காதல் கொலைகள்

பெண்களுக்கு எதிரான கொடுமைகள் குறித்து போராட்ட கோஷங்கள் தேசமெங்கும் ஒலித்தாலும், பெண்களால் நடக்கும் சில குற்றங்களும் செய்தித்தாள்களை ஆக்ரமிக்கின்றன. கள்ளக் காதலுக்கு ஒரு பிஞ்சுக் குழந்தை பலியான சம்பவம், மாநிலத்தையே உலுக்கியது. இது போன்ற குற்றங்கள் ஒரு ரகமென்றால், பெண்கள் அவர்கள் செய்யும் செயல்களாலேயே பாதிக்கப்படுவது மற்றொரு ரகம். இத்தகைய குற்றங்களுக்கு யாரைக் குறை கூறுவது என்றுதான் விளங்கவில்லை.

மதுரையில், மூன்று காதலர்களை மாற்றியதாக, பெற்ற தந்தையே, மகளைக் கொலை செய்திருக்கிறார் என்ற செய்தி, பதற வைத்தது.பல ஆண்களுடன் பழகி,  காதலர்களை அடிக்கடி மாற்றியதாக பதினெட்டு வயது மகளை, தந்தை கொலை செய்திருக்கிறார். குடும்ப கௌரவம் காக்க மகளை பலி கொடுத்திருக்கிறார்.

இதுபற்றி தெரிந்த சிலரிடம் விவாதித்தபோது, தந்தை செய்தது சரியென்ற கருத்துக்கள் வந்ததுதான், அதிர்ச்சியாக இருந்தது. பெண் பொறுப்பில்லாமல் அலைந்ததால், மற்ற குடும்ப உறுப்பினர்களின் நலன் கருதி தந்தை இப்படிச் செய்த்தது, தவறல்ல என்று காரணம் கற்பித்தார்கள்.

எத்தனையோ குடும்பத்தில் ஆண்கள் இப்படி பொறுப்பில்லாமல் அலைகிறார்கள், அவர்களை யாரும் ஒன்றும் செய்வதில்லையே? என்று பெண்கள் நியாயம் கேட்டால் அதுவும்  சரி என்று சொல்லலாமா? குழப்பமாக இருந்தது. சிந்திக்கத் தொடங்கினேன்.

பெண்கள் ஏன் இது போன்ற செயல்களில் ஈடுபடுகிறார்கள் என்று யோசித்தேன். காதலனை நம்பி ஏமாந்த பெண்களின் கதை மாறி, பெண்கள் காதலனை அடிக்கடி மாற்றும் இந்த நிலை ஏன் வந்தது?

இதற்கு முக்கிய காரணமாக எனக்குப் பட்டது, பெண்களின் முடிவெடுக்க முடியாத குழப்பமான மனநிலைதான். பருவ வயதில், ஓர் ஆணைப் பார்த்தவுடன், ஈர்ப்பு வருவது சகஜம். அதனை காதல் என்று தவறாக அர்த்தப்படுத்திக் கொண்டு, ஆண்களுடன், எல்லை மீறிப் பழகுகிறார்கள். ஊடகங்களும் இது போன்ற எண்ணங்கள் வளர காரணமாக இருக்கின்றன. இதில் மற்றொரு விஷயம், பெண்கள், எப்போதும் ஆண்களிடம் பழகும்போது, ஏதோவொன்றை எதிர்பார்த்து பழகுகின்றனர்.அன்பு, பாதுகாப்பு, வசதியான, ஆடம்பரமான வாழ்க்கை, சுதந்திரம், போன்றவற்றை எதிர்ப்பார்த்து பழகுகின்றனர். அந்த எதிர்பார்ப்பு பொய்யாகும்போது, அது நாள்வரை பழகியவனை பிரிந்து, புதிய துணையைத் தேடுகின்றனர்.

இந்த சூழ்நிலையில், பெண்கள் ஒரு முக்கியமான் தவறு செய்துவிடுகின்றனர். அதுவே அவர்கள் வாழ்கையை பாதித்துவிடுகிறது. அவர்களது எதிர்பார்புகளை, அவர்கள் சரியாகப் புரிந்துகொள்வதில்லை. தங்கள் தேவை என்ன என்பதை அவர்கள் உணர்வதில்லை. ஆடம்பர வாழ்க்கை, போன்ற நிலையற்ற சுகங்களுக்கும், சுதந்திரம் என்பதை சரியாகப் புரிந்துகொள்ளாமலும், வாழ்க்கையை வீனடித்துவிடுகின்றனர்.

பெண்களின் சுதந்திரமென்பது, ஆணுக்கு சமமாக குடும்ப பாரத்தை சுமப்பது, விளையாட்டு, விஞ்ஞானம், போன்ற துறைகளில் புதிய உயரங்களை எட்டுவது போன்ற செயல்களில் இருக்க வேண்டும். அவளது சாதனைகளோடு, குடும்ப எதிர்காலத்தின் கட்டுமானத்திலும் அவளது பங்கு இருக்க வேண்டும். இதனை சரியாக உணராத சில பெண்கள், தங்கள் சுதந்திரமும் முன்னேற்றமும், ஆண்களுக்கு நிகராக, மது அருந்துவதிலும் புகை பிடிப்பதிலும், பல ஆண்களுடன் பழகுவதிலும் தான் இருக்கிறது என்றும், ஆண்களுடனான உறவு, சுகத்திற்காகவும் சந்தோஷத்திற்க்காகவும் என்று முடிவுகட்டிவிடுகின்றனர்.இதனாலேயே அவர்களின் செயல்கள் இப்படித் தவறான பாதையில் செல்கிறது.

பெண்களை சக்தியென்றும், தாயென்றும் போற்றும் இந்த தேசத்தில், பெண்கள் இப்படிப்பட்ட நிலையை நோக்கி சென்றுகொண்டிருப்பது வேதனை. பெண்களின் இந்த நிலைக்கு, சமுதாயத்தின் பார்வையும் காரணம். பெண்கள் வீட்டில் அடங்கிக் கிடக்க வேண்டும் என்றிருந்த நிலை மாறினாலும், அவர்கள் எதையெல்லாம் செய்யக் கூடாது என்ற கண்ணோட்டம் மட்டும் மாறவில்லை.

அவர்கள் மது அருந்துவதையும், புகைப்பதையும் சரியென்று கூறவில்லை. ஆனால் பெண்கள், தங்கள் வாழ்க்கை துணையைத் தேர்ந்தெடுப்பதில், இந்த சமுதாயம் மட்டுமல்லாது, அவளது குடும்பமும் தவறான கருத்துக்களையே கொண்டுள்ளது. தங்களது மகள் யாரையாவது காதலிக்கிறாள் என்றால், உடனே பதறிப்போய், அவளை  வேறு ஒருவனுக்கு  அவசர அவசரமாக திருமணம் செய்துவைத்துவிடுகின்றனர்.

பெற்றோர்கள் பார்க்கும் இந்த மாப்பிளை, தங்கள் மகளுக்குப் பொருத்தமானவனா, இருவரும் இணைந்து, இனிய இல்லறத்தை அமைக்க முடியுமா என்றெல்லாம் யோசிப்பதில்லை. எல்லாம் காலப்போக்கில் சரியாகிவிடும் என்று தட்டிக் கழித்துவிடுகின்றனர். இதனால், தங்கள் எதிர்பார்ப்பு பூர்த்தியாகாத பெண்கள், தங்களுக்குத் தெரிந்த வழிகளை தேடிக்கொள்கின்றனர்.

ஒரு பெண் காதலிக்கிறாள் என்றால், உடனே அவளை எதோ தேசத் துரோக குற்றம் செய்ததுபோல் கண்டிக்காமல், அவளுக்கு முதலில் விஷயத்தின் தீவிரத்தை புரிய வைக்க வேண்டும். அவளது காதலன் எப்படிப் பட்டவன், அவன் மீது என்ன எதிர்பார்ப்புகொண்டிருக்கிறாள், இருவருக்குமான உறவு எப்படிப் பட்டது, இருவரும் இணைந்தால், இவர்கள் வாழ்க்கை எப்படி இருக்கும் என்ற விஷயங்களை பெற்றோர் ஆராய்ந்து, அதனை பக்குவமாக தங்கள் மகளுக்குப் புரிய வைக்க வேண்டும். இது அவர்களது கடமை. இந்த இடத்தில், அவள் சிறு குழந்தை, அவளுக்கு என்ன தெரியும் என்ற எண்ணம் இருக்கக் கூடாது.

பெற்றவர்கள் தங்கள் இந்தக் கடமையிலிருந்து தவறும்போது, கள்ளக் காதல் போன்ற தவறு ஏற்படுகிறது.

பெண்களின் இன்றைய முன்னேற்றம், ஆண்களுக்கு நிகராக, அவர்கள் சம்பாதிக்கிறார்கள். சில குடும்பங்களில், ஆண்களைவிட, பெண்களே அதிகம் வருமானம் பெறுகின்றனர். இதனால், சில பெண்கள் தவறான் எண்ணம் கொண்டு, தாங்கள்  சொந்தக் காலில் நிற்பதாகவும், யாருடைய துணையும் தங்களுக்குத் தேவையில்லை என்றும் நினைக்கின்றனர். இதனால், கணவன், மனைவி, குழந்தைகள் என்ற குடிம்ப அமைப்பை விட்டு வெளியே வந்துவிடுகின்றனர்.

ஒரு குடும்பம்  என்பது, அனைவரின் பங்களிப்புடனும் இயங்கக் கூடியது. எந்தவொரு தனி நபருடைய செயலாலும் நடப்பதில்லை. பணத் தேவைகளை பூர்த்தி செய்ய வேண்டியது கணவனின் கடமை. அதனை மனைவி செய்யக் கூடாது என்றில்லை. ஆனால் அதற்காக குழந்தைகளை அரவணைத்து வளர்த்து, கணவனின் வருமானத்தையும் குடும்பத்தையும் நிர்வகிப்பதையும் மறந்து விடக்கூடாது. அப்படி மறக்கும்போது, குழந்தைகளின் எதிர்காலம் பாதிக்கப் படுவதோடு, குடும்பத்தின் வருமானமும், சேமிப்பும் தடம் மாறி, குடும்பம் நிலைகுலைந்து போகக்கூடும்.

ஆவதும் பெண்ணாலே; அழிவதும் பெண்ணாலே. இதனை பெண்களும், அவர்களது பெற்றோரும் உணர்ந்து செயல்பட்டால், பெண்களின் நிலையோடு குடும்ப வாழ்க்கையும் முன்னேறி, ஆரோக்யமான சமுதாயம் ஏற்படும்.

0 கருத்துரைகள்:

Post a Comment

Design by WPThemesExpert | Blogger Template by BlogTemplate4U