காமன் வெல்த் போட்டிகள் : பிரச்னைகளின் அடுத்த கட்டம்

உலக அரங்கில் தேசமே தலை குனியுமளவு காமன் வெல்த் போட்டிகளின் ஏற்பாடுகளில் ஊழல் நடந்திருப்பது அனைவரும் அறிந்ததே. இப்போது அந்தப் பிரச்னையின் அடுத்த கட்டம் வந்துவிட்டது. அதாவது இந்த ஊழல் விவகாரங்களின் பின்விளைவு.

ஆஸ்திரேலியாவின் முன்னாள் நீச்சல் வீராங்கனை டான் பிரேசர் (73)  அந்த நாட்டு விளையாட்டு வீரர்கள் அனைவரும் காமன் வெல்த் போட்டிகளைப் புறக்கணிக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளார்.

கடந்த 1972 இல், ஜெர்மனியின் முனிக்கில் நடந்த ஒலிம்பிக் போட்டியில் இஸ்ரேலிய வீரர்கள், பயிற்சியாளர்கள் உட்பட பதினோரு பேரை பாலஸ்தீன தீவிரவாதிகள் கடத்திச் சென்று படுகொலை செய்தனர். இதுபோன்ற சம்பவம் டெல்லியிலும் நடக்கலாம் என்று  அச்சத்தாலே இப்படிக் கூறுவதாக டான் பிரேசர் அறிவித்துள்ளார்.

காமன் வெல்த் போட்டிகளின் ஏற்பாடுகளில் நடந்த ஊழலின் விளைவு பாதுகாப்பு குறித்த சந்தேகங்களை ஏற்ப்படுத்தியுள்ளது.என்னதான் ஆஸ்திரேலிய காமன் வெல்த் விளையாட்டு சங்கம் இந்த முன்னாள் வீராங்கனையின் கோரிக்கைகளை நிராகரித்தாலும், உலகம் இந்தப் பிரச்னையின் புதிய பரிமாணத்தைப் பார்க்கத் தொடங்கிவிட்டது.

டான் ப்ரேசரின் சந்தேகம் நியாயமானதுதான் என்றாலும், இந்தப் பிரச்னையை இந்தக் கோணத்தில் அணுகக் கூடாது.

விளையாட்டுப் போட்டிகள் என்பதே தேசங்களின் மத்தியில் நல்லுறவு மலர வேண்டும் என்பதற்க்காகத்தான். வெவ்வேறு கலாசாரம், பண்பாடு, மொழி, இனம், மதம் கொண்ட தேசங்களின் வீரர்கள் இதுபோன்ற விளையாட்டுகள் மூலம் ஓர் நல்லிணக்கத்தை வெளிப்படுத்த முடியும்.

காமன் வெல்த் போட்டிகள் என்பது வளர்ந்துவரும் தேசங்கள் கலந்து கொள்ளும் ஒரு நிகழ்வு. பலதரப்பட்ட பண்பாடும், பழக்க வழக்கங்களும் கொண்ட தேசங்களின்  விளையாட்டு வீரர்கள் ஓரணியாகக் கூடி நடத்தும் திருவிழா.இது போன்ற நிகழ்ச்சியின் மீது இத்தகைய சந்தேகம் வந்தது வெட்கக்கேடானது.

ஆனால் இதற்காக வீரர்கள் போட்டிகளைப் புறக்கணிப்பது தவறு. அப்படிச் செய்தால் இது போன்ற நிகழ்ச்சிகள் நடத்தபடுவதன் நோக்கத்திற்கே பங்கம் விளைவிப்பதாகிவிடும்.

தீவிரவாத அச்சுறுத்தல்கள் இருக்கும் என்று போட்டிகளைப் புறக்கணித்தால், அந்தத் தீவிரவாதிகள் வென்றுவிட்டது போல் ஆகாதா? விளையாட்டு வீரர்கள் விளையாடாமலே தோற்றுப்போனது போல் ஆகாதா?

ஒவ்வொரு வீரருக்கும் ஒரு ரசிகர் வட்டமுண்டு. அவர்களின் ஒவ்வொரு அசைவையும் ரசிகர்கள் பார்த்துக்கொண்டிருக்கிறார்கள். அப்படியிருக்கையில் வீரர்களின் இது போன்ற செயல்கள் அந்த ரசிகர்களுக்கு தவறான முன்மாதிரியாகிவிடும்.

அதற்காக வீரர்கள் தங்களின் உயிரை பணயம் வைத்து போட்டிகளில் கலந்துகொள்ள வேண்டுமென்று சொல்லவில்லை. பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து நேரடியாக ஆராயலாம். அதில் குறைகள் இருந்தால் அவற்றைச் சுட்டிக்காட்டிச் சரிசெய்யச் சொல்லலாம். அவற்றில் முழு திருப்தி ஏற்ப்பட்ட பிறகு போட்டிகளில் கலந்து கொள்ளலாம்.அதைவிடுத்து போட்டிகளைப் புறக்கணிப்பது தங்கள் தோல்வியை தாங்களே ஒப்புக்கொண்டது போலாகிவிடும்.

ஒருபக்கம் தீவிரவாதமும், மறுபக்கம் இயற்கை சீற்றங்களும் உலகை சிறிது சிறிதாக அழித்து வரும் நிலையில் மனிதநேயம்  மலர இது போன்ற நிகழ்வுகள் மூலம் மக்களை ஒருங்கிணைக்க வேண்டும். தேசம், இனம், மதம், மொழி என்ற எல்லைகளைக் கடந்து மனிதர்களாக நாம் செயல்பட வேண்டிய தருணமிது. பரவி வரும் பயங்கரவாதத்தைத் தடுக்க ஒரே வழி சக மனிதனிடம் நாம் காட்டக்கூடிய அன்பும் பரிவும் தான்.

தீவிரவாதத்தை அழிக்கக்கூடிய ஒரே ஆயுதம் மனிதநேயம் மட்டும்தான். பிரிவினைகளை உடைத்து மனிதநேயத்தை மட்டுமே பரப்புவோம்.

வாழ்க வையகம்!

0 கருத்துரைகள்:

Post a Comment

Design by WPThemesExpert | Blogger Template by BlogTemplate4U