள்" என்று பணிவுடன் கூறினார்.

பொறாமை நிறைந்தவர்களுக்கிடையே பெரும் போட்டி ஏற்ப்பட்டு கூச்சலும், குழப்பமும் ஏற்பட்டது.பெரும் ஆர்ப்பாட்டத்துக்குப் பின்னர், பத்து பேர் தேர்ந்தெடுக்கப்பட்டனர். முல்லா அவர்களிடம், இறைவனைப் பற்றி அவைகள் நினைப்பதை எழுதச் சொன்னார். அவர்கள் ஒவ்வொருவரும், எழுதி முடித்து மன்னரிடம் கொடுத்தனர்.

மன்னர் ஒவ்வொன்றாக, அனைவருக்கும் கேட்கும்படி வாசித்தார். ஒருவர் இறைவனை ப்ரம்மாண்டமனவர் என்று கூறியிருந்தார். மற்றொருவர், அவர் அணுவுக்குள் அடங்கியிருப்பதாக கூறினார். ஒருவர், கடவுள் ஆகாயத்தில் இருப்பதாக எழுதியிருந்தார். வேறொருவர், எளிய வடிவமானவர் என்று கூறியிருந்தார். இன்னொருவரோ, இறைவன்  வடிவமற்றவர் என்று சொல்லியிருந்தார். இப்படி பத்து பெரும் பத்து விதமான பதில்களை எழுதியிருந்தனர்.

இதையெல்லாம் கேட்டுகொண்டிருந்த முல்லா நஸ்ருதீன் எழுந்து, "மன்னா! எது இறைவன் என்பதிலேயே இத்தனைக் குழப்பம் கொண்ட இவர்கள், நான் மதத்துக்கு எதிராக பிரசாரம் செய்கிறேன் என்று எப்படிக் கூற முடியும்? இறைவனையே அறியாத இவர்கள், நான் அவருக்கு எதிராகச் செயல்படுகிறேன் என்பதை மட்டும் எப்படி உணர்ந்தார்கள்?" என்று கேட்டார்.

ஆன்மிகம் என்ற பெயரில் பல ஏமாற்று வேலைகளும், மதத்தின் பெயரால் கொடிய கலவரங்களும் நடக்கும் இன்றைய காலகட்டத்தில், இந்தக் கதை எத்தனை கருத்துகளை விளக்குகிறது.

இன்று ஆன்மிகவாதிகள் என்று சொல்லிகொள்ளும் பலரும் இறைவன் யார், எப்படி இருப்பார் என்று அறியாதவர்களே. அந்தக் கடவுளே இவர்கள் முன் தோன்றினாலும் இவர்களால், உணர முடியாது. காரணம், இவைகள் யாரும் இறைவனையும், அந்த தத்துவத்தையும் முழுமையாக உணர்ந்தவர்களில்லை.

தங்கள் கஷ்டங்களைத் தீர்த்துவைக்குமாறு கடவுளை வேண்டுபவர்களிடம், கடவுள நேரில் வந்து, "நான்தான் கடவுள், உங்கள் கஷ்டங்களைப் போக்கவே வந்தேன்" என்றால் எத்தனைப் பேர் நம்புவார்கள்?. அத்தனைக் கோவில்களுக்கும் சென்று கடவுளை வேண்டியவர்கள், அவர் நேரில் வரும்போது, அவரை அறிந்துகொள்ள மறுப்பார்கள். இதுதான் மக்களிடையே நிலவும் ஆன்மிகம்.இப்படிப்பட்ட மக்களை யார்தான் ஏமாற்ற மாட்டார்கள்?

கடவுள் மீது தீவிர பக்தி கொண்டவர்கள் என்றும், அவரையும், அவரது சக்திகளையும் முழுமையாக உணர்ந்தவர்கள் என்று சொல்லும் யாரும், கடவுள் நேரில் வந்தால் நம்ப மறுப்பார்கள். இதற்குக் காரணம், அவர்கள் கடவுள் மீது கொண்டுள்ள எதிர்பார்ப்புகள். இறைவனை இவர்களாக உருவகப்படுத்திக்கொண்டு, அந்த உருவப் படியே கடவுள் இருக்கிறார்  என்ற நம்பிக்கையில் வழிபடுகிறார்கள். இறைவன் நேரடியாக நம்மிடம் வர மாட்டார் என்பதை இவர்கள் அறிவார்கள். இதனால்தான், போலியாக சில ஆன்மீகவாதிகளும், சாமியார்களும், இறைவனைக் காட்டுகிறேன் என்ற பெயரில் மக்களை ஏமாற்றி வருகிரார்கள்.

இறைவனைப் பற்றி ஒன்றை நாம் முழுமையாக உணர வேண்டும். அவரை நாம் காண முடியாது. ஆனால் அவரை உணர முடியும். உணமையான ஆன்மீக அறிஞர்கள் பலரும் சொன்ன கருத்து, உனக்குள்ளேயே தேடு என்பதுதான். அதன் அர்த்தம், இறைவன் உனக்குள் இருக்கிறார், அவரைத் தேடு என்பதுதான்.

இந்தத் தேடலை மேற்கொள்ளத்தான், தியானம், யோகாசனம் என்று பல வழிமுறைகளை ஆன்றோர்கள் கூறியிருக்கிறார்கள். நமக்குள் இருக்கும் இறைவனை நாம் உணர்ந்துகொண்டால், போலியான ஆன்மீகவாதிகளை நாம் நாடிச் செல்ல வேண்டியதில்லை.

இறைவனை உணர மற்றொரு வழி, அன்பு! அனைவரிடமும் அன்பு செலுத்துவதன் மூலம் கடவுளை உணர முடியும். பிறர் மீது நாம் அன்பு காட்டும்போது அவர்களை நாம் மதிக்கிறோம். அந்த மதிப்பிலும், பரிவிலும் இறைவனைக் காணலாம். கருணை என்பதே இறைவனின் குணம். அதனை நாம் பிறரிடம் காட்டும்போது நாம் கடவுளாகிறோம்.இதனை உணர்ந்துகொண்டு, கடவுள், ஆன்மிகம் என்ற பெயரால் நடத்தப்படும் ஏமாற்று வேலைகளை தடுப்போம்.

காதல் கொலைகள்

பெண்களுக்கு எதிரான கொடுமைகள் குறித்து போராட்ட கோஷங்கள் தேசமெங்கும் ஒலித்தாலும், பெண்களால் நடக்கும் சில குற்றங்களும் செய்தித்தாள்களை ஆக்ரமிக்கின்றன. கள்ளக் காதலுக்கு ஒரு பிஞ்சுக் குழந்தை பலியான சம்பவம், மாநிலத்தையே உலுக்கியது. இது போன்ற குற்றங்கள் ஒரு ரகமென்றால், பெண்கள் அவர்கள் செய்யும் செயல்களாலேயே பாதிக்கப்படுவது மற்றொரு ரகம். இத்தகைய குற்றங்களுக்கு யாரைக் குறை கூறுவது என்றுதான் விளங்கவில்லை.

மதுரையில், மூன்று காதலர்களை மாற்றியதாக, பெற்ற தந்தையே, மகளைக் கொலை செய்திருக்கிறார் என்ற செய்தி, பதற வைத்தது.பல ஆண்களுடன் பழகி,  காதலர்களை அடிக்கடி மாற்றியதாக பதினெட்டு வயது மகளை, தந்தை கொலை செய்திருக்கிறார். குடும்ப கௌரவம் காக்க மகளை பலி கொடுத்திருக்கிறார்.

இதுபற்றி தெரிந்த சிலரிடம் விவாதித்தபோது, தந்தை செய்தது சரியென்ற கருத்துக்கள் வந்ததுதான், அதிர்ச்சியாக இருந்தது. பெண் பொறுப்பில்லாமல் அலைந்ததால், மற்ற குடும்ப உறுப்பினர்களின் நலன் கருதி தந்தை இப்படிச் செய்த்தது, தவறல்ல என்று காரணம் கற்பித்தார்கள்.

எத்தனையோ குடும்பத்தில் ஆண்கள் இப்படி பொறுப்பில்லாமல் அலைகிறார்கள், அவர்களை யாரும் ஒன்றும் செய்வதில்லையே? என்று பெண்கள் நியாயம் கேட்டால் அதுவும்  சரி என்று சொல்லலாமா? குழப்பமாக இருந்தது. சிந்திக்கத் தொடங்கினேன்.

பெண்கள் ஏன் இது போன்ற செயல்களில் ஈடுபடுகிறார்கள் என்று யோசித்தேன். காதலனை நம்பி ஏமாந்த பெண்களின் கதை மாறி, பெண்கள் காதலனை அடிக்கடி மாற்றும் இந்த நிலை ஏன் வந்தது?

இதற்கு முக்கிய காரணமாக எனக்குப் பட்டது, பெண்களின் முடிவெடுக்க முடியாத குழப்பமான மனநிலைதான். பருவ வயதில், ஓர் ஆணைப் பார்த்தவுடன், ஈர்ப்பு வருவது சகஜம். அதனை காதல் என்று தவறாக அர்த்தப்படுத்திக் கொண்டு, ஆண்களுடன், எல்லை மீறிப் பழகுகிறார்கள். ஊடகங்களும் இது போன்ற எண்ணங்கள் வளர காரணமாக இருக்கின்றன. இதில் மற்றொரு விஷயம், பெண்கள், எப்போதும் ஆண்களிடம் பழகும்போது, ஏதோவொன்றை எதிர்பார்த்து பழகுகின்றனர்.அன்பு, பாதுகாப்பு, வசதியான, ஆடம்பரமான வாழ்க்கை, சுதந்திரம், போன்றவற்றை எதிர்ப்பார்த்து பழகுகின்றனர். அந்த எதிர்பார்ப்பு பொய்யாகும்போது, அது நாள்வரை பழகியவனை பிரிந்து, புதிய துணையைத் தேடுகின்றனர்.

இந்த சூழ்நிலையில், பெண்கள் ஒரு முக்கியமான் தவறு செய்துவிடுகின்றனர். அதுவே அவர்கள் வாழ்கையை பாதித்துவிடுகிறது. அவர்களது எதிர்பார்புகளை, அவர்கள் சரியாகப் புரிந்துகொள்வதில்லை. தங்கள் தேவை என்ன என்பதை அவர்கள் உணர்வதில்லை. ஆடம்பர வாழ்க்கை, போன்ற நிலையற்ற சுகங்களுக்கும், சுதந்திரம் என்பதை சரியாகப் புரிந்துகொள்ளாமலும், வாழ்க்கையை வீனடித்துவிடுகின்றனர்.

பெண்களின் சுதந்திரமென்பது, ஆணுக்கு சமமாக குடும்ப பாரத்தை சுமப்பது, விளையாட்டு, விஞ்ஞானம், போன்ற துறைகளில் புதிய உயரங்களை எட்டுவது போன்ற செயல்களில் இருக்க வேண்டும். அவளது சாதனைகளோடு, குடும்ப எதிர்காலத்தின் கட்டுமானத்திலும் அவளது பங்கு இருக்க வேண்டும். இதனை சரியாக உணராத சில பெண்கள், தங்கள் சுதந்திரமும் முன்னேற்றமும், ஆண்களுக்கு நிகராக, மது அருந்துவதிலும் புகை பிடிப்பதிலும், பல ஆண்களுடன் பழகுவதிலும் தான் இருக்கிறது என்றும், ஆண்களுடனான உறவு, சுகத்திற்காகவும் சந்தோஷத்திற்க்காகவும் என்று முடிவுகட்டிவிடுகின்றனர்.இதனாலேயே அவர்களின் செயல்கள் இப்படித் தவறான பாதையில் செல்கிறது.

பெண்களை சக்தியென்றும், தாயென்றும் போற்றும் இந்த தேசத்தில், பெண்கள் இப்படிப்பட்ட நிலையை நோக்கி சென்றுகொண்டிருப்பது வேதனை. பெண்களின் இந்த நிலைக்கு, சமுதாயத்தின் பார்வையும் காரணம். பெண்கள் வீட்டில் அடங்கிக் கிடக்க வேண்டும் என்றிருந்த நிலை மாறினாலும், அவர்கள் எதையெல்லாம் செய்யக் கூடாது என்ற கண்ணோட்டம் மட்டும் மாறவில்லை.

அவர்கள் மது அருந்துவதையும், புகைப்பதையும் சரியென்று கூறவில்லை. ஆனால் பெண்கள், தங்கள் வாழ்க்கை துணையைத் தேர்ந்தெடுப்பதில், இந்த சமுதாயம் மட்டுமல்லாது, அவளது குடும்பமும் தவறான கருத்துக்களையே கொண்டுள்ளது. தங்களது மகள் யாரையாவது காதலிக்கிறாள் என்றால், உடனே பதறிப்போய், அவளை  வேறு ஒருவனுக்கு  அவசர அவசரமாக திருமணம் செய்துவைத்துவிடுகின்றனர்.

பெற்றோர்கள் பார்க்கும் இந்த மாப்பிளை, தங்கள் மகளுக்குப் பொருத்தமானவனா, இருவரும் இணைந்து, இனிய இல்லறத்தை அமைக்க முடியுமா என்றெல்லாம் யோசிப்பதில்லை. எல்லாம் காலப்போக்கில் சரியாகிவிடும் என்று தட்டிக் கழித்துவிடுகின்றனர். இதனால், தங்கள் எதிர்பார்ப்பு பூர்த்தியாகாத பெண்கள், தங்களுக்குத் தெரிந்த வழிகளை தேடிக்கொள்கின்றனர்.

ஒரு பெண் காதலிக்கிறாள் என்றால், உடனே அவளை எதோ தேசத் துரோக குற்றம் செய்ததுபோல் கண்டிக்காமல், அவளுக்கு முதலில் விஷயத்தின் தீவிரத்தை புரிய வைக்க வேண்டும். அவளது காதலன் எப்படிப் பட்டவன், அவன் மீது என்ன எதிர்பார்ப்புகொண்டிருக்கிறாள், இருவருக்குமான உறவு எப்படிப் பட்டது, இருவரும் இணைந்தால், இவர்கள் வாழ்க்கை எப்படி இருக்கும் என்ற விஷயங்களை பெற்றோர் ஆராய்ந்து, அதனை பக்குவமாக தங்கள் மகளுக்குப் புரிய வைக்க வேண்டும். இது அவர்களது கடமை. இந்த இடத்தில், அவள் சிறு குழந்தை, அவளுக்கு என்ன தெரியும் என்ற எண்ணம் இருக்கக் கூடாது.

பெற்றவர்கள் தங்கள் இந்தக் கடமையிலிருந்து தவறும்போது, கள்ளக் காதல் போன்ற தவறு ஏற்படுகிறது.

பெண்களின் இன்றைய முன்னேற்றம், ஆண்களுக்கு நிகராக, அவர்கள் சம்பாதிக்கிறார்கள். சில குடும்பங்களில், ஆண்களைவிட, பெண்களே அதிகம் வருமானம் பெறுகின்றனர். இதனால், சில பெண்கள் தவறான் எண்ணம் கொண்டு, தாங்கள்  சொந்தக் காலில் நிற்பதாகவும், யாருடைய துணையும் தங்களுக்குத் தேவையில்லை என்றும் நினைக்கின்றனர். இதனால், கணவன், மனைவி, குழந்தைகள் என்ற குடிம்ப அமைப்பை விட்டு வெளியே வந்துவிடுகின்றனர்.

ஒரு குடும்பம்  என்பது, அனைவரின் பங்களிப்புடனும் இயங்கக் கூடியது. எந்தவொரு தனி நபருடைய செயலாலும் நடப்பதில்லை. பணத் தேவைகளை பூர்த்தி செய்ய வேண்டியது கணவனின் கடமை. அதனை மனைவி செய்யக் கூடாது என்றில்லை. ஆனால் அதற்காக குழந்தைகளை அரவணைத்து வளர்த்து, கணவனின் வருமானத்தையும் குடும்பத்தையும் நிர்வகிப்பதையும் மறந்து விடக்கூடாது. அப்படி மறக்கும்போது, குழந்தைகளின் எதிர்காலம் பாதிக்கப் படுவதோடு, குடும்பத்தின் வருமானமும், சேமிப்பும் தடம் மாறி, குடும்பம் நிலைகுலைந்து போகக்கூடும்.

ஆவதும் பெண்ணாலே; அழிவதும் பெண்ணாலே. இதனை பெண்களும், அவர்களது பெற்றோரும் உணர்ந்து செயல்பட்டால், பெண்களின் நிலையோடு குடும்ப வாழ்க்கையும் முன்னேறி, ஆரோக்யமான சமுதாயம் ஏற்படும்.

இந்தியக் கனவு

"விரைவில் இந்தியா வல்லரசாகும்". விஞ்ஞானிகள் முதல் வட்டச் செயலாளர்கள் வரை பேட்டிகளிலும், மேடைகளிலும் முழங்கும் கோஷம் இது. இன்று நேற்றல்ல, இருபது ஆண்டுகளுக்கும் மேலாக சொல்லப்படும் விஷயமிது.

உண்மையில் இந்தியா வல்லரசாகுமா? இத்தனை ஊழல்கள், ஜாதிச் சண்டைகள், மதக் கலவரங்கள், சிகப்புத் தீவிரவாதம் எனப்படும் மாவோயிஸ்டுகளின் தாக்குதல், இத்தனையையும் மீறி, இந்தியா வல்லரசாக சாத்தியமுள்ளதா? இந்தக் கேள்விகளை பலரும் கேட்டுக்கொண்டிருக்கும் நிலையில், வரலாற்று ஆய்வாளர், ராமச்சந்திர குஹா, அவர்களின் கருத்து சிந்திக்க வைக்கிறது.

பத்திரிகை ஒன்றிற்கு அளித்திருந்த பேட்டியில், இந்தியா வல்லரசாவது குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு, "இந்தியா வல்லரசாகாது, நொறுங்கியும் போகிறது" என்று கூறியருந்தார். இந்தியா வல்லரசாவது பற்றிய அவரது கருத்தைக் கேட்டபோது, "என்னுடைய சிந்தனை வேறுமாதிரியானது. நான் இந்தியா அமைதியாக இருக்க வேண்டுமென்று விரும்புகிறேன்" என்று பதிலளித்திருந்தார்.

அவரது இந்த சிந்தனை, என்னை சிந்திக்க வைத்தது.

வல்லரசாகப் போகிறோம் என்பது, மக்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்தவும், தேசம் வளர்ச்சிப் பாதையில் சென்றுகொண்டிருக்கிறது என்று உலகிற்கு உணர்த்தவும் சொல்லப்படுகிறது.
ஆனால், இதன் அடிப்படையில் உள்ள அர்த்தம் என்ன?

அனைத்து துறைகளிலும், அம்சங்களிலும், முழுமையான வளர்ச்சியை அடைந்த, தன்னிறைவைப் பெற்ற தேசங்களுடன், இந்தியா ஒப்பிடப்படுகிறது. இந்த தேசங்களின், அதாவது வல்லரசுகள் என்று சொல்லப்படும், சொல்லப்பட்ட நாடுகளின் நிலையை நாம் ஆராய வேண்டும்.

இன்றைய உலகில் வல்லரசு என்றால், பால்லிக் குழைந்தை கூட சொல்லும் பெயர் அமெரிக்கா. பொருளாதாரம், ராணுவம், நிலையான அரசியல், என்று அத்தனை அம்சங்களும் நேர்த்தியாக அமைந்திருக்கும் தேசம். ஆனால் உலக அரங்கில் அமெரிக்காவிற்கு இன்று கிடைத்திருக்கும் பெயர்?

சர்வதேச தாதா. வட்டார வழக்கில், விவரமாக சொல்வதென்றால், கட்டப்பஞ்சாயத்து செய்யும் நாடு.

இந்தப் பெயர் வரக் காரணம், உலகிலுள்ள அனைத்து தேசங்களையும், கண்காணித்து, அங்கு ஏற்படும் சிக்கல்களுக்கும், குழப்பங்களுக்கும் தீர்வு சொல்லும் வகையில் உதவி என்ற பெயரில், பணம் முதல் ஆயுதம் வரை அனைத்தையும் வழங்குவது. அவசியம் ஏற்பட்டால், இருக்கும் அரசைக் கவிழ்த்துவிட்டு, தனக்கு சாதகமான அரசாங்கத்தை அமைப்பது.

இது போன்ற செயல்களில் இவர்கள் ஈடுபடக் காரணம்? உலக நாடுகளுக்குத்  தான் ஒரு வல்லரசு என்ற தன் பிம்பத்தை காப்பாற்றிக்கொள்ள வேண்டும், அவர்கள் தன்னைப் பார்த்து பயந்து மரியாதை செலுத்த வேண்டும். என்ற எண்ணம். இந்த எண்ணத்தில் இவர்கள் செய்த காரியங்கள், இவர்களுக்கே வினையாகி நிற்கிறது.

மத்தியக் கிழக்கில், தங்களுக்கு வலுவான அடித்தளம் அமைக்க இவர்கள் மூட்டிவிட்ட தீவிரவாதம் எனும் நெருப்பு, இவர்களையே தாக்கி, இன்று உலகம் முழுதும் பரவி அச்சுறுத்திக்கொண்டிருக்கிறது.

இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில், உலகின் மாபெரும் வல்லரசாக கருதப்பட இங்கிலாந்து, இன்று சந்தித்து வரும் பிரச்னைகளும் கொஞ்சநஞ்சமல்ல. அமெரிக்காவுக்கு இணையாக அவர்களது செல்வாக்கைக் காப்பாற்றிக்கொள்ள முடியாமல், இன்று அமெரிக்காவிற்கு ஆதரவான நிலையை எடுத்து, பல நாடுகளின் கேட்ட பெயரை சம்பாதித்திருக்கிறது.

இன்று அமெரிக்கா, இங்கிலாந்து போன்ற நாடுகளின் நிலை, எந்த நேரத்தில், எந்த இடத்தில், தீவிரவாதிகள் தாக்குவார்களோ, என்ற பயத்தோடு, நாம் மிகவும் பாதுகாப்பாக இருக்கிறோம் என்ற தவறான நம்பிக்கையை மக்களுக்கு அளித்து, பதட்டமான வாழ்க்கை நிலையாக இருக்கிறது.

இதுபோன்ற ஒரு நிலையை இந்தியா அடைய வேண்டுமா?

வல்லரசாக வேண்டாம், நல்லரசாக இருந்தால் போதும் என்ற கோஷங்கள் ஆங்காங்கே ஒலிப்பதன் அர்த்தம் இது தான்.

நமது வளர்ச்சி இந்த தேசங்களைப்போன்று இருக்க வேண்டாம். கிட்டத்தட்ட தேசத்தையே உருக்குளைதுவிட்ட அணுகுண்டுத் தாக்குதலிலுருந்து, பீனிக்ஸ் பறவை போல, எழுந்து வந்திருக்கும், ஜபனைப் போன்றதாக இருக்கட்டும்.

மற்ற நாடுகள் நம்மைப் பார்த்து பயந்து, நம் வாழ வேண்டாம். இந்தியா போன்று வாழ்க்கை முறை இருக்க வேண்டும், தேசத்தின் வளர்ச்சியும்,அமைதியான அரசியல் நிலையும் அமைய  வேண்டும் என்று உலகிற்கு முன்மாதிரியாக இருப்போம்.

ரூம் போட்டு யோசிப்பாங்களோ?

ஆண்ட்ரூ கார்னேஜி. இரும்பு உருக்குத்  தொழிலில் புகழ் பெற்றவர்.உலகின் பெரும் பணக்காரர்களில் ஒருவராக திகழ்ந்தவர்.பிறருக்கு உதவும் மனப்பான்மையும் கொண்டவர். எத்தனையோ பள்ளிகள்,கல்லூரிகள், நூலகங்கள், இவரது உதவியை பெற்று வளர்ந்திருக்கின்றன.

ஆனால் அடுத்தவருக்கு உதவுவதிலும்,ஒரு கொள்கையை வைத்திருந்தார், கார்னேஜி. அதாவது, தன்னிடம் உதவி கேட்டு வருகிறவர்கள், தங்கள் முயற்சியில், சிறிதளவு நிதியைத் திரட்டியிருக்க வேண்டும். தன்னிடம் மட்டுமே முழு உதவியையும் எதிர்பார்க்கக் கூடாது என்பார். "ஒருவரை ஏணியில் ஏற்றிவிட நான் முன்வந்தால் மட்டும் போதாது. நாம் இந்த ஏணியில் ஏறி உயரே போகவேண்டும் என்ற எண்ணம் அவருக்கும் இருக்க வேண்டும்" என்று தன் கொள்கை விளக்கத்தைச் சொல்வார்.

இப்படிப்பட்ட கார்நேஜியிடம், உதவி கேட்டு, ஒரு இசைக்குழுவின் பொருளாளர் வந்திருந்தார்.புகழ்பெற்ற அந்த இசைக்குழு, தற்சமயம் கடனில் மூழ்கியிருந்ததால், அதைக் காப்பாற்ற நிதியுதவி தேவைப்பட்டது. இதனைச் செய்யக் கூடியவர், கார்நேஜிதான், என்று அவரிடம் வந்து உதவி கேட்டிருந்தார்.

கார்நேஜிக்கும் அந்த இசைக்குழுவின் மீது நல்ல மதிப்பு இருந்தது.உதவ ஒப்புக்கொண்டார். ஆனால் வழக்கம்போல தன் கொள்கைப்படி, அவர்கள், தங்கள் சொந்த முயர்ச்சியிலேயே, பாதித் தொகையை திரட்டி வர வேண்டும். மற்றொரு பாதித் தொகையை தானே தந்துவிடுவதாக கூறினார்.

என்னடா இது கைக்கு எட்டியது வாய்க்கு எட்டவில்லையே என்று நொந்துகொண்டு, அங்கிருந்து கிளம்பினார் அந்த பொருளாளர்.

அடுத்த நாள் அந்தப் பொருளாளர் மீண்டும் கார்நேஜியைப் பார்க்க வந்திருந்தார். ஒரு பாதித் தொகையை தாம் திரட்டிவிட்டதாகச் சொன்னார்.

ஒரே நாளில், இத்தனிப் பெரிய தொகையை இந்த நபர் திரட்டியது ஆச்சர்யமளித்தது. இதனைப் பெரிய தொகையை உடனே கொடுத்தவர் யார் என்று அறிய விரும்பி அந்த பொருளாளரிடம் கேட்டார்.

அது வேறுயாருமல்ல. தங்கள் மனைவி திருமதி கார்நேஜிதான் என்றார் அந்த பொருளாளர்.

எப்படியெல்லாம் யோசிக்கிறாங்க பாருங்க.

கள்வரே! கள்வரே!

நமக்கு கெடுதல் செய்தவனுக்கும் நல்லது செய்யணும்னு வள்ளுவர் சொன்னதா ஸ்கூல்ல  டீச்சர் சொல்லிக் குடுத்தாங்க. எனக்கு அன்னிக்கிருந்தே இதுக்கு அர்த்தம் புரியல. எனக்கு கெடுதல் செஞ்சவனுக்கு, நான் ஏன் நல்லது செய்யணும்? கூட படிக்குற பொண்ணு டிபன் பாக்சில இருந்து, சாப்பாட்ட தின்னுட்டு, என்னை டீச்சர்ட்ட  மாட்டிவிட்டவனுக்கு, நான் எதுக்கு நல்லது செய்யணும்? அப்போ எனக்கு இருந்த அறிவு அவ்வளவுதான். இந்த ஆள் சுத்த கிறுக்குத்தனமா எழுதியிருக்கர்னுதான் அப்போ நினைச்சேன்.
 
ஆனா பெரியவனான பிறகு, வேற பெரிய மனுஷங்களும் இதையே சொல்றாங்கன்னு படிச்சப்போ, நாமதான் சரியா புரிஞ்சுக்கலைன்னு தோனுச்சு. சரி இது என்னதான் விஷயம் பார்த்துருவோம்னு, கொஞ்சம் தத்துவ புத்தகங்கள் படிக்க ஆரம்பிச்சேன். ஆனா அதுல மெய்ஞானம், வேதாந்தம், சித்தாந்தம்னு என்னென்னவோ சொல்லியிருந்தாங்க.என்னடா இது, இதுக்கு ஸ்கூல்ல படிச்சதே பரவாயில்லையேன்னு  நினைச்சேன்.

நல்ல புரியறமாதிரி நறுக்குன்னு யாரும் சொல்லலியானு தேடுனப்போ தான், சூபி கதைகள் கிடைச்சது. பெரிய பெரிய விஷயங்களையெல்லாம், சும்மா நறுக்குன்னு புரியற மாதிரி சுருக்கமா சொல்லியிருந்தாங்க. அத படிச்சப்புறம்தான், இந்த பெரியவங்கல்லாம் என்ன சொல்ல வர்றாங்கனு கொஞ்சம் புரிஞ்சது.

அதுல சொன்ன ஒரு கதைலதான், ஸ்கூல்ல படிச்ச அந்த விஷயத்துக்கு அர்த்தமே புரிஞ்சது.

ஒரு நாள், எந்த வீட்டுக்குள்ள நுழையலாம்னு பாத்துக்குட்டே வந்த ஒரு திருடனுக்கு, ஊர் எல்லையில ஆத்தங்கரை ஓரத்துல இருந்த ஒரு குடிசை கண்ணுல பட்டுச்சு.கதவு வேற தொறந்துருந்துச்சா, நேரா உள்ள நுழைஞ்சுட்டான்.

உள்ள எதாவது கிடைக்குமான்னு பார்த்தான். ஆனா அந்த குடிசைக்குள்ள ஒண்ணுமே இல்ல.என்னடா இது? இந்த குடிசைக்கு சொந்தக்காரன் சரியான பிச்சைக்காரனா இருப்பான் போலருக்கேன்னு நினச்சுட்டிருந்தப்போ, அவன் மேல ஒரு வெளிச்சம் விழுந்துச்சு.

பதறிப்போய் திரும்பிப் பாத்தபோ , ஒரு பெரியவர் கைல விளக்கோட நின்னுட்டுருந்தார்.

"இருட்டுல என்னப்பா தேடுற?" னு சாதாரணமா கேட்டவரு, "கதவோரமாதான தூங்கிட்டுருந்தேன், நானே உனக்கு வீடு பூராவும் சுத்திக் காட்டியிருப்பேனே?" னு அவன் பக்கத்துல வந்தாரு.

என்னடா இந்த ஆள் சுத்த பைத்தியக்காரனா இருப்பான் போலருக்கேன்னு நினைச்சாலும், திருடனுக்கு அவர் குரல்ல இருந்த இனிமையும், அப்பாவித்தனமும் அவன என்னமோ செஞ்சுச்சு.முன்ன பின்ன தெரியாதவன்கிட்ட, யார் நீ? எதுக்கு வந்தனு மிரட்டாம், எதோ சொந்தகாரன பாத்ததுபோல குசலம் விசாரிக்கிரானேனு "நான் யார்னு தெரியுமா? நான் திருடன்" னு அதிகாரமா சொன்னான்.

"அதுனால என்னப்பா? ஒவ்வொருத்தரும் வாழறதுக்கு  எதோ ஒன்னு செய்யனுமில்ல? நீ திருடுற, அவ்வளவுதான். சரி வா நானே இந்த வீட்ட உனக்கு சுத்திக் காட்டுறேன். இங்க நான் முப்பது வருஷமா இருக்கேன். என் கண்ணுல எதுவும்பட்டதில்ல. இப்போ உனக்கு எதாவது பொருள் தெரிஞ்சா சொல்லு, நாம் பங்காளிகலாயிடுவோம்" னு இயல்பா சொன்னார்.

என்னடா இது வம்பாபோச்சு? எப்படியாவது இவர்கிட்ட்யிருந்து தப்பிச்சு போய்டனும்னு அவன் நகர்ந்தப்போ

"நில்லுப்பா, நீ இப்படி வெறும் கையேடு போகக்கூடாது. இந்தா இதை எடுத்துக்கோ" அப்படின்னு அவர் போத்தியிருந்த கம்பளிய கொடுத்தார். அவருகிட்ட இருந்த ஒரே பொருள் அதான்.

"என்னய்யா இது நன் ஒரு திருடன். எனக்குபோய் இதைக் கொடுக்குறீங்களே?" னு குழம்பிப் போய் கேட்டான் திருடன்.

"அட அதனால் என்னப்பா? எல்லாரும் ஏதோவொரு தொழில் பண்றாங்க. நீ இதப் பண்ற. என் ஆசீர்வாதத்தோட, நீ உன் தொழில கண்ணும் கருத்துமா செய். யாருகிட்டயும் மாட்டிக்காத" அப்படின்னு சொல்லி கம்பளிய அவனுக்குக் கொடுத்தார்.

இவருகிட்டருந்து தப்பிச்ச போதும்னு, அந்த திருடன், கம்பளிய போத்திக்கிட்டு வாசலைப் பாத்து நடந்தான்.

திருடன் அரண்டு போய்ட்டான். அவன் வாழ்நாள்ல அப்படியொரு அதட்டல் கேட்டதில்ல.திரும்பி அவருகிட்ட வந்தான்.

"வாழ்க்கைல கொஞ்சமாது நல்ல பண்புகளா கத்துக்கோ. நான் உனக்கு கம்பளி கொடுத்துருக்கேன், இவ்வளவு நேரம் பழகியிருக்கேன், ஒரு நன்றி கூட சொல்லாம் போற?" னு ஒரு அரட்டு அரட்டுனாறு.

"நன்றிங்கய்யா" னு சொல்லிட்டு வாசப்படிய தாண்டுனவன்கிட்ட, "கதவு திறந்துருந்துதுன்னு உள்ள வந்தெல்ல, போகும்போது மூடிட்டு போ. குளிர் காத்து அடிக்குதுள்ள. நீ திருடனாயிருக்குறதுல எனக்குப் பிரச்சனையில்ல. ஆனா பழக்க வழக்கங்கள்ள நான் ரொம்ப கண்டிப்பானவன் தெரிஞ்சுக்கோ" னு அவர் பேசுனத கேட்ட திருடன், இப்படி ஒரு மனுஷனான்னு நினைச்சுட்டே கதவை சாத்திட்டு நடந்தான்.

அடுத்த கொஞ்ச நாள் அவனுக்கு அந்த பெரியவர் பத்திய நினைப்பே இருந்துச்சு. அவரப் புரிஞ்சுக்கவே முடியலையேனு நினச்சவன், அவரைப்பத்தி விசாரிச்சதுல, அவரு ஒரு சூபி ஞானின்னு தெரிஞ்சுது.

அப்பறம் கொஞ்ச நாள்ல, அந்த திருடன் மாட்டிகிட்டான். அவனி நீதிமன்றத்துல நிப்பட்டினப்போ, "உன்ன நல்ல தெரிஞ்சவங்க யாராவது இந்த ஊர்ல இருக்காங்களா? னு நீதிபதி கேட்டார்.

அந்த ஊர்ல நிறையப் பேருக்கு அவனைத் தெரியும்னாலும், யாரும் ஒத்துக்க மாட்டாங்க. ஒரு திடனத் தெரிஞ்சவன்னு யாரு சொல்வாங்க? யாரு தனக்காக வந்து சாட்சி சொல்லுவாங்கனு அவன் யோசிச்சப்போ, அவனுக்கு, அந்த சூபி ஞானி ஞாபகம் வந்துச்சு. அவர் பேரைச் சொன்னான்.

இதைக் கேட்ட நீதிபதிஅதிர்ச்சியோட , "நீ சொல்றது மட்டும் பொய்யா இருந்தா உன்ன கடுமையா தண்டிப்பேன்" னு சொல்லி அந்த பெரியவர அழைச்சுட்டு வரச் சொன்னார்.

நீதிமன்றத்துக்கு வந்த பெரியவர்கிட்ட "இவனை உங்களுக்குத் தெரியுமா" னு நீதிபதி கேட்டார்.

"தெரியுமாவா? இவர் என் நண்பர்.ஒரு நாள் ராத்திரி இவர் என் வீட்டுக்கு வந்தார், அன்னைக்கு குளிர் அதிகமா இருந்துச்சு. அதுனால இவருக்கு என் கம்பளியைக் கொடுத்தேன்" அப்படின்னு சொன்னாரு.

"இவரு உங்க நண்பர்னு சொல்றிங்க. ஆனா இவர் மேல மத்தவங்க திருட்டுக் குற்றம் சுமத்துராங்களே?" னு நீதிபதி கேட்டார்.

"இருக்காது. இவர் ரொம்ப இனிமையானவரு. என்கிட்டே கம்பளிய வாங்கிட்டு நன்றி சொன்னார். வீட்டைவிட்டு போகும்போது, எனக்குத் தொந்தரவு தராம, கதவ சாத்திட்டு போனாரு. அருமையான நண்பர்"

"ஐயா நீங்களே இவரப் பத்தி இவளோ உயர்வாக சொல்றதுனால இவர விடுவிக்குறேன்" னு சொல்லி அந்த திருடன விடுதலை பண்ணுனாரு நீதிபதி.

விடுதலையான திருடன், அந்த ஞானி பின்னாடியே போனான். இதைப் பார்த்த ஞானி" என்னப்பா இது? எதுக்கு என் பின்னாடி வர்ற?" னு கேட்டார்.

"நீங்க என்ன காப்பத்திருக்கீங்க. என்ன உங்க நண்பன்னு சொல்லிருக்கிங்க. இனிமையானவன்னு சொல்லியிருக்கிங்க. இதுவரை என்னை யாரும் அப்படி சொன்னதில்ல. இனி உங்களோடதான் வரப் போறேன். உங்ககிட்ட இருக்குற இந்த பக்குவம், எல்லாத்தையும் வித்த்யாசமா பாக்குற இந்த குணம், இதெல்லாம் நானும் கத்துக்கணும். நானும் உங்களைப் போல ஆக வேண்டும். அதான் உங்க கூட வரேன்" னு சொன்னான்.

இந்தக் கதைய விளக்கி, நிறைய சித்தாங்களும், தத்துவங்களும் சொல்லியிருந்தாங்க. நான் அதையெல்லாம் இங்க சொல்லப் போறதில்ல. (பின்ன எனக்கு புரிஞ்சாத் தான நான் சொல்ல முடியும்?) முக்கியமா கவனிக்க வேண்டிய விஷயம் (அதாவது எனக்குப் புரிஞ்சது) அவன் ஒரு திருடன்னா இருந்தாலும்,  அந்த சூபி ஞானி அவன எப்படிப் பாத்தாரு?

அவருகிட்டயிருக்குரத  திருட வந்தவன் கிட்ட கூட எவ்வளவு அன்பா  நடந்துக்கிட்டாரு? தன்கிட்டயிருந்த ஒரே சொத்தான கம்பளியையும் அவனுக்குக் கொடுத்தாரு.

இதை படிக்கும்போதுதான் சின்ன வயசுல படிச்ச திருக்குறளுக்கு அர்த்தமே புரிஞ்சுது. ஒரு திருக்குறளைப் புரிஞ்சுக்குரதுக்கே இவளவு நாலாகியிருக்குன்னா, வாழ்க்கைல நம் எவ்வளவு விஷயங்களப் புரிஞ்சுக்காம இருக்கோம்?

தன்கிட்ட திருட வந்தவன் அன்பா நடத்தி, அவன தன் நண்பன்னு சொல்லி தண்டனைலருந்து காப்பாதுனதுனால, அவன் திருட்டு தொழில விட்டுட்டு திருந்தி, அவருகூடவே, சிஷ்யனா, ஞானத்தைத் தேடி கிளம்பிட்டான்.

அவரு மட்டும் அவன திருடன்னு சொல்லியிருந்தா, அவன் திருடனாவே தான் இருந்திருப்பான். கெடுதல் செய்ய வந்தவனுக்கு நல்லது செஞ்சதாலதான், அவன் திருந்தி அவருக்கு சீடனாகவே வந்தான். இதைத் தான், மன்னிக்கிற பண்புன்னு பெரியவங்க சொல்றாங்க. ஒருவேளை தண்டிக்கப்பட்டிருந்தா அவன் திருடனாவே இருந்திருப்பான். அந்த ஞானி வழங்கிய மன்னிப்புதான் அவன திருந்தி வாழ  வைச்சது.

தப்பு செய்றவங்களுக்கு தண்டனை கொடுக்குறதே, அவங்க செஞ்ச தப்ப உணரனும், திரும்ப செய்யக்கூடாதுன்னு தான். ஆனா அந்த தண்டனையலேயே அவங்க மறுபடியும் தப்பு செயவ்வாங்கன்னா அதனால என்ன பிரயோஜனம்?

ஆனால் மன்னிக்கும்போது, அவன் செஞ்ச தவற அவனே உணர ஒரு சந்தர்ப்பம் கொடுக்குறோம். அதைப் புரிஞ்சுக்கிடான்னா, எந்த சூழ்நிலைலயும், அவன் தப்பே செய்ய மாட்டான்.

இதுதான் வாழ்க்கையோட அடிப்படை தத்துவம்(நான் கூட கொஞ்சம் தத்துவம் பேச ஆரம்பிச்சுட்டேன்ல?). பிறரிடம் அன்பு செலுத்தும்போது, உலகத்தையே நாம் மாற்றிவிடுகிறோம்.

அன்பு மட்டுமே நிலையானதாக இருக்கும். அதுவே வலிமையானதாகவும் இருக்கும்.

வாழ்வின் ஒளி

ஜென் குரு ஒருவர், சீடர்களுக்கு போதனை செய்துகொண்டிருந்தார்.

"பிறப்பைப் பொறுத்தவரை, எல்லா உயிர்களும் சமமே. பசி, தூக்கம், தாகம், மரண பயம் இவை எல்லா உயிர்களுக்கும் பொதுவானவை. ஒரு நாள் என்பது, இரவும் பகலும் சேர்ந்ததுதான். இரண்டும் மாறிவருவதுதான், கால ஓட்டம்.அதுபோலவே, வாழ்க்கை என்பது, இன்பம் தும்பம், பிறப்பு, இறப்பு இரண்டும் சேர்ந்ததே."

சீடர்கள் குருவின் உபதேசங்களை கூர்ந்து கவனித்துக் கேட்டுக்கொண்டிருந்தனர்.

"இரவு வருகிறது, மெல்ல அது கலைந்து, பொழுது புலர்கிறது.அந்தச் சமயத்தில், எந்தவொரு நொடியில் பொழுது புலர்ந்துவிட்டது என்பதை நீ அறிவாய்? குரு சீடர்களை நோக்கிக் கேட்டார்.

"ஒரு மிருகம் தொலைவில் நிற்கும்போதே, அது கழுதையா? குதிரையா? என்று காண முடிந்தால், வெளிச்சம் வந்துவிட்டது என்று புரிந்து கொள்ளலாம்." என்றான் ஒரு சீடன்.

குரு, மறுத்து தலையசைத்தார்.

"தூரத்திலிருக்கும் ஒரு மரம், ஆல மரமா? அரச மரமா? என்று சொல்லமுடியுமானால், அந்த நேரம் வெளிச்சம் வந்துவிட்டது என்று அறியலாம்" என்றான் மற்றொரு சீடன்.

அதையும் மறுத்தார் குரு.

சீடர்கள் குருவையே விளக்கம் தருமாறு வேண்டினர்.

"எந்தவொரு மனிதனைக் கண்டாலும், இவன் என் சகோதரன், எந்தவொரு பெண்ணைக் கண்டாலும், இவள் என் சகோதரி என்ற எண்ணம் உனக்கு ஏற்படுகிறதோ, அப்போதே உனக்கு வெளிச்சம் கிடைத்ததாக அர்த்தம். அதுவரை, உச்சி வெயில் கூட காரிருளே." என்று விளக்கினார் குரு.

இது தான் வாழ்க்கையின் அடிப்படைத் தத்துவம்.

 பிறப்பில்லா முக்தியை அடைய முதல் தகுதியே, சக மனிதனை, சகோதரத்துவத்துடன், பார்ப்பதுதான்.

உலகிலுள்ள அத்தனை மனிதர்களையும், சகோதர சகோதரிகளாக பார்த்தல், வெறுப்பையும், துவேஷத்தையும், ஒழித்து அன்பை மலரச் செய்யும்.

அனைத்து உயிரக்ளிடத்தும், அன்பு காட்டுங்கள் என்பதுதான், அனைத்து மதங்களும், போதிக்கும், விஷயம்.

இறைவனைத் தேடி அலைகிறேன், இறைவனுக்காக செய்கிறேன் என்று சொல்பவர்களெல்லாம், அந்த இறைவன், தங்களுக்குள்ளேயே இருக்கிறன் என்பதை உணர்வதில்லை. இருக்கும் இடத்தைவிட்டு இல்லாத இடம் தேடி அலைகிறார்கள்.

சக மனிதரிடம் அன்பு செலுத்தாதவர்களுக்கு, இரவும் பகலும், வெறும் கால மாற்றகளாகவே இருக்கும். பிறப்புக்கும் இறப்புக்கும் இடையே ஆன வாழ்க்கையை அவர்கள் உணர்வதில்லை. இவர்கள் அனைவரும் இருளிலேயே வாழ்வைக் கழிக்கின்றனர். ஒளி என்பது நமக்குள்ளே ஏற்பட வேண்டும். அது ஏற்படும்போதுதான், நம் மனிதர்களாவோம். அதுவரை, மற்ற விலங்கினங்களுக்கும்  நமக்கும் பெரிய வித்தியாசமில்லை.

ரக்ஷா பந்தன் - ரட்சிக்கும் பந்தம்!


தேசம் முழுவதும் நேற்று ரக்ஷா பந்தன் கோலாகலமாக கொண்டாப்பட்ட செய்திகளால் மகிழ்ந்திருந்தபோது, உ.பி.இல் நடந்த ஒரு சம்பவம் மட்டும் நெகிழ வைத்தது.
உத்திர பிரதேச மாநிலமான கான்பூரில் வசித்து வருபவர், மனிஷ் பேகால். இவரது மகன் அனுஜ், அப்லாஸ்டிக் அனிமியா, எனும் விசித்திர நோயால் பாதிக்கப்பட்டுள்ளார்.

பதின்னான்கு வயதே நிரம்பிய இந்த சிறுவனுக்கு, எலும்புகளில் ரத்த செல்கள் போதிய அளவில் உற்பத்தியாகாமல் தடைப்பட்டுள்ளது. மேலும், இந்த நோயினால் ஏற்படும் இரத்தப் போக்கும் எளிதில் நிற்காது. ஜலதோஷம் பிடித்தாலோ, மூக்கில் லேசான ரத்தக் கசிவு ஏற்பட்டாலோ, மிக ஆபத்தான நிலைக்குகொண்டு சென்றுவிடும்.

இத்தகைய கொடூரமான நோயால் பாதிக்கப்பட்டுள அனுஜ், படுத்த படுக்கையாக கிடக்கிறார். அவனைப் பரிசோதித்த டாக்டர்கள், எலும்பு மாற்று அறுவை சிகிச்சை செய்ய வேண்டுமென்றும், அதற்கு 20 லட்சம் ருபாய் செலவாகும் என்றும் கூறிவிட்டனர்.

மோட்டார் மெக்கானிக்கான, மனிஷால் அவ்வளவு பெரிய தொகையை திரட்ட முடியாததால், பலரிடம் உதவி வேண்டினார். சில தன்னார்வக் குழுக்களும், நாடகக் குழு ஒன்றும் இவர்களுக்கு உதவ முன்வந்துள்ளது. ஆனால், இந்த சிறுவனின் சகோதரிகளின் செயல்தான், நெகிழ்ச்சியாக இருந்தது.

ஸ்ரீ சிதி (13), மஸ்கான் (9), இருவரும் அனுஜின் தங்கைகள். தங்கள் அண்ணன் நோயால் பாதிக்கப்பட்டிருப்பது கண்டு மிகவும் வருந்தினர். அவனை எப்படியும் அந்த நோயின் பிடியிலிருந்து விடுவித்தே தீருவது என்று முடிவு செய்தனர். அதுவே அவனுக்கு சிறந்த ரக்ஷா பந்தன் பரிசாக அமையும் என்று கருதினர்.

இதற்காக அந்த இரு சிறுமிகளும், பள்ளி முடிந்ததும், கான்பூரின் அதிக ஜன நடமாட்டமுள்ள தெருக்களில் அமர்ந்து, வருவோர் போவோருக்கெல்லாம் ஷூ பாலிஷ் போடத் துவங்கினர். நோயால் உயிருக்குப் போராடிக்கொண்டிருக்கும், தங்கள் சகோதரனைக் காப்பாற்ற உதவுமாறு, ஒரு அட்டையையும் எழுதி அருகில் வைத்துக்கொண்டனர். அந்த வழியாக செல்லும் பலரும், இதைக் கண்டு இவர்களுக்கு உதவி செய்ய முன்வந்துள்ளனர்.

தங்கள் சகோதரனுக்காக இந்தப் பணியைச் செய்துவரும் இந்த சிறுமிகள், தங்கள் அண்ணன் விரைவில் குணமடைந்து விடுவானென்றும், இதுவே நாங்கள் அவனுக்கு கொடுக்கும் விலை உயர்ந்த ரக்ஷா பந்தன் பரிசு என்றும் கூறினர்

இந்த செய்தியைப் படித்தபோது மிகவும் நெகிழ்ச்சியாக இருந்தது. எந்த வேலையையும் செய்ய கெளரவம் பார்க்கும் இன்றைய நிலையில், இந்த சிறுமிகள், தங்கள் சகோதரனுக்காக, ஷூ பாலிஷ் போடுவது எத்தனை பெரிய விஷயம்? அதை விட முக்கியம், தங்கள் அண்ணன், நோய்வாய்ப்பட்டிருக்கிறான், அவனுக்கு உதவுங்கள் என்று பிச்சை எடுக்காமல், ஏதோவொரு வேலை செய்து, அதன் மூலம் பணம் பெற நினைக்கும் இவர்களது எண்ணம் மிக உயர்வானது.

இந்த பாசம்தான், இந்த போராடும் குணம்தான், இந்தியர்களை உலகின் மற்ற நாட்டவரிடமிருந்து வேறுபடுத்திக் காட்டுகிறது. உலகில் வேறு எந்த தேசத்திலாவது, அண்ணன் தங்கப் பாசம் இந்தளவுக்கு இருக்குமா என்று தெரியாது. அப்படியிருந்தாலும், அவை எல்லாவற்றையும்விட இந்தியர்களின் பாசமே சிறந்தது என்று என்னால் உறுதியாகக் கூற முடியும்.

சொத்துக்காக உடன் பிறந்தவர்களைக் கொலை செய்யும் இந்தக் காலத்தில், இந்த பிஞ்சு மனம் கொண்ட சிறுமிகளின் செயலில்தான் எத்தனை அன்பு! வளர்ந்துவிட்ட பின், அவ்வப்போது சில மனக்கசப்புகள் வந்தாலும், இத்தகைய உன்னதமான அன்பு மாறுவதில்லை. வெறுப்புகளும், கோபங்களும் மேலோங்கியிருந்தாலும், அடி மனதில், நம் பிரியத்திற்குரியவர்களின் மீதான நமது அன்பு, என்றும் மாறாது இருக்கும்.

இத்தகைய பாசம் இந்தியர்களிடம் காணப்படுவதற்குக் காரணம், நமது குடும்ப அமைப்பே.
சிறு வயதில் இதுபோன்ற வெள்ளந்தியான பாசத்துடன் இருந்தாலும், வளர, வளர, ஒரு இடைவெளி விழத் தொடங்கிவிடுகிறது. குடும்பம் பெருகும்போது, சில மனக்கசப்புகளும், சச்சரவுகளும், ஏற்படவே செய்கின்றன. ஆனாலும், அதையெல்லாம் கடந்து, நம் ஆழ்மனதில் அந்த அன்பு, என்றும் மாறாமல் இருக்கிறது. சரியான சமயங்களில் அதனை நாம் உணர முடிகிறது.

இத்தகைய பந்தங்களுக்கு, நம் சம்ப்ரதாயங்களும் காரணம். ஒரு பெண்ணை திருமணம் செய்து கொடுத்துவிட்டதொடு, அந்த குடும்பத்தின் கடமை முடிந்துவிடுவதில்லை. பெண்ணின் முதல் பிரசவம், அவளது தாய் வீட்டிலேயே நடக்க வேண்டுமென்பது, நமது சம்ப்ரதாயம். பெண்ணின் மறுபிறப்பு என்ற சொல்லக்கூடிய, பிரசவத்தின்போது, அவளது தாய் வீட்டார் அவளுக்கு உறுதுணையாக இருக்கிறார்கள். அது மட்டுமில்லாது, பிறந்த குழந்தைக்கு, பெண்ணின் உடன் பிறந்தவர்கள் செய்ய வேண்டிய கடமைகளும் இருக்கின்றன. இதுபோல திருமணத்தோடு, பெண்ணின் பிறந்த வீட்டு உறவு முரிந்துவிடுவதில்லை. அவளுக்கு ஒரு கஷ்டம் வரும்போதும் அரவணைக்கவும், அவளது மகிழ்ச்சியை பகிர்ந்து கொள்வதிலும் அவர்கள் உடனிருக்கிறார்கள்.

இதனாலேயே சகோதர உறவின் மகத்துவத்தை உணர்த்தும், ரக்ஷா பந்தன் பண்டிகையைக் கொண்டாடுகிறோம். இது போன்ற பண்டிகைகளின் நோக்கம், சகோரத்துவத்தை போற்றுவது மட்டுமல்ல, பெண்களின் மகத்துவத்தையும், அவர்களின் மீதான நமது மரியாதையையும் உணர்த்தவும்தான்.

மகாபாரதத்தில் எப்படி, திரௌபதிக்கு ஒரு ஆபத்து நேர்ந்தபோது, சகோதரனாகிய கிருஷ்ணன் வந்து காப்பாற்றினாரோ, அது போல, ஒவ்வொரு பெண்ணையும், நம் சகோதரியாக பாவித்து, அவளை பாதுகாக்க வேண்டும் என்பது போன்ற உயரிய பண்பாடுகள் கொண்ட தேசம், நம் தேசம்.

இதனால்தான், பல கலவரங்களும், வன்முறைகளும், நவீனத்துவம், மேற்க்கத்திய கலாச்சாரம் என்ற பெயரில் எண்ணற்ற சீர்கேடுகள் வந்தாலும் நம் பாரம்பரியம் நிலைத்து நிற்கிறது.

நிச்சயமாகச் சொல்ல முடியும், தீவிரவாதமும், இயற்கைச் சீற்றங்களும், உலகத்தை அச்சுறுத்தி வரும் நிலையில், சக மனிதனை நேசிக்கும் உயர்ந்த பண்பை, உலகம் முழுதும் பரப்பி, அழிவுகளிலிருந்து காக்கும் பணியை நம் தேசமே செய்ய முடியும்.

இத்தகைய உயர்ந்த பண்பாடுகளையும், பாரம்பரியத்தையையும் கொண்ட, தேசத்தில் பிறந்தது கண்டு நாம் நிச்சயம் பெருமை கொள்ளலாம்.

இதுக்குப் பேர்தான் சொந்த செலவில் சூனியம் வச்சிக்குறதா?

 ராபர்ட் மாக்ஸ்வெல், பிரிட்டனின் புத்தகப் பதிப்புத் துறையில், கொடி கட்டிப் பறந்தவர்.மிகவும் கண்டிப்புடனும், கட்டுப்பாடுடனும், தனது பதிப்பகத்தை நடத்தும் இவருக்கு, பிடிக்காத பழக்கமொன்று உண்டென்றால், அது புகைபிடிப்பதுதான். தனது நிறுவத்தில், அலுவலக வளாகத்தில், யாரும் புகைபிடிக்கக் கூடாது என்று உத்தரவு பிறப்பித்திருந்தார். இதனை மீறுபவர்கள் யாராக இருந்தாலும், நிச்சயம் தண்டிக்கப்படுவார்கள்.

ஒரு நாள் மாக்ஸ்வெல், தன் அலுவலக அறையை விட்டு வெளிய வந்தபோது, சற்று தூரத்தில் ஒரு நபர், புகை பிடித்துக்கொண்டிருந்தார். அவ்வளவுதான். மாக்ஸ்வெல்லுகு கோபம் தலைக்கேறியது.
 
நேராக அந்த நபரிடம் சென்றார்.

"இங்கு புகை பிடித்தால் என்ன தண்டனை தெரியுமா?" என்றார்

அந்த மனிதர் சற்றும் அசராமல், "தெரியாது" என்றார்.

"உன்னுடைய சம்பளம் எவ்வளவு?" என்றார் மாக்ஸ்வெல்.

"வாரத்திற்கு எழுபத்தியைந்து பவுண்ட்" என்றார் புகைபிடிதுக்கொண்டிருந்த நபர்.

மாக்ஸ்வெல் தன்னுடைய கோட் பையில் இருந்து முன்னூறு பவுண்ட்களுக்கான தாள்களை எடுத்தார்."இந்தா பிடி. இங்கு புகை பிடித்ததற்கான  தண்டனையாக உன் வேலை போய்விட்டது. இந்த ஒரு மாதச் சம்பளத்தை எடுத்துகொண்டு இங்கிருந்து ஓடிவிடு. என் கண் முன்னே நிற்காதே" என்று கத்திவிட்டு தன் அறைக்குள் புகுந்து விட்டார்.

புகைபிடித்துக்கொண்டிருந்த ஆள், எதுவும் பேசாமல், அந்த பணத்தை வாங்கிக்கொண்டு சென்றுவிட்டார்.

மாக்ஸ்வெல் பின்னர் தன் நிர்வாகிகளிடம் அந்த ஆளைப் பற்றி விசாரித்தார்.

அவன் நம் நிறுவனத்தில் வேலை செய்பவனல்ல என்றும், சரக்குகளை இறக்கி வைத்துவிட்டுப் போக வந்தவன் என்றும் பதில் வந்தது.

மாக்ஸ்வெல் தன்னைத் தானே நொந்துகொண்டார்.

மாக்ஸ்வெல்லின் கோபத்தால், அவருக்கு முன்னூறு பவுண்ட் நஷ்டமானது.

இதே நிலைதான் நமக்கும். நாம் சினத்தின் வசப்படும்போது, நமக்கு நாமே கேடு விளைவித்துக்கொள்கிறோம்.

நிர்வாகத்தில் கண்டிப்பு இருக்கலாம், ஆனால் அர்த்தமற்ற கோபமும், கண்மூடித்தனமான நடைமுறையும் கூடாது.

வாழ்க்கையில் நாம் கோபப்படும்போது, பல உன்னதமான மனிதர்களையும் இழக்க நேர்கிறது. மனைவியிடம் கோபம்கொண்டு பிரிந்தவர்கள் எத்தனை பேர் இருக்கிறார்கள்? கோபத்தால் நண்பர்களை இழந்தவர்கள் எத்தனை பேர்?

கோபத்தால் நாம் சாதிக்கக்கூடியது ஒன்றுமில்லை. ஆனால் இழப்பதற்கு நிரம்ப இருக்கிறது.

மூன்றாவது கை

வாழ்க்கையில் நாம் பலமுறை புரிந்துகொள்ள முயற்சித்தும், புரியாத விஷயங்கள், சிறு சம்பவங்களால் தெளிவாகிவிடுவதுண்டு . நம்பிக்கையின் சக்தியை பற்றி நான் முழுவதுமாக புரிந்துகொள்ள முயற்சித்தபோதும், அது போன்ற அனுபவமே ஏற்ப்பட்டது. பல முறை சிந்தித்திதும் புரிபடாத பல விஷயங்கள் இந்த குட்டிக் கதையைப் படித்தவுடன் தெளிவாக விளங்கிவிட்டது.

அந்த நாட்டில், தொடர்ச்சியாக பன்னிரண்டு வருடங்கள் மழை பொய்த்தது. நீர் நிலைகள் வற்றி, வறண்ட பூமியானது. பசியும், பஞ்சமும் மக்களை அழித்துக்கொண்டிருந்தது. அந்த நாட்டின் அரசன் அமைச்சர்களை அழைத்து ஆலோசித்தான். முன்பொரு சமயம் இத்தகைய நிலை வந்தபோது ஒரு முனிவரை அழைத்து வந்ததாகவும், அவர் காலடி பட்டவுடன் மழை பொழிந்ததாகவும், இந்த முறையும் அப்படியே ஆன்மீகவாதிகளை நாடிச் செல்லலாம் என்றும் ஆலோசனை வழங்கினர்.

இதைக் கேட்டு மகிழ்ந்த மன்னன், பல ஆன்மீக குருமார்களை அணுகினான். அவர்கள் அறிவுரைப் படி பிரம்மஞானி ஒருவரை அழைத்து வந்து 48 நாட்கள் தொடர்ந்து யாகமொன்றை நடத்த ஏற்பாடு செய்தான். யாகத்தின் இறுதி நாளில், மக்கள் அனைவரும் ஒன்று கூடி பிரார்த்தனை செய்ய வேண்டுமென்றும், அன்றே மழை பெய்யுமென்றும் சொல்லப்பட்டது.

ஊரின் மையப் பகுதியில் யாக சாலை அமைத்து யாகம் தொடங்கப்பட்டது. தேவர்களுக்கும், தேவதைகளுக்கும், உரிய மந்திரங்கள் சொல்லப்பட்டு, சம்பிரதாயப்படி வேள்வி நடத்தப்பட்டது.

யாகம் முடியும் நாள், மக்கள் கூட்டம் கூட்டமாக வந்தனர். மலை நேரம் நெருங்கியது. யாகமும் முடிந்தது. ஆனால் வானில் மருந்துக்குக்கூட மேகங்கள் இல்லை.

மன்னன் முகத்தில் கலக்கம். மகானின் முகத்தில் வேதனை. மக்களின் முகத்தில் அவநம்பிக்கை.

திடீரென குளிர்ந்த காற்று வீசியது. அடிவானில்,மேகக் கூட்டமொன்று புறப்படத் தொடங்கியது. அனைவரும் அந்தத் திக்கையே ஆவலுடன் நோக்கிக்கொண்டிருந்தபோது, தூரத்தில் ஒரு சிறுவன் ஓடி வருவது தெரிந்தது.

கையில் ஒரு குடையுடன் ஓடி வந்த அந்த சிறுவன், கூட்டத்தில் புகுந்து தன் தோழர்களுடன் நின்றுகொண்டான்.

"எங்கேடா போன? எங்களோட தான வந்துட்டு இருந்த?" என்று மற்ற சிறுவர்கள் அவனிடம் கேட்டனர்.

"உங்களோட வந்துட்டு இருக்கும்போது திடீர்னு ஒரு சந்தேகம் வந்துச்சு. இப்போ யாகத்துக்குத் தானே போறோம், அது முடிந்ததும் மழை பெய்யுமே, அப்போ எல்லாரும் நனஞ்சிருவோமே. அதான் வீட்டுக்கு ஓடிபோய் குடை எடுத்துட்டு வந்தேன்."

அவன் சொல்லி முடிக்கவும் அடை மழை தொடங்கவும் சரியாக இருந்தது.

வியப்புடன் இதனைப் பார்த்துகொண்டிருந்த, யாகத்தை நடத்திய மகான், "மன்னா, உண்மையில் இப்போது பெய்யும் மழை நாம் செய்த யாகத்துக்காகவோ, உனக்காகவோ, இந்த மக்களுக்காகவோ பெய்யவில்லை. இந்தச் சிறுவனுக்காகப் பொழிகறது. இந்த யாகத்தால் பெய்யாத மழை, இந்த சிறுவனின் நம்பிக்கையால் பெய்கிறது" என்றார்.

"இங்கு கூடியிருக்கும் அனைவரும், அரச ஆணைக்குப் பணிந்தும், என்னதான்  நடக்கிறது பார்ப்போம் என்ற எண்ணத்தாலுமே குழுமியிருக்கிறார்கள். மழை பெய்யும் என்ற நம்பிக்கை இவர்களிடத்தில் இல்லை. ஆனால், இந்தச் சிறுவனிடம் அது இருந்தது. அதுவே இந்த மழையை அழைத்து வந்திருக்கிறது." என்று அந்த சிறுவனைப் புகழ்ந்தார்.

நம்பிக்கை என்பது மஹா சக்தி. அந்த சக்தியாலேயே இந்தப் பிரபஞ்சம் இயங்கிக்கொண்டிருக்கிறது. நம் வாழ்க்கையின் ஆதாரமே நம்பிக்கை தான். அடுத்த நிமிடம் என்ன நடக்கும் என்று தெரியாத நிலையில், நல்லாதாகவே நடக்கும் என்ற நம்பிக்கையில் வாழ்கிறோம்.

கடவுள் என்பதே நம்பிக்கைதான். அவர் எப்படியிருப்பார், எங்கிருப்பார் என்று யாரும் பார்த்தது கிடையாது. ஆனால் இப்படித் தானிருப்பார் என்று நம் நம்பிக்கைக்கு உருவகம் கொடுத்து வணங்குகிறோம்.

யாகங்களில் சொல்லப்படும் மந்திரங்கலானது, பல அந்தணர்கள் ஒன்று கூடி, ஒருமித்த மனத்துடன், ஒரே நோக்கத்துடன் ஜெபிக்கப்படுவது. அவர்களின் நோக்கமே நம்பிக்கையாக, மந்திர ஒளியாக பலமடங்கு பெருகி, எதனை வேண்டி யாகம் நடத்துகிறோமே, அதனை நிறைவேற்றிவைக்கிறது.

இந்த நம்பிக்கையே நம்மிடமிருந்து வெளிப்படும் கதிர்களாக, நம்மையும், நம்மைச் சுற்றியுள்ள உலகத்தையும் இயக்குகிறது. நம் முயற்ச்சியில் வெற்றிபெறுவோம் என்று நினைத்தால், அந்த பாசிடிவ் உணர்ச்சி நம்மிடமிருந்து வெளிப்பட்டு, பிரபஞ்சத்தில் கலந்து, அத்தகைய சம்பவங்களே நடக்கின்றன.

நாம் கவலைகளால் பீடிக்கப்பட்டிருக்கும்போதும், ஏதோவொன்றுக்காக அஞ்சிக்கொண்டிருக்கும்போதும், அந்த சோக உணர்வுகள் வெளிப்பட்டு, மேலும் கவலைகளையே அளிக்கின்றன.இதனால்தான் பெரியவர்கள் எப்பொழுதும் நல்லனவற்றையே நினைக்க வேண்டுமென்று சொல்கின்றனர்.

வாழ்வில் வெற்றி பெறுவது எப்படி?, செல்வந்தராவது எப்படி?, தன்னம்பிக்கையுடன் செயல்படுவது எப்படி? என்று பல புத்தகங்களைப் படித்து நாம் பயனடைகிறோமோ இல்லையோ, இவற்றை எழுதியவர்கள், வெற்றியாளர்களாகவும், செல்வந்தர்களாகவும் ஆகிவிடுகின்றனர். இந்தப் புத்தகங்கள் சொல்லும் விஷயங்களுக்கெல்லாம் ஆதாரம், நம்பிக்கைதான்.

இந்தப் புத்தகங்களைப் படித்ததால் ஒருவர் சாதித்துவிடுவதில்லை. இந்தப் புத்தகத்தில் சொன்னபடி நடந்தால், சாதிக்க முடியுமென்ற நம்பிக்கை இருந்ததால் சாதித்தார்.

இதனால்தான் நம்பிக்கை, மனிதனின் மூன்றாவது கை என்று சொல்லப்படுகிறது. 

Design by WPThemesExpert | Blogger Template by BlogTemplate4U