அரசாங்கத்தின் அபத்தமான யோசனை

சமீபத்தில் படித்த செய்தியொன்று, என்னுள் சிந்தனையைத் தூண்டியது. மகாராஷ்டிரா மாநிலத்தில், திருமணத்திற்குப் பிறகு இரண்டு ஆண்டுகள் குழந்தைக பெற்றுக் கொள்ளாமல் இருக்கும் தம்பதிகளுக்கு, ரூ.5 ஆயிரம் சன்மானம் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. நாட்டில் பெருகிவரும் ஜனத்தொகையைக் கட்டுப்படுத்த இத்தகைய புதுமையான திட்டத்தை அம்மாநில அரசாங்கம் அறிவித்துள்ளது.

இந்த திட்டம் இந்தியாவின் இக்கட்டான நிலையை படம் பிடித்துக்காட்டுகிறது.பெருகிவரும் மக்கதொகையால், எதிர்காலத்தில் இந்தியாவிற்கு பல சிக்கல்கள் வரும் வாய்ப்புள்ளது. இதனை உணர்ந்து, இது போன்ற திட்டங்களை அரசு அறிவித்து வருகிறது. ஆனால், ஆனால் பெருகிக்கொண்டே வரும் ஜனத்தொகையைக் கட்டுப்படுத்த, இது போன்ற திட்டங்கள் சாத்தியமா என்பது சந்தேகமாகவே இருக்கிறது. மேலும் இதில் சில நடைமுறை சிக்கல்களும் இருக்கின்றன.

குழந்தை என்பது, கடவுள் கொடுக்கும் வரமாகக் கருதப்படுகிறது. அப்படியிருக்கையில் சன்மானத்துக்காக குழந்தை பெற்றுக்கொள்வதை தள்ளிப்போடுவது என்பது சிக்கலான விஷயம். சில தம்பதிகள், இந்த பணத்திற்காக உருவான கருவைக் கூட கலைக்கும் வாய்ப்பிருக்கிறது. மக்கள்தொகை அதிகரிக்கிறது என்பதற்காக ஒன்றும் அறியாத ஒரு கருவைக் கொள்வது தகுமா? இது போன்ற செயல்களுக்கு அரசாங்கமே தூண்டுகோலாக இருக்கலாமா? மேலும், குழந்தை பெற்றுக் கொள்வதை தள்ளிப்போட்டதால், ஒரு தம்பதிக்கு குழந்தை பிறக்க முடியாமல் போனாலோ, தாமதமானாலோ, அரசாங்கத்தால் என்ன செய்ய முடியும்?

திருமணமாகி ஓர் ஆண்டுக்குள் கருத்தரிகவிலை என்றால், நம் சமுதாயத்தில் என்னென்ன பேச்சுக்கு ஆளாக வேண்டியிருக்கும் என்பது அனைவரும் அறிந்ததே.அதிலும் மனைவியாகிய அந்தப் பெண் சந்திக்கக்கூடிய அவமானங்கள் சொல்ல முடியாதவை. அப்படியிருக்கும்போது, இரண்டு ஆண்டுகள் குழந்தை பெற்றுக்கொள்ளாமல் இருப்பது சரியான அணுகுமுறையல்ல. முன்பு சொன்னதுபோல, குழந்தை பெற்றுக் கொள்வதை தள்ளிப்போட்டதால், ஒரு தம்பத்திக்கு மருத்துவ ரீதியான காரணங்களால் குழந்தை பிறப்பதில் சிக்கல்கள் உருவாகுமேயானால், அதனை அரசாங்கம் கொடுக்கும் பணத்தால் ஈடு செய்ய முடியுமா?

இப்படி யோசித்துப் பார்க்கும்போது, அரசாங்கத்தின் இந்த திட்டம் சற்று அபத்தமாகவும் ஆபத்தானதாகவும் எனக்குத் தோன்றுகிறது. பெருகிவரும் ஜனத்தொகையைக் கட்டுப்படுத்த இன்னும் சிறப்பான திட்டங்களை அரசாங்கத்தால் உருவாக்க முடியும். முன்பு இருந்த, இரண்டு குழந்திகளுக்குப் பிறகு குடும்பக் கட்டுப்பாடு செய்துகொள்ளும் திட்டம் இன்றும் நடைமுறைக்கு ஒத்துவரக்கொடிய திட்டம்தான்.

இப்பொழுது அறிவித்திருக்கும் திட்டத்திலேயே சிறு மாறுதல் செய்து, ஒரு தம்பதி, முதல் குழந்தைக்குப் பிறகு, குறிப்பிட்ட காலம் இடைவெளி விட்டு அடுத்தக் குழந்தை பெற்றுக்கொண்டால், சன்மானம் வழங்கப்படும் என்று மாற்றியமைக்கலாம். இதன் மூலம், ஜனத்தொகை பெருகும் வேகத்தைப் பாதியாகக் குறைக்க முடியும். இது,  தம்பதிகளின் ஆரோக்யத்திற்க்கும் சிறந்தாதாக இருக்கும்.

இப்படிப்பட்ட திட்டங்களை அரசு அறிவிக்கலாமே தவிர, புதிதாக திருமணம் செய்துகொண்டவர்களை குழந்தை பெற்றுக்கொள்ளாதீர்கள் என்று சொல்வது தவறான அணுகுமுறை. மகாராஷ்டிரா அரசு மட்டுமல்லாமல், மத்திய அரசும் இதுபோன்ற திட்டங்களைப் பரிசீலித்து தேசம் முழுவதும், முதல் குழந்தைக்குப் பிறகு, இரண்டாவது குழந்தைக்கு போதிய கால இடைவெளி (மூன்று வருடங்களோ, அல்லது ஐந்து வருடங்களோ) விட்டு பெற்றுக் கொள்பவர்களுக்கு சன்மானம் வழங்கப்படும் எனும் திட்டத்தை அறிவிக்கலாம்.

வாழ்வின் நோக்கம்

அஹமது காசிம் எனும் சூபி ஞானி ஒருவர், மெக்கா நகர் நோக்கி புனிதப் பயணம் மேற்கொண்டார். நீண்ட நாள் பயணம் என்பதால், தேவையான உணவை மூட்டையாகக் கட்டி எடுத்துச் சென்றார்.

பயணத்தின்போது, ஒரு பெண்மணி எதிர்பட்டார். ஞானியை ஏற இறங்கப் பார்த்த அந்தப் பெண்மணி, "உங்களைப் பார்த்தால் சூபி ஞானி போல் தெரிகிறதே. எங்கே பயணம் சென்று கொண்டிருக்கிறீர்கள்?" என்று வினவினாள்.

"புனித மெக்கா நகர் நோக்கி சென்று கொண்டிருக்கிறேன்" என்று பதிலிறுத்தார் அஹமது காசிம்.

"அது சரி மூட்டையில் என்ன வைத்திருக்கிறீர்கள்?"என்று மீண்டும் கேட்டாள் அந்தப் பெண்மணி.

"வழிப் பயணத்திற்குத் தேவையான உணவு" என்றார் சூபி.

"வழியில் உமக்கு உணவே கிடைக்காது என்று முடிவு செய்துவிட்டீரா?" என்று சூபியை ஏளனமாகப் பார்த்தால் அந்தப் பெண்.

இது கேட்டுத் திகைத்துப் போய் நின்ற அந்த ஞானியைப் பார்த்து மேலும் தொடர்ந்தார் அந்தப் பெண்மணி.

"உங்கள் தோற்றத்துக்கும் குணத்துக்கும் சம்பந்தமே இல்லை. நீர் ஒரு சூபியாக இருந்தும் இறைவனிடமிருந்து வெகு தொலைவில் இருக்கிறீர். வழிப் பயணத்தின்போது, ஏதோவொரு வகையில் இறைவன் உணவு வழங்கிவிடுவான் என்ற நம்பிக்கை கூட உமக்கு இல்லை. நீர் எப்படி பிறருக்கு இறைத் தத்துவத்தை போதிக்கப் போகிறீர்?" என்று ஏளனமாகச் சொல்லிவிட்டு சென்றாள் அந்தப் பெண்.

இதைக் கேட்டு தன் தவறை உணர்ந்த அந்த சூபி, வழியில் எதிர்பட்டோருக்கு தான் கொண்டு வந்த உணவை தானமாகக் கொடுத்துவிட்டு,  வெறும்கையோடு, மனதில் இறைவன் பால் நம்பிக்கையும் கொண்டு தன் பயணத்தைத் தொடர்ந்தார்.

நீண்ட தூரம் நடந்தார். பசியும் களைப்பும் அவரை ஆட்கொள்ளத் தொடங்கியது. சுற்றிலும் எதாவது உணவு கிடைக்குமா என்று பார்க்கத் தொடங்கினார்.எதுவும் புலப்படவில்லை. இறைவனை நினைத்துக் கொண்டு மேலும் சிறிது தூரம் நடந்தார்.

அப்போது கீழே ஒரு பெண்ணின் கால் கொலுசு கிடப்பதைப் பார்த்தார். அதைக் கையிலெடுத்தவர், இதைத் தவற விட்டுச் சென்றவர்கள் எப்படியும் தேடிக்கொண்டு வருவார்கள், அவர்களிடம் இதனை ஒப்படைத்துவிட்டு, உணவு ஏதாவது கேட்கலாம், என்று சுற்றிலும் பார்த்தார்.

அப்போது அவர் முன்பு சந்தித்த அதே பெண்மணி வந்து கொண்டிருந்தாள். நேர்ந்கி வந்ததும் அவளைப் பார்த்து, "தாயே! இந்தக் கொலுசு தங்களுடையதா?" என்று வினவினார்.

"ஆம் என்னுடையதுதான்" என்று பெற்றுக் கொண்டார் அந்தப் பெண்.

"அம்மா! எனக்கு ஏதாவது உணவு இருந்தால் கொடுங்கள் மிகுந்த பசியாக இருக்கிறது" என்று வேண்டினார் அஹமது காசிம்.

மீண்டும் அவரை ஏளனமாகப் பார்த்த அந்தப் பெண்மணி,"இப்போது நீங்கள் இந்தக் கொலுசைக் கொடுத்துவிட்டு உணவு பெரும் வியாபாரியாகி விட்டீர்கள். இப்பொழுதும் உங்களுக்கு இறைவன் மீது நம்பிக்கை இல்லை." என்று கூறிவிட்டு சென்றுவிட்டாள்.

நாமும் இப்படித்தான் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். ஏதோவொன்றை அடைய வேண்டுமென்று உழைக்கிறோம். ஆனால் ஏன் அதனை அடைய வேண்டும்? அதன் பலன் என்ன?அந்த நோக்கம் எத்தன்மையது? போன்றவற்றை நாம் உணர்வதில்லை. அதனாலேயே நம் லட்சியத்தை அடைந்தவுடனேயே அதன் மதிப்பு குறைந்து விடுகிறது.

வாழ்க்கைப் பயணத்தில் நமது இலக்கு எது? எதை நோக்கி நாம் சென்று கொண்டிருக்கிறோம்? நம் பயணம் எப்படி இருக்கிறது? நம்மில் எத்தனைப் பேர் இந்தக் கேள்விகளுக்கான் பதிலை அறிந்திருக்கிறோம்?

நம் குழந்தைகளைப் படிக்க வைக்கிறோம், ஆனால் அந்த படிப்பின் நோக்கம் என்ன? எதற்க்காக படிக்க வேண்டும் என்பதை நாம் அவர்களுக்குச் சொல்லிக்கொடுக்கொடுப்பதில்லை. நன்றாகப் படித்தால், நல்ல வேலைக்குப் போய் நிறைய சம்பாதிக்கலாம் என்று மட்டும் சொல்லி படிக்க வைக்கிறோம். இப்படித்தான் வாழ்வின் ஒவ்வொரு விஷயத்தையும் முழுமையாக உணராமல், கடமையைச் செய்வதுபோல் செய்துகொண்டிருக்கிறோம்.

இறை நம்பிக்கையிலும் நாம் இப்படித்தான் இருக்கிறோம். கடவுளிடம் நாம் முழுமையாகச் சரனடைந்துவிடுவதே உண்மையான பக்தி. கஷ்டங்களும் கவலைகளும் வரும்போது மட்டும் கடவுளை நினைக்காமல், நம் வாழ்வில் நடக்கும் ஒவ்வொரு சம்பவமும் அவன் செயல் என்று நம்பியிருப்பதே இறை நம்பிக்கை.

Design by WPThemesExpert | Blogger Template by BlogTemplate4U