நாம் அறிந்த சுதந்திரம்

இன்றோடு நம் தேசத்திற்கு சுதந்திரம் கிடைத்து 63 வருடங்களாகின்றன. இதற்காக அனைவருக்கும் முதலில் என் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இதனைப் பற்றிப் பேசும்போது தமிழ் வார இதழ் ஒன்றில் நான் படித்த இரண்டு விஷயங்கள் நினைவுக்கு வருகின்றன. ஒரு கேள்வி பதில் பகுதியில், "யாரோ எழுதி. யாரோ இசைஅமைத்து யாரோ பாடிய பாடலை வெட்கமில்லாமல் தங்கள் அக்கா மகளுக்கு டெடிகேட் செய்கிறார்களே?" என்ற கேள்வி கேட்கப்பட்டிருந்தது. அதற்கு கூறப்பட்ட பதில் சிந்திக்க வைத்தது. "யாரோ போராட, யாரோ ரத்தம் சிந்தி, யாரோ உயிரைக் கொடுத்து வாங்கிய சுதந்திரத்தை நாம் வீனாக்குவதில்லையா? அதுபோலத் தான்."

இந்தப் பதில் எனக்குள் பல கேள்விகளை எழுப்பியது.நாம் பல உத்தமர்களின் உயிரை விலையாகக் கொடுத்துப் பெற்ற சுதந்திரத்தின் இன்றைய நிலை என்ன? அப்படிப் பெற்ற சுதந்திரத்திற்கு பலன் இருக்கிறதா? அந்த சுதந்திரம் அனைத்து வர்க்க மக்களுக்கும் சென்றடைந்திருக்கிறதா? என்று பல கேள்விகள்.

இன்றைய மக்கள் சுதந்திரத்தை எப்படிப் பார்க்கிறார்கள்? எப்படிப் பயன்படுத்துகிறார்கள்?

இளைஞர்களுக்கு, சுதந்திரம் அவர்கள் விரும்பிய படிப்பைப் படித்து அதிக சம்பளம் கொடுக்கும் ஏதோவொரு நாட்டிற்கு வேலைக்குச் செல்வது.  வார இறுதி நாட்களில் நண்பர்களோடு பாரில் குடித்துவிட்டு அதனை relaxation என்று சொல்வது

பெண்களுக்கு சுதந்திரம் அவர்கள் விரும்பிய ஆடைகளை அணிவது. ஆண்களுக்கு நிகராக மது அருந்துவது புகைப் பிடிப்பது. கலாச்சாரத்தைப் பற்றி கவலைப் படாமல் ஆண்களுடன் எல்லை மீறிப் பழகுவது.

அரசியல்வாதிகளுக்கு, என்ன செய்தேனும் பதவியைப் பிடித்து மக்களின் பணத்தை கொள்ளையடிப்பது. செய்யக் கூடாது என்று கூறப் பட்ட அனைத்துப் பாவங்களையும் செய்வது.

அப்பாவிகள் என்று வர்ணிக்கப் படும் பொது மக்களுக்கு, தேர்தலின்போது கட்சிகள் கொடுக்கும் இலவசப் பொருட்களையும் பணத்தையும் வாங்குவது. மன நிம்மதி தேடி போலிச் சாமியார்களை நாடிச் செல்வது.

ஒடுக்கப் பட்ட மக்களுக்கு, "நம் உரிமைகளுக்காக போராடுவோம்" என்று அழைக்கும் அவர்கள் இனத் தலைவர்களை நம்பி ஏமாறுவது.

இதுதான் இந்தியாவில் சுதந்திரத்தின் இன்றைய நிலை.

இதைப் பற்றிக் கூறும்போதுதான் படித்த இரண்டாவது விஷயம் நினைவுக்கு வருகிறது.

சுதந்திரமடைந்த சில ஆண்டுகள் கழித்து பிரதமர் நேரு ஒரு விழாவில் கலந்துகொண்டுவிட்டு  தலைநகர் சென்று கொண்டிருந்தார். அப்போது ஒரு இளைஞன் அவரது காரை வழிமறித்தான். காரிலிருந்து இறங்கிய நேரு அவனிடம்

"என்ன பிரச்சினையப்பா உனக்கு?" என்று கேட்டார்.

"நான் படித்து முடித்து வெகு நாட்களாகிவிட்டன. ஆனால் எனக்கு இன்னும் வேலை கிடைக்கவில்லை. இப்படி வேலையில்லாமல் அலையத்தான் சுதந்திரம் வாங்கித் தந்தீர்களா? அந்த சுதந்திரத்தால் யாருக்கு என்ன பயன்?" என்று கேட்டான்.

நேரு அமைதிகாக புன்னகையுடன் "ஒரு பிரதமரைப் வழிமறித்து இப்படிக் கேள்வி கேட்கிறாயே இதற்காகத் தான் சுதந்திரம்." என்று கூறிவிட்டு அவனது பிரச்னையை தீர்த்து வைப்பதாக உறுதியளித்து விட்டு சென்றார். அது போலவே தலைநகர் சென்றவுடன் அவனுக்கு வேலைக்கும் ஏற்பாடு செய்தார்.

நாம் பெற்றிருக்கும் சுதந்திரத்தின் வலிமையை இந்த சம்பவம் பூரணமாக உணர்த்துகிறது.

இன்று எத்தனை இளைஞர்கள் தங்களைச் சுற்றியுள்ள உலகத்தை மாற்ற தங்களுக்குள்ள சுதந்திரத்தை உணர்ந்திருக்கிறார்கள்.?

பொது மக்களில் எத்தனை பேர் தங்களை ஆளும் அரசாங்கத்தை தேர்ந்தெடுக்க அவர்களுக்கு உள்ள சுதந்திரத்தை அறிந்திருக்கிறார்கள்?

அப்படியானால் சுதந்திரத்திற்குப் பிறகு இந்தியா வளர்சியடையவில்லையா?

நாம் வளர்சியடைந்திருக்கிறோம். உலக நாடுகள் பிரமிக்கும் அளவிற்கு இந்த அறுபத்துமூன்று ஆண்டுகளில் வளர்ந்திருக்கிறோம். அனால் அந்த வளர்ச்சி அனைவரையும் சென்று சேரவில்லை. முழுமையாகவில்லை. என்பதே உண்மை.

சுதந்திரம் கிடைத்து இத்தனை ஆண்டுகளில் பெருமைப்படக் கூடிய விஷயங்களும் உண்டு.

ஜான் ஸ்ட்ராச்சி என்னும் பிரிட்டிஷ்காரர் இந்தியாவைப்பற்றி எழுதிய ஒரு புத்தகத்தில் "ஒரு வசதிக்காக, பல வேறுபட்ட நாடுகள் சேர்ந்த ஒரு பகுதிக்கு, இந்தியா என்று பெயர் சூட்டப்பட்டிருக்கிறது. கலாச்சாரத்தாலும், மொழியாலும், இனத்தாலும் வேறுபட்ட மக்கள் எப்போதும் ஒரே தேசமாக இருக்க முடியாது. கடந்த காலத்தில் இந்தியா என்றொரு தேசம் இருந்ததில்லை. இனி வரும் காலங்களிலும் இருக்கப் போவது இல்லை" என்று எழுதினார்.

அவரது கருத்தை நாம் பொய்யாக்கிவிட்டோம். சுதந்திரம் கிடைத்து நாம் நிலைத்திருக்கிறோம். ஒரே தேசமாக.இதுதான் நமது வெற்றி. பல்வேறு இனம், மொழி, பண்பாடு கொண்ட மக்கள் இந்தியா என்ற ஒரு குடையின் கீழ் இணைந்திருக்கிறோம்.

இந்த ஒற்றுமை. இந்த தேசிய உணர்வு ஒவ்வொரு விஷயத்திலும் இருந்து நாட்டை நாம் மேலும் வளம்பெறச் செய்ய வேண்டும். அதற்க்கான சக்தி,சுதந்திரமென்னும் மஹா சக்தி நம்மிடையே இருக்கிறது. அதை முழுமையாக உணர்ந்து தேசத்தின் வளர்ச்சிக்காக உழைப்போம்.

அனைவருக்கும் இனிய சுதந்திர தின நல்வாழ்த்துகள்.

ஜெய் ஹிந்த்!

0 கருத்துரைகள்:

Post a Comment

Design by WPThemesExpert | Blogger Template by BlogTemplate4U