எளிமை - அரசியல் தலைவர்களின் தலையாய பண்பு

தங்களின் உயிரை வருத்தி நம் தேசத்திற்கு சுதந்திரம் வங்கித் தந்த வீரர்கள் பலரும், தலைவர்களாக, இன்றைய பாரத நாட்டை நிர்மாணித்த சிற்பிகளாகவும் இருந்திருக்கிறார்கள். அப்படிப்பாட்ட மகத்தான தலைவர்களில், மிக முக்கியமானவர், முன்னால் இந்தியப் பிரதமர், திரு.லால் பகதூர் சாஸ்திரி அவர்கள்.

சுதந்திரப் போராட்டத்த்ல் பல இன்னல்களை அனுபவித்து, சுதந்திரத்திற்குப் பிறகும், அமைச்சராகவும், பிரதமராகவும் இருந்து இந்தியாவை வழிநடத்தியிருகிறார், இந்த உன்னத தலைவர். இவரது எளிமையான வாழ்க்கையையும், இன்றைய அரசியல்வாதிகளின் நடவடிக்கைகளையும் நினைத்துப் பார்த்தால், வேதனைதான் மிஞ்சும்

சாஸ்த்ரி அவர்கள் ரயில்வே அமைச்சராக இருந்தபோது, ஒரு முறை,  மதுரையில் நடக்கவிருந்த ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொள்ள வந்தார். மதுரையில் அவருக்கு தங்குவதற்கு, ரயில் நிலையத்திலேயே உள்ள விடுதியில் ஓர் அரை ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

குறிப்பிட்ட நேரத்திற்கு முன்பே ரயில் மதுரையை அடைந்து விட்டதால், சாஸ்த்ரி அவர்களை வரவேற்க யாரும் வந்திருக்கவில்லை.

ரயிலைவிட்டு இறங்கிய லால் பகதூர் சாஸ்த்ரி, விசாரித்துக்கொண்டு, தனக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த அறையை நோக்கிச் சென்றார்.

ஆனால் அங்கே நின்றிருந்த காவலாளி, "இது அமைச்சர் அவர்களுக்காக ஒதுக்கப்பட்ட அறை, தங்களை உள்ளே அனுமதிக்க முடியாது" என்றார்.

தான்தான் அந்த அமைச்சர் என்று சாஸ்த்ரி அவர்கள் எவ்வளவோ எடுத்துச் சொல்லியும், காவலாளி அசையவில்லை. இதற்குள், விவரம் அறிந்துகொண்டு, நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருந்தவர்கள் அங்கு வந்துவிட்டார்கள். அவர்கள் அமைச்சரை அழைத்துச் சென்றனர்.

இவ்வளவு குழப்பம் நடந்தும், சாஸ்த்ரி அவர்கள் அந்தக் காவலாளியை, அவனது கடமை உணர்வை பாராட்டிவிட்டுச் சென்றார். 

இப்படியொரு சம்பவம் இன்றைய அரசியல்வாதிக்கு நடந்திருந்தால்?

நினைத்துப் பார்க்கவே முடியவில்லை. அப்படிச் செய்த காவலாளி உடனடியாக பணியிலிருந்து நீக்கப்பட்டிருப்பார். அதைவிட முக்கியமான ஒன்று, மாண்புமிகு அமைச்சரே அன்று தனியாக வந்திருக்கிறார். ஆனால் இன்று மாவட்டச் செயலாளர் கூட ஒரு கூட்டத்தோடுதான் செல்கிறார். இத்தைகைய சம்பவங்கள் நேரும்போது, சம்பந்தப்பட்ட பிரமுகர் கூட சும்மா இருந்தாலும், உடன் செல்லும் நல்லவர்கள் சும்மா இருப்பதில்லை. "அய்யா யாருன்னு தெரியுமா?" என்ன தைரியம் இருந்து அண்ணன் தெரியாதுன்னு சொல்லுவ?" "உன்பேரு என்ன? எந்த ஊரு?" இப்படி எல்லாம் விசாரித்து மிரட்டி ஒரு வழியாக்கி விடுவார்கள்.

இந்த நிலையில்தான் இன்றைய அரசியல் இருக்கிறது. சுயநலம் சிறிதும் இன்றி, நாட்டிற்காக வாழ்ந்த தலைவர்கள் இருந்த இடத்தில் இதுபோன்ற போலி மனிதர்களைத் தான் நாம் அதிகார பீடத்தில் வைத்திருக்கிறோம்.

புகழின் மறுபக்கம்

பத்திரிகைகளும் தொலைக்காட்சிகளும் இன்று பெருமளவு சினிமாவையும், சினிமா நட்சத்திரங்களையுமே சார்ந்து இருக்கின்றன. நேர்மரையானதகாவோ எதிர்மரையானதாகவோ எந்தவொரு பரபரப்பான செய்தியும் திரைத்துறைப் பிரபலங்களைப் பற்றியதாகவே இருக்கிறது. அப்படிப்பட்ட செய்திகளில் முக்கியமானவொன்று, சினிமா ஹீரோக்களின் வருமானம் மற்றும் சொகுசு வாழ்க்கைப் பற்றியது.

சமீபத்தில் படித்த செய்தி ஒன்று, மலையாள நடிகர்களைப் பற்றியது. தமிழ் இலக்கியவாதி ஒருவர் தனது கேரளப் பயணத்தின்போது ஏற்பட்ட அனுபத்தை ஒரு வார இதழில் கூறியிருந்தார்.

கேரளத்தின் சூப்பர் ஸ்டார்  என்று போற்றப்படும் மம்மூட்டியின் எளிமையைப் பற்றியும், அவர் கலந்துகொள்ளும் பொது நிகழ்ச்சிகளில் மக்களின் அணுகுமுறைப் பற்றியும் சிலாகித்து எழுதியிருந்தார். அதோடு தமிழ்நாட்டின் நிலையையும் எண்ணிப் பார்ப்பதாக எழுதியிருந்தார்.

நானும் எண்ணிப்பார்க்கிறேன். அண்டை மாநிலமான கேரளத்திற்கும் நமக்கும் ஏன் இந்த வித்தியாசம்? சினிமாப் பிரபலங்கள் மீதான பார்வையில் நமக்கும் அவர்களுக்கும் உள்ள வேறுபாட்டின் காரணம் என்ன?

முதலில் எனக்குத் தோன்றியது, கேரளத்தில் நிலவும் கல்வியறிவு. இந்தியாவிலேயே, அதிகமான கல்வியறிவு உடைய மக்களைக் கொண்ட மாநிலம். இதனால் மக்களிடம், வாழ்வின் எந்தவொரு அம்சத்தையும் தெளிவாகக் காணக்கூடிய பக்குவம் இருக்கிறது. திரைப்பட ஹீரோக்களைப் பற்றியும் அவ்வாறே உணர்ந்திருக்கிறார்கள். இந்த நட்சத்திரங்களும் மண்ணில் தோன்றியவர்கள்தான். வானத்தில் இருந்து குதித்தவர்கள் அல்ல என்பதை அறிந்திருக்கிறார்கள்.அவர்களை ஒரு வித பிரமிம்மூபோடு பார்ப்பதில்லை. தங்களைப் போன்ற ஒரு மனிதராகவே பார்க்கிறார்கள். இதனால், பொது இடங்களில் இந்த நாயகர்களைப் பார்க்கும்போது எந்தவித சலசலப்பும் ஏற்படுவதில்லை.

இந்த ஒன்று தான் கேரளத்திற்கும் தமிழகத்திற்கும் உள்ள அடிப்படை வித்தியாசம். இங்கு சினிமா ஹீரோக்களை தெய்வமாக பார்ப்பவர்கள் அநேகம் பேர் இருக்கிறார்கள். இப்போது அநேகம் பேர் என்று சொல்வது சற்று ஆறுதல்தான். முப்பது நாற்ப்பது ஆண்டுகளுக்கு முன்பு அனைவருமே அப்படித்தான் இருந்திருக்கிறார்கள். அன்றைய கால கட்டத்தில், திரைப்படங்களில் நாயகனாகத் தோன்றுபவன் விண்ணுலக தேவனைப் போலவும், திரையில் கெட்டவர்களாகத் தோன்றும் வில்லன்களை, நிஜத்திலும் கொடூர அரக்கனைப் போலவும் நினைத்தவர்கள் நம் மக்கள். திரையில் தோன்றும் பிம்பங்களுக்கும், நிஜ மனிதர்களுக்கும் உள்ள வேறுபாடு தெரியாததனால் ஏற்படும் குழப்பம் இது.

இப்படி பொது மக்களிடம் தமக்கு ஏற்பட்டுள்ள மதிப்பை எத்தனை நாயகர்கள் உணர்ந்து, அதற்க்கேற்ப்ப செயல் பட்டிருக்கிறார்கள் என்று பார்த்தால், விரல்விட்டு எண்ணிவிடக்கூடியவர்களே தேறுவர். திரையில் ஒரு நடிகர் ஏற்று நடிக்கும் கதாபாத்திரத்திற்கும் அவரது இயற்கை குணத்திற்கும் சம்பந்தமே இல்லாமல் இருக்கலாம். உதாரணமாக, ஒரு படத்தில் மதுவை வெறுப்பவனாக நடிக்கும் நாயகன், நிஜத்திலும் அப்படியே இருக்க வேண்டும் என்பது கட்டாயமல்ல. அது அவருடைய தனிப்பட விருப்பம். ஆனால், இப்படிப்பட்ட ஒரு கதாபாத்திரத்தில் நடித்ததால், மக்கள் தன்னை மதிக்கிறார்கள் என்று உணர்ந்து, உண்மையிலேயே குடிப் பழக்கத்தை நிறுத்துபவர்கள், நிஜ நாயகர்களாக உருவாகிறார்கள். அப்படிப்பட்ட நடிகர்கள் மிகவும் குறைவானவர்களே.

சினிமா ஹீரோக்களின் ஆடம்பர வாழ்க்கை குறித்து செய்திகள் வெளியிடாத ஊடங்ககளே கிடையாது. ஒவ்வொரு படத்திற்கும் எவ்வளவு சம்பளம் வாங்குகிறார்கள், என்ன கார் உபயோகிக்கிறார்கள், கல்யாண மண்டபங்கள், பண்ணை வீடுகள் முதலிய சொத்துகள் என்ன வைத்திருக்கிறார்கள் போன்ற விவரங்கள் பத்திரிகைகளின் வாயிலாக பாமர மக்களையும் சென்று சேர்கின்றன. ஆனால் இந்த ஆடம்பர தோற்றத்துக்குப் பின் இந்த நட்சத்திரங்கள் வாழ்ந்துகொண்டிருக்கும் வாழ்கையை அந்த மக்கள் அறிவதில்லை.

இன்றைய தேதியில், தொடர்ந்து ஹிட் படங்கள் கொடுத்துக்கொண்டிருக்கும் ஒரு ஹீரோ இவ்வளவு சம்பளம் வாங்குகிறார் என்று அறிகிறோம். ஆனால், இப்படிப்பட்ட ஒரு பெருந்தொகையை சம்பளமாகப் பெருமளவிற்கு, அவருக்கு இருக்கும் அவசியங்கள் குறித்து நாம் அதிகம் சிந்திப்பதில்லை.

வெற்றிகரமாக வலம் வந்துகொண்டிருக்கும் ஒரு நாயகனின் வாழ்க்கைத் தரத்தைப் பற்றி நாம் அறிவோம். ஆனால், அவனது வாழ்கை முறையைப் பற்றி நாம் அறிவதில்லை.

மக்களால் அதிகம் நேசிக்கப்படும் ஒரு ஹீரோ, ஒரு பொது இடத்தில் தோன்றினால், அங்கு என்ன களேபரம் ஏற்படும் என்பது நமக்குத் தெரியும். அவரைப் பார்க்கவும், அவருடன் கை குலுக்கி, கையெழுத்து பெறவும் முண்டியடித்துக்கொண்டு ஒரு சிறு பிரளயத்தையே உண்டாக்கிவிடுவார்கள் மக்கள். இப்படி இருக்கும்போது, ஒரு நாயகன் சாமான்யனைப் போல சாதாரண உணவு விடுதியில் சென்று தன் குடும்பத்தோடு உணவருந்த முடியாது. அவர்களது தனிமையையும் சுதந்திரத்தையும் மதிக்கக்கூடிய, ஒரு நட்சத்திர உணவகத்திக்கே அவர்கள் செல்ல முடியும்.

தொடர்ந்து வெற்றிப் படங்கள் கொடுத்துக்கொண்டிருக்கும் ஒரு ஹீரோ, சாதரணக் கார்களில் பயணம் செய்தால் என்ன ஆகும்? பணத்தையெல்லாம் இழந்துவிட்டார். கடன் தொல்லையில் இருக்கிறார்.அவருக்கு மார்க்கெட் குறைந்துவிட்டது. அவரது புதிய படம் வெற்றிபெறாது . அவரை வைத்து படம் எடுக்க தயாரிப்பாளர்கள் தயங்குகிறார்கள். போன்ற வதந்திகள் அவருக்கு எதிராக பரப்பப்படும். அதனால், தன் செல்வாக்கை நிலைநிறுத்தவும், தன் மதிப்பைத் தக்கவைத்துக்கொள்வதற்கும், ஒரு ஆடம்பர சொகுசுக் காரை, அந்த ஹீரோ பயன்படுத்த வேண்டிய நிலை.

இதையெல்லாம் விட, ஒரு சினிமா நட்சத்திரமாக இருக்கக் கூடிய ஒருவர் இழக்கும் முக்கியமான விஷயம், தனிமை. தனக்காகவும், தன் குடும்பத்துக்காகவும் நேரம் செலவிட முடியாத ஒரு பரிதாபத்திற்க்குரிய மனிதர். ஒரு சாமாநியனைப் போல தன் குடும்பத்தை அழைத்துக்கொண்டு பொது இடங்களுக்கு செல்ல இயலாது.


நடிகர் கமல்ஹாசன், ஒரு படத்தில் கூறுவார். "ஓவர்நைட் ஸ்டார் என்பது தங்கக் கூண்டு போன்றது" என்று. ஆம். இந்த நடிகர்களின் வாழ்க்கை இப்படிப்பட்டதுதான். தங்கக் கம்பிகளால் பூட்டப்பட்ட சிறையில்தான் இவர்கள் வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள்.

மக்களின் உள்ளத்தில் இடம்பிடித்து, புகழின் உச்சிக்குச் செல்ல, இவர்கள் கொடுத்த விலை, தங்களின் தனிமையும் சுதந்திரமும். இந்த நாயகர்கள் அடைந்திருக்கும் புகழின் மறுபக்கம் இதுதான்.

தங்கத்தில் செய்திருந்தாலும் சிறை சிறைதான். இதனை உணர்ந்தவர்கள், ஆடம்பர வாழ்கையை வெறுக்கத் துவங்கிவிடுகின்றனர். ஆனால், இந்த சிறையினை கௌரவமாகக் கருதுபவர்கள், அறியாமையில் உழன்று, வாழ்கையை தொலைத்துக் கொண்டிருக்கிறார்கள.

கேரளத்தில் மக்கள் சினிமா நட்சத்திரங்களை சக மனிதர்களாகவே பார்க்கிறார்கள். அதனால், இந்த நாயகர்களும், எளிமையான வாழ்கையை வாழ முடிகிறது. தமிழக மக்களும் விரைவில் இதனை உணர்ந்துகொள்வார்கள்.

அலைபேசி அடிமைத்தனம்

நம்முடைய வாழ்க்கை, இன்று இயற்கையால் சூழ்ந்திருப்பதைவிட, இயந்திரங்களாலும் விஞ்ஞானத்தாலுமே நிரம்பியிருக்கிறது. மின்சாரம் இல்லாமல் சில வினாடிகள் கூட இயங்க முடிவதில்லை, வாகனங்கள் இன்றி பக்கத்துத் தெருவுக்கு கூட நாம் செல்வதில்லை, தொலைக்காட்சி இல்லாமல் பொழுதைக் கழிக்க இயலவில்லை. இப்படி, அவற்றிடம் நம்மை முற்றிலுமாக இழந்துவிட்ட அறிவியல் சாதனங்களில் மிக முக்கியமானது, அலை பேசி.

கிட்டத்தட்ட நம் உடலில் ஒரு உறுப்பாக, மூன்றாவது கையாக நம் வாழ்வில் ஒன்றிவிட்ட்ட ஒரு சாதனம் இந்த அலை பேசி. Mobile Phone. இந்த சின்னஞ்சிறிய கருவி இல்லாமல் நம்மால், இயங்க முடிவதில்லை. உலகின் எந்த மூலையில் இருந்தாலும் உடனுக்குடன் தொடர்பு கொள்ள முடிகிறது, தகவல்கள் உடனடியாக பரிமாறிக்கொள்ளபப்டுகின்றன, அதோடு சிறந்த பொழுதுபோக்கு சாதனமாகவும் உபயோகப்படுகிறது. இப்படி பல அம்சங்களில் நமக்கு உதவும் இந்த கைபேசியை நாம் எப்படி புறக்கணிக்க முடியும்? அப்படிச் செய்த ஒரு மனிதரையும் சமீபத்தில் காண நேர்ந்தது.

சில அரசியல், சினிமா பிரபலங்களும், இலக்கியப் பிரமுகர்களும் அலைபேசி உபயோகிப்பதில்லை என்று பத்திரிக்கைகளில் படித்திருக்கிறேன். ஆனால், நமக்கு நன்கு அறிமுகமான ஒருவர், அலைபேசி இல்லா வாழ்க்கையை அனுபவித்து வருவதை கண்டபோது ஆச்சர்யம் அளித்தது. இத்தனைக்கும் அவர் வெற்றிகரமாக இயங்கிக்கொண்டிருக்கும் தொழில் அதிபர். அப்படிப்பட்ட ஒருவர் எப்படி இந்த சிறிய தேவதையை புறக்கணித்துவிட்டு இருக்கிறார் என்று வியந்து அவரிடமே கேட்டேன். அதற்க்கு அவர் சொன்ன காரணங்கள் என்னை மேலும் ஆச்சர்யப்படுத்தின.

"இந்த அலைபேசி இல்லாததால், நம்முடைய நேரம் முழுமையாக நம்மிடமே இருக்கிறது" என்றார். "எங்கேனும் வெளியே செல்லும்போது, நண்பர்களைப் பார்த்தால், எந்த இடையூறும் இன்றி மணிக்கணக்கில் பேச முடிகிறது. அலைபேசி இருந்தால், ஐந்து நிமிடத்திற்கு ஒரு அழைப்பு வந்து விடுகிறது." என்று கூறியவர், "முக்கியமான கூட்டங்களிலும், கலந்துரையடல்களிலும் இருக்கும்போது அனாவசியமான கவனச் சிதறல்கள் ஏற்படுவதில்லை" என்று விளக்கினார்.

"இதெல்லாம் சரி, ஆனால் உங்கள் தொழிலை எப்படி சமாளிக்கிறீர்கள்? அலைபேசி உங்கள் வியாபாரத்திற்கு மிகவும் முக்கியமல்லவா?" என்று கேட்டேன்.

"இல்லை கைபேசி இல்லாதது என் தொழிலுக்கு இன்னும் உதவியாக இருக்கிறது. " என்று சிரித்தார்.

"அது எப்படி?" என்று கேட்டேன் மேலும் ஆச்சர்யத்துடன்.

"என் தொழில் சம்பந்தப்பட்டவர்கள் அனைவருக்கும் என் அலுவலக என்னை அதாவது landline எண்ணை வழங்கியிருக்கிறேன். அதனால் அவர்கள் நேரடியாக அங்கு தொடர்புகொண்டு வேண்டிய சரக்கை தருவித்துக்கொள்வார்கள். ஒரு வேளை நான் அலைபேசி வைத்திருந்தால், அவர்கள் என்னை அழைத்து இந்த சரக்கை உடனே கொடுத்து அனுப்புங்கள் என்று சொல்வார்கள். பின்னர் நான் மீண்டும் என் அலுவலகத்திற்கு தொடர்புகொண்டு அந்தத் தகவலைத் தெரிவிக்கவேண்டும். இதனால் நேரமும் பணமும் விரயமாகிறது.அதனால்தான் எனக்கு கை பேசி உபயோகிக்க வேண்டிய அவசியம் ஏற்படுவதில்லை. மேலும் என் வாடிக்கையாளர்களுக்கும் இந்த நடைமுறை சௌகர்யமாகவே இருக்கிறது." என்றார்.

எனக்கு மிகுந்த ஆச்சர்யமாக இருந்தது. நம்முடைய விஞ்ஞான  உபகரன்களால் எத்தனை அழகான வாழ்க்கை மறைக்கப்பட்டிருக்கிரதேன்று உணர்ந்தபோது வேதனையாக இருந்தது.

நண்பர் சொன்னது போல் அலைபேசி உபயோகிக்கும்பொழுது, நம்முடைய நேரம் நம்மிடம் இருப்பதில்லை. எப்போதும் நம்மை யாரோ பின்தொடர்வதை போல்லவே இயங்கிக்கொண்டிருக்கிறோம். சந்தித்துப் பார்க்கும் பொழுது, எதோ அடிமை வாழ்க்கை வாழ்வதைப் போலவே தோன்றுகிறது. நமக்குப் பிடித்தமானவர்களுடன், நேரம் செலவிட முடியாமல், சிறிது நேரத் தனிமையின் சுகத்தை அனுபவிக்க முடியாமல், சூழ்நிலைகளுக்கும், விஞ்ஞான வாழ்க்கைக்கும் அடிமைப்பட்டுக் கிடக்கிறோம் என்பதை அவருடன் பேசிக்கொண்டிருந்தபோது உணரமுடிந்தது.

ஆனால் இந்த அடிமைத்தளை வேறொருவர் நம்மீது சுமத்தியதல்ல, நாமே நமக்கு சூட்டிக்கொண்டது. இந்த அலைபேசி அடிமைத்தனம், பாரபட்சமின்றி, அனைத்துத் தரப்பினரிடமும், சிறியவர் முதல் பெரியவர் வரை வயது வித்யாசம் இன்றியும் பரவியிருக்கிறது.

சின்னஞ்சிறு குழந்தைகள் அலைபேசியில் விளையாடிக்கொண்டும், வாலிபர்கள் குறுஞ்செய்திகள் அனுப்புவதிலும், பெரியவர்கள் தொழில்த் தொடர்புகளை பேசிக்கொண்டும், பெண்கள் தொலைகாட்சி நிகழ்சிகளைப் பற்றியும் தம் குடும்ப விஷயங்களையும் பரிமாறிக்கொள்வதிலும் அலைபெசியிடம் காலத்தைப் பரிகொடுத்துக்கொண்டிருக்கிறோம்.

நண்பரிடம் பேசியபோது உணர முடிந்த மற்றொரு விஷயம், இந்த அடிமைத்தளையை உடைத்தெறியவும், இந்த விஞ்ஞான சிறையிலிருந்து வெளியே வரவும் நமக்கு ஒரு தனி தைரியம் வேண்டும். அந்த தைரியமும் ஆற்றலும் எல்லோருக்கும் இருப்பதில்லை. நான் உட்பட. அனாலும் இந்த இந்த சாதனங்களின் உபயோகத்தை குறைக்க முடியும். அதற்க்கான் முயற்சியையாவது மேற்கொள்ள எல்லோராலும் நிச்சியமாக முடியும்

அரசாங்கத்தின் அபத்தமான யோசனை

சமீபத்தில் படித்த செய்தியொன்று, என்னுள் சிந்தனையைத் தூண்டியது. மகாராஷ்டிரா மாநிலத்தில், திருமணத்திற்குப் பிறகு இரண்டு ஆண்டுகள் குழந்தைக பெற்றுக் கொள்ளாமல் இருக்கும் தம்பதிகளுக்கு, ரூ.5 ஆயிரம் சன்மானம் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. நாட்டில் பெருகிவரும் ஜனத்தொகையைக் கட்டுப்படுத்த இத்தகைய புதுமையான திட்டத்தை அம்மாநில அரசாங்கம் அறிவித்துள்ளது.

இந்த திட்டம் இந்தியாவின் இக்கட்டான நிலையை படம் பிடித்துக்காட்டுகிறது.பெருகிவரும் மக்கதொகையால், எதிர்காலத்தில் இந்தியாவிற்கு பல சிக்கல்கள் வரும் வாய்ப்புள்ளது. இதனை உணர்ந்து, இது போன்ற திட்டங்களை அரசு அறிவித்து வருகிறது. ஆனால், ஆனால் பெருகிக்கொண்டே வரும் ஜனத்தொகையைக் கட்டுப்படுத்த, இது போன்ற திட்டங்கள் சாத்தியமா என்பது சந்தேகமாகவே இருக்கிறது. மேலும் இதில் சில நடைமுறை சிக்கல்களும் இருக்கின்றன.

குழந்தை என்பது, கடவுள் கொடுக்கும் வரமாகக் கருதப்படுகிறது. அப்படியிருக்கையில் சன்மானத்துக்காக குழந்தை பெற்றுக்கொள்வதை தள்ளிப்போடுவது என்பது சிக்கலான விஷயம். சில தம்பதிகள், இந்த பணத்திற்காக உருவான கருவைக் கூட கலைக்கும் வாய்ப்பிருக்கிறது. மக்கள்தொகை அதிகரிக்கிறது என்பதற்காக ஒன்றும் அறியாத ஒரு கருவைக் கொள்வது தகுமா? இது போன்ற செயல்களுக்கு அரசாங்கமே தூண்டுகோலாக இருக்கலாமா? மேலும், குழந்தை பெற்றுக் கொள்வதை தள்ளிப்போட்டதால், ஒரு தம்பதிக்கு குழந்தை பிறக்க முடியாமல் போனாலோ, தாமதமானாலோ, அரசாங்கத்தால் என்ன செய்ய முடியும்?

திருமணமாகி ஓர் ஆண்டுக்குள் கருத்தரிகவிலை என்றால், நம் சமுதாயத்தில் என்னென்ன பேச்சுக்கு ஆளாக வேண்டியிருக்கும் என்பது அனைவரும் அறிந்ததே.அதிலும் மனைவியாகிய அந்தப் பெண் சந்திக்கக்கூடிய அவமானங்கள் சொல்ல முடியாதவை. அப்படியிருக்கும்போது, இரண்டு ஆண்டுகள் குழந்தை பெற்றுக்கொள்ளாமல் இருப்பது சரியான அணுகுமுறையல்ல. முன்பு சொன்னதுபோல, குழந்தை பெற்றுக் கொள்வதை தள்ளிப்போட்டதால், ஒரு தம்பத்திக்கு மருத்துவ ரீதியான காரணங்களால் குழந்தை பிறப்பதில் சிக்கல்கள் உருவாகுமேயானால், அதனை அரசாங்கம் கொடுக்கும் பணத்தால் ஈடு செய்ய முடியுமா?

இப்படி யோசித்துப் பார்க்கும்போது, அரசாங்கத்தின் இந்த திட்டம் சற்று அபத்தமாகவும் ஆபத்தானதாகவும் எனக்குத் தோன்றுகிறது. பெருகிவரும் ஜனத்தொகையைக் கட்டுப்படுத்த இன்னும் சிறப்பான திட்டங்களை அரசாங்கத்தால் உருவாக்க முடியும். முன்பு இருந்த, இரண்டு குழந்திகளுக்குப் பிறகு குடும்பக் கட்டுப்பாடு செய்துகொள்ளும் திட்டம் இன்றும் நடைமுறைக்கு ஒத்துவரக்கொடிய திட்டம்தான்.

இப்பொழுது அறிவித்திருக்கும் திட்டத்திலேயே சிறு மாறுதல் செய்து, ஒரு தம்பதி, முதல் குழந்தைக்குப் பிறகு, குறிப்பிட்ட காலம் இடைவெளி விட்டு அடுத்தக் குழந்தை பெற்றுக்கொண்டால், சன்மானம் வழங்கப்படும் என்று மாற்றியமைக்கலாம். இதன் மூலம், ஜனத்தொகை பெருகும் வேகத்தைப் பாதியாகக் குறைக்க முடியும். இது,  தம்பதிகளின் ஆரோக்யத்திற்க்கும் சிறந்தாதாக இருக்கும்.

இப்படிப்பட்ட திட்டங்களை அரசு அறிவிக்கலாமே தவிர, புதிதாக திருமணம் செய்துகொண்டவர்களை குழந்தை பெற்றுக்கொள்ளாதீர்கள் என்று சொல்வது தவறான அணுகுமுறை. மகாராஷ்டிரா அரசு மட்டுமல்லாமல், மத்திய அரசும் இதுபோன்ற திட்டங்களைப் பரிசீலித்து தேசம் முழுவதும், முதல் குழந்தைக்குப் பிறகு, இரண்டாவது குழந்தைக்கு போதிய கால இடைவெளி (மூன்று வருடங்களோ, அல்லது ஐந்து வருடங்களோ) விட்டு பெற்றுக் கொள்பவர்களுக்கு சன்மானம் வழங்கப்படும் எனும் திட்டத்தை அறிவிக்கலாம்.

வாழ்வின் நோக்கம்

அஹமது காசிம் எனும் சூபி ஞானி ஒருவர், மெக்கா நகர் நோக்கி புனிதப் பயணம் மேற்கொண்டார். நீண்ட நாள் பயணம் என்பதால், தேவையான உணவை மூட்டையாகக் கட்டி எடுத்துச் சென்றார்.

பயணத்தின்போது, ஒரு பெண்மணி எதிர்பட்டார். ஞானியை ஏற இறங்கப் பார்த்த அந்தப் பெண்மணி, "உங்களைப் பார்த்தால் சூபி ஞானி போல் தெரிகிறதே. எங்கே பயணம் சென்று கொண்டிருக்கிறீர்கள்?" என்று வினவினாள்.

"புனித மெக்கா நகர் நோக்கி சென்று கொண்டிருக்கிறேன்" என்று பதிலிறுத்தார் அஹமது காசிம்.

"அது சரி மூட்டையில் என்ன வைத்திருக்கிறீர்கள்?"என்று மீண்டும் கேட்டாள் அந்தப் பெண்மணி.

"வழிப் பயணத்திற்குத் தேவையான உணவு" என்றார் சூபி.

"வழியில் உமக்கு உணவே கிடைக்காது என்று முடிவு செய்துவிட்டீரா?" என்று சூபியை ஏளனமாகப் பார்த்தால் அந்தப் பெண்.

இது கேட்டுத் திகைத்துப் போய் நின்ற அந்த ஞானியைப் பார்த்து மேலும் தொடர்ந்தார் அந்தப் பெண்மணி.

"உங்கள் தோற்றத்துக்கும் குணத்துக்கும் சம்பந்தமே இல்லை. நீர் ஒரு சூபியாக இருந்தும் இறைவனிடமிருந்து வெகு தொலைவில் இருக்கிறீர். வழிப் பயணத்தின்போது, ஏதோவொரு வகையில் இறைவன் உணவு வழங்கிவிடுவான் என்ற நம்பிக்கை கூட உமக்கு இல்லை. நீர் எப்படி பிறருக்கு இறைத் தத்துவத்தை போதிக்கப் போகிறீர்?" என்று ஏளனமாகச் சொல்லிவிட்டு சென்றாள் அந்தப் பெண்.

இதைக் கேட்டு தன் தவறை உணர்ந்த அந்த சூபி, வழியில் எதிர்பட்டோருக்கு தான் கொண்டு வந்த உணவை தானமாகக் கொடுத்துவிட்டு,  வெறும்கையோடு, மனதில் இறைவன் பால் நம்பிக்கையும் கொண்டு தன் பயணத்தைத் தொடர்ந்தார்.

நீண்ட தூரம் நடந்தார். பசியும் களைப்பும் அவரை ஆட்கொள்ளத் தொடங்கியது. சுற்றிலும் எதாவது உணவு கிடைக்குமா என்று பார்க்கத் தொடங்கினார்.எதுவும் புலப்படவில்லை. இறைவனை நினைத்துக் கொண்டு மேலும் சிறிது தூரம் நடந்தார்.

அப்போது கீழே ஒரு பெண்ணின் கால் கொலுசு கிடப்பதைப் பார்த்தார். அதைக் கையிலெடுத்தவர், இதைத் தவற விட்டுச் சென்றவர்கள் எப்படியும் தேடிக்கொண்டு வருவார்கள், அவர்களிடம் இதனை ஒப்படைத்துவிட்டு, உணவு ஏதாவது கேட்கலாம், என்று சுற்றிலும் பார்த்தார்.

அப்போது அவர் முன்பு சந்தித்த அதே பெண்மணி வந்து கொண்டிருந்தாள். நேர்ந்கி வந்ததும் அவளைப் பார்த்து, "தாயே! இந்தக் கொலுசு தங்களுடையதா?" என்று வினவினார்.

"ஆம் என்னுடையதுதான்" என்று பெற்றுக் கொண்டார் அந்தப் பெண்.

"அம்மா! எனக்கு ஏதாவது உணவு இருந்தால் கொடுங்கள் மிகுந்த பசியாக இருக்கிறது" என்று வேண்டினார் அஹமது காசிம்.

மீண்டும் அவரை ஏளனமாகப் பார்த்த அந்தப் பெண்மணி,"இப்போது நீங்கள் இந்தக் கொலுசைக் கொடுத்துவிட்டு உணவு பெரும் வியாபாரியாகி விட்டீர்கள். இப்பொழுதும் உங்களுக்கு இறைவன் மீது நம்பிக்கை இல்லை." என்று கூறிவிட்டு சென்றுவிட்டாள்.

நாமும் இப்படித்தான் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். ஏதோவொன்றை அடைய வேண்டுமென்று உழைக்கிறோம். ஆனால் ஏன் அதனை அடைய வேண்டும்? அதன் பலன் என்ன?அந்த நோக்கம் எத்தன்மையது? போன்றவற்றை நாம் உணர்வதில்லை. அதனாலேயே நம் லட்சியத்தை அடைந்தவுடனேயே அதன் மதிப்பு குறைந்து விடுகிறது.

வாழ்க்கைப் பயணத்தில் நமது இலக்கு எது? எதை நோக்கி நாம் சென்று கொண்டிருக்கிறோம்? நம் பயணம் எப்படி இருக்கிறது? நம்மில் எத்தனைப் பேர் இந்தக் கேள்விகளுக்கான் பதிலை அறிந்திருக்கிறோம்?

நம் குழந்தைகளைப் படிக்க வைக்கிறோம், ஆனால் அந்த படிப்பின் நோக்கம் என்ன? எதற்க்காக படிக்க வேண்டும் என்பதை நாம் அவர்களுக்குச் சொல்லிக்கொடுக்கொடுப்பதில்லை. நன்றாகப் படித்தால், நல்ல வேலைக்குப் போய் நிறைய சம்பாதிக்கலாம் என்று மட்டும் சொல்லி படிக்க வைக்கிறோம். இப்படித்தான் வாழ்வின் ஒவ்வொரு விஷயத்தையும் முழுமையாக உணராமல், கடமையைச் செய்வதுபோல் செய்துகொண்டிருக்கிறோம்.

இறை நம்பிக்கையிலும் நாம் இப்படித்தான் இருக்கிறோம். கடவுளிடம் நாம் முழுமையாகச் சரனடைந்துவிடுவதே உண்மையான பக்தி. கஷ்டங்களும் கவலைகளும் வரும்போது மட்டும் கடவுளை நினைக்காமல், நம் வாழ்வில் நடக்கும் ஒவ்வொரு சம்பவமும் அவன் செயல் என்று நம்பியிருப்பதே இறை நம்பிக்கை.

உதவியின் தன்மை

பேரறிஞர் ஐயா பெரியார் அவர்கள், பிறருக்கு உதவுவதை தன்னுடைய கொள்கையாக வைத்திருந்தார். ஆனால் அவர் என்றுமே நன்றியை எதிர்பார்த்து எந்த உதவியும் யாருக்கும் செய்ததில்லை.

ஒரு நாள் அவருடைய நண்பர் ஒருவர் அவரிடம், "ஐயா தாங்கள் தொடர்ந்து போராடவில்லை என்றால் வகுப்புரிமை, சட்டமாகியிருக்காது.அதை தமிழர்கள் நினைத்துப் பார்க்காவிட்டாலும், தினமும் உங்களிடம் வந்து பரிந்துரை வாங்கிச் செல்லும் நபர்களாவது நினைத்துப் பார்க்கிறார்களா? ஒரு நாளைக்கு குறைந்தது இருபது பேராவது தங்களிடம் பரிந்துரைக் கடிதம் வாங்கிச் செல்கிறார்கள், ஆனால், பத்து நாளைக்கு ஒருவர் கூட உங்களை சந்தித்து நன்றி சொல்வதில்லையே" என்று வேதனைப்பட்டார்.

இதைக் கேட்டு சிரித்த பெரியார், "இவ்வளவுதானா உங்களுக்குத் தெரிந்தது? நான் தண்ணீர் பந்தல் வைத்து நடத்துகிறேன். அதில் தண்ணீர் பருகியவர்கள், தாகம் தீர்ந்ததும் நகர்ந்து செல்லாமல், நன்றி கூறிக் கொண்டிருந்தால், பிறருக்கு தண்ணீர் ஊற்றுவதும் தடைபடும்."

ஐயா பெரியார் அவர்கள் இந்த சமுதாயத்திருக்கும், உலகத்துக்கும் எத்தனையோ விஷயங்களை போதித்திருக்கிறார். ஆனால் இந்த ஒரு சம்பவத்தின் மூலம் அவர், மகத்தான கருத்துக்களை எளிமையாக விளக்கிவிட்டார். ஒரு தனி மனிதன் மட்டுமல்ல, ஓர் தலைவனும் எப்படி இருக்க வேண்டும் என்று அவர் வாழ்ந்து காட்டியிருக்கிறார்.

ஒரு தலைவன் என்பவன், தனது கொள்கையிலும் அதனை அடைவதிலுமே குறியாக இருக்க வேண்டுமே தவிர, தனது முயற்ச்சிகளுக்கான பலன்களை எதிர்பார்த்து அதில் மூழ்கிவிடக்கூடாது.

இன்றைய அரசியல்வாதிகளும், அரசு ஊழியர்களும், தங்கள் கடமையைச் செய்வதற்கே,  லஞ்சம் எதிர்பார்க்கும்போது, தான் செய்த உதவிக்கு, நன்றி கூட எதிர்பாராத பெரியார், எப்படி வாழ வேண்டும் என்பதை நமக்குக் காட்டிவிட்டார்.

ராமர் கோவிலா? பாபர் கோவிலா?

தேசத்தின் மாபெரும் புதிராக இருக்கும் அயோத்தி வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட இருக்கிறது. கிட்டத்தட்ட இந்தியா சுதந்திரம் அடைந்தபோது தொடங்கிய இந்த பிரச்னை, 1992 இல் பாபர் மசூதி இடிக்கப்பட்டபோது, உச்சக்கட்டத்தை எட்டி, இன்று வரை தீராத துயரமாக இருக்கிறது. இந்த விவகாரத்தின் இறுதித் தீர்ப்பு இன்று அறிவிக்கபப்டும் என்று சொல்லப்பட்டது. பிறகு அதுவும் ஒரு வார காலம் தள்ளிவைக்கப்பட்டிருக்கிறது. காமன் வெல்த் போட்டிகள் நடக்க இருக்கும் நிலையில், கலவரம் ஏற்ப்படக் கூடிய அபாயம் இருப்பதால், தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டிருக்கலாம் என்ற நியாயமான காரணம் இருந்தாலும், இன்னும் எத்தனைக் காலத்துக்கு இப்படி தற்காலிகத் தீர்வுகளும், தள்ளிவைப்புகளும்? முடிவு என்றைக்கு வெளியிடப்பட்டாலும் கலவரம் நடக்கும் ஆபத்து இருக்கும். அப்படிப்பட்ட சூழ்நிலையை எதிர்கொண்டு கலவரத்தை அடக்க வேண்டுமே தவிர இப்படித் தள்ளிவைப்பது சரியான அணுகுமுறையாகாது.

இந்த விவகாரம் தொடர்பாக நேற்றைய தினமணி நாளிதழிலில் வெளியான கட்டுரை, இதன் பின்னணியையும், இந்தப் பிரச்னையின் மூலத்தையும் சற்று விரிவாக அலசியிருக்கிறது.  அதில் கூறப்பட்டுள்ள படி, முகலாயப் பேரரசர் பாபர் இந்தியாவை ஆண்டபோது, ராமர் கோவிலை இடித்துக் கட்டப்பது தான் இந்த பாபர் மசூதி. இஸ்லாமிய, மங்கோலியப் படையெடுப்புகளின்போது நிர்மூலமாக்கப்பட்ட பல கோவில்களில், இந்த அயோத்தியும் ஒன்று. அப்படி இடிக்கப்பட்ட பல கோவில்கள், சுதந்திரத்திற்குப் பின்பு மீண்டும் கட்டப்பட்டிருகின்றன. அப்படியிருக்கையில் இந்த அயோத்தி விவகாரம் மட்டும் ஏன் இத்தனை தீவிரமாக  மாறவேண்டும்?

இந்துக்கள்  வணங்கும்  தெய்வமான,  ராமர் அவதரித்த  இடம், ராம ஜன்ம பூமி என்று இந்த அயோத்தி கருதப்படுவதுதான் இத்தனைக் கலவரத்திற்கும் காரணம். ஹிந்துக்களின் இந்த நம்பிக்கைக்கு ஆதாரமாக, ராமாயணம் எனும் பெருங்காவியம் இருக்கிறது. ஆனால், மசூதி இடிக்கப்பட்டதற்கு இந்த நம்பிக்கைகள் காரணம் அல்ல என்பதும், முழுக்க முழுக்க அரசியல் ஆதாயம் வேண்டிச் செய்யப்பது என்பதும், இருதரப்பினரும் அறிந்ததே. பின் எப்படி இத்தனை கொடிய கலவரங்கள் நிகழ்கின்றன?

இந்தக் கேள்விக்கான விடையை அறிந்துகொள்ள நாம் முகலாயர் காலம் வரை செல்ல வேண்டும். மங்கோலியர்களும், இஸ்லாமியர்களும் இந்தியா மீது தொடர்ச்சியாக நடத்திய படையெடுப்புகளில், ஹிந்து மதத்தின் சின்னங்களாகக் கருதப்பட்ட பல கோவில்கள் சூறையாடப்பட்டு சேதப்படுத்தப்பட்டன. மக்களும் மிகுந்த கொடுமைகளை சந்திக்க நேர்ந்தது. அன்று இஸ்லாமியர்கள் காட்டிய அந்த வெறி, அவர்களை ஹிந்து மதத்தின் நிரந்தரப் பகைவர்கள் என்ற நம்பிக்கையை மக்களிடையே விதைத்துவிட்டது. பின்னர் இந்தியா பாகிஸ்தான் பிரிவினையின்போது நடந்த வன்முறை சம்பவங்களும் இந்த நம்பிக்கைக்கு வலு சேர்த்துவிட்டது. ஊன்றிக் கவனித்தால், ஹிந்து முஸ்லிம் கலவரங்கள் வட இந்தியாவிலேயே அதிகம் நடப்பது தெரியும். காரணம் இந்த மக்கள், முகலாயர் காலத்திலும், பிரிவினையின்போதும் பெரிதும் பாதிக்கப்பட்டவர்கள். அந்தப் பகையின் தொடர்ச்சியாகத் தான் இப்பொழுது நடந்து வரும் சம்பவங்கள் இருக்கின்றன. இதன் பின்னணியில் சில அரசியல் சக்திகள் இருப்பதும் நிதர்சனமான உண்மை.

மக்களின் நிலை இப்படி இருக்கையில், வழக்கில் சொல்லப்படும் தீர்ப்பு எப்படி இருக்கும் என்பது முக்கியமல்ல.எப்போது சொல்லப்பட்டாலும், கலவரத்தைத் தூண்டிவிட்டு குளிர் காயும் அரசியல் சக்திகள் ஏராளமாக இருக்கின்றன. இந்த நிலையில், தீர்ப்பை விரைவாக வெளியிட்டு, பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைப்பதே புத்திசாலித்தனமாக இருக்குமே சாஹிய, அதனைத் தள்ளிப்போடுவது எந்த வகையிலும் நன்மை அளிக்கப்போவதில்லை. கலவரங்கள் எழுமானால், அதனை எதிர்த்து அடக்க முயற்ச்சிக்க வேண்டும். அதைவிடுத்து, வான்முறை ஏற்படும் என்று தயங்குவதும் அஞ்சுவதும் ஒரு அரசாங்கத்துக்கு அழகல்ல.

இந்தக் கலவரங்களைத் தவிர்ப்பது என்பது சிரமாமான காரியம். ஏனெனில், எத்தகைய தீர்ப்பு வந்தாலும், வன்முறையில் ஈடுபட சில விஷமிகள் காத்திருக்கிறார்கள். இருந்தாலும், மக்களிடையே அதிக பதட்டமில்லாமல் இருக்க, இந்த தீர்ப்பு இருதரப்புக்கும் நடுநிலையானதாக இருக்க வேண்டும். சர்ச்சைக்குரிய அந்த இடத்தில், ராமர் கோவிலும் கட்ட வேண்டாம், பாபர் கோவிலும் கட்ட வேண்டாம். ஒரு அநாதை ஆசிரமமோ, குழந்தைகள் பூங்காவோ, அல்லது ஏதேனும் அரசாங்க அலுவலகமோ கட்டிவிடலாம்.

மக்களைத் தூண்டிவிட்டு அரசியல் ஆதாயம் தேட நினைக்கும் சில தேசவிரோதிகளிடம் இருந்து நாட்டைக் காப்பாற்ற இத்தகைய தீர்ப்பையே வழங்க வேண்டும்.

Design by WPThemesExpert | Blogger Template by BlogTemplate4U