ஊழ்வினையாகிவிட்ட ஊழல்

ஓர் இந்தியக் குடிமகன், தனது நாட்டைப் பற்றி கவலைப்பட வேண்டுமென்று நினைத்தால், அவனது முதல் கவலை, ஊழல் பற்றியதாகத்தான் இருக்கும். அந்தளவுக்கு ஊழல், நம் நாட்டில் பரவியிருக்கிறது. நம் நாட்டில் மட்டும்தான் இந்த ஊழல் இருக்கிறதா? உலகின் மற்ற நாடுகளில் இதுபோன்ற கேவலமான நிலை இல்லையா என்று பல முறை சிந்தித்ததுண்டு. எனது கேள்விக்கு பதில் சொல்லக் கூடிய செய்தியொன்றை சமீபத்தில் படிக்க நேர்ந்தது.

சீனாவில், ஊழல் அதிகரித்திருப்பதாக நாளிதழொன்றில் செய்தி வந்திருந்தது. ஆஹா! படிப்பதற்கே எத்தனை ஆனந்தமாக இருக்கிறது. நம்மைப் போல சீனாவிலும், ஊழல் இருக்கிறது. அதுவும், 2003 இல் இருந்து, 13 % ஊழல் வழக்குகள் அதிகரித்துள்ளதாம். ஊழலில் ஈடுபடும் அரசு ஊழியர்களின் எண்ணிகையும் உயர்ந்திருக்கிறதாம்.

ஊழல் - உடலுக்குள் உருவாகி, மெல்ல மெல்ல வளர்ந்து, உடலையே செயலிழக்கச் செய்யக்கூடிய புற்று நோய் போல, அரசு இயந்திரத்தில் உள்ளே பரவி, இயக்கைதையே நிறுத்திவிடும் விஷக் கிருமி.

இந்த ஊழல் என்பது பல வகைகளிலும் நடக்கிறது. அந்தந்த இடங்களுக்கேற்ப, அவரவர் தகுதிக்கேற்ப, என்று மாறுபடும். லஞ்சம், அரசு பணத்தில் மோசடி, நிர்வாகத்தில் குளறுபடிகள் என்று ஊழலை விவரித்துக்கொண்டே போகலாம்.இந்த ஊழல் பற்றிப் பேசும்போது, இந்தியன் படத்தில், கமல்ஹாசன் சொல்லும் வசனமொன்று நினைவுக்கு வருகிறது. "வெளிநாட்டிலும் லஞ்சம் இருக்கிறது. ஆனால், அங்கெல்லாம், கடமையை மீறத் தான் லஞ்சம். ஆனால் இங்கு கடமையைச் செய்வதற்கே லஞ்சம் என்ற அவல நிலை" எத்தனை உண்மையான வசனம். இந்தியாவின் நிலையை, ஒரே வரியில் விளக்கிவிடும் அர்த்தமுள்ள வார்த்தைகள்.இந்தியாவில், லஞ்சம் கொடுத்தால்தான் வேலையே நடக்கும் என்ற நிலை, பல அரசு அலுவலங்களிலும் இருக்கிறது.

சரி, ஏன் இந்த அதிகாரிகள் இப்படி நடந்துகொள்கிறார்கள்? மனசாட்சிபடி வேலை செய்யமாட்டார்களா? எதற்க்காக ஊழல் செய்கிறார்கள்? இதற்கு பல காரணங்கள் சொல்லலாம். ஆனால், இதுபோன்ற விஷயங்களை நன்கு சிந்தித்தால் கிடைக்கும் உண்மைகள் வேதனை தரக் கூடியவை.

இந்த ஊழல் எங்கிருந்து தொடங்குகிறது? அரசு அதிகாரிகளிடமிருந்தா? பொதுமக்களிடமிருந்தா?

இந்தக் கேள்விக்கான பதில், வருத்தம் தரக் கூடியதுதான். ஆனாலும் அனைவரும் ஏற்றுகொள்ள வேண்டியது.

இருவரிடமும் தொடங்குகிறது. அதாவது, ஓர் ஆரசாங்க அலுவலகத்தில் நமக்கு வேலை நடக்க வேண்டுமானால், நாம் பணம் கொடுத்தாவது  முடித்துக்கொள்கிறோம்.

அதாவது, அரசு அலுவலகம் என்றாலே அங்கு பணம் கொடுக்காமல், எந்த பணியும் நடக்காது என்ற முடிவுக்கு நாம் வந்துவிட்டோம். அதனால், அவர்கள் வாய் திறந்து கேட்கும் முன்பே நாம் பணம் கொடுத்துவிடுகிறோம். இதுதான் நிஜம்.

இந்த ஊழலின் மற்றொரு விதம், மக்களின் நலத்திற்க்காக போடப்படும் திட்டங்களுக்காக ஒதுக்கப்படும் நிதியில் ஊழல் செய்வது. பாலம் கட்டுவது, குடிசைகளை மாற்றி வீடுகள் கட்டித் தருவது, ஆறுகள், ஏரிகள், வாய்க்கால்களைத் தூர்வாருவது போன்ற பணிகளுக்கு ஒதுக்கப்படும் நிதியில், அரசியல்வாதிகளும், அதிகாரிகளும், தங்களுக்கு ஒதுக்கிக் கொண்டு, மீதம் பணம் இருந்தால் மட்டுமே, திட்டங்களை நிறைவேற்றுகிறார்கள்.

அரசு பணிகளுக்கு ஆட்களைத் தேர்வு செய்வதில், அரசு அதிகாரிகளும், அரசியல்வாதிகளும், தங்களுக்கு வேண்டியவர்களுக்கோ, அல்லது பணம் கொடுப்பவர்களுக்கோ, அந்த வேலையை கொடுத்துவிடுகின்றனர்.ஆட்சித் தலைவர் பதவி முதல், அங்கன்வாடி பணியாளர் நியமனம் வரை, இந்த பரவியிருக்கும் இந்த நடைமுறை, ஊழலின் மற்றுமொரு பரிமாணம்.

இப்படி அரசு இயந்திரத்தின் ஒவ்வொரு கட்டத்திலும் பரவியிருக்கும் ஊழலின் ஆரோக்யமான முன்னேற்றமாக, இன்று, ஜனநாயகக் கடமையான வோட்டுப் போடுவதற்குப் பணம் வாங்குவது வரை வந்துவிட்டது. கட்சியின் பாரம்பரியத்தையும், வேட்பாளரின் தரத்தையும் பார்த்து வாக்களித்த காலம் போய், அதிகப் பணம் கொடுப்பவனுக்கே வோட்டுப் போடும் நிலை வந்துவிட்டது. இப்படிக் கொடுத்த பணத்தைதான், ஆட்சிக்கு வந்தபிறகு ஊழல் செய்து மக்களிடமிருந்து திரும்பப் பெற்றுகொள்வது நியாயம்தானே.

நம்மை நெறிப்படுத்தி நியாயமான முறையில் ஆட்சி செய்பவர்களை நாமே தேர்ந்தேடுத்துக்கொள்ளத்தான் ஜனநாயக முறை தோற்றுவிக்கப்பட்டது. ஆனால் அந்த முறையிலேயே, நமக்குப் பணம் கொடுப்பவர்களை நாம் தேர்ந்தெடுத்தால், அந்த ஜனநாயகம் என்ற அமைப்புக்கு என்ன பயனிருக்க முடியும்?

மக்களுக்காக, மக்களால் ஏற்படுத்தப்படும் ஆட்சிமுறை, ஜனன்னாயகம் என்பதுபோல, மக்களுக்காக, மக்களின் ஒத்துழைப்போடு நடப்பது ஊழல் என்ற நிலை இன்று ஏற்பட்டுள்ளது.

இதனை மாற்ற முடியாதா?

முடியும். அதற்கு முதலில் மக்கள், தனி மனித ஒழுக்கத்தை கடைபிடிக்க வேண்டும். தங்களின் காரியம் நிறைவேற வேண்டுமென்பதற்க்காக, லஞ்சம் கொடுக்காமல், அரசு அதிகாரிகளை நேர்மையாக பணிசெய்ய நிர்பந்திக்க வேண்டும். குறுக்கு வழிகளில் பயணம் செய்யாமல், நேரடியான நடைமுறையை பின்பற்ற வேண்டும். குறைந்தபட்சம், பணம் கொடுக்கும் கட்சிகளுக்கு வாக்களிப்பதையாவது நிறுத்த வேண்டும். இது மக்கள் செய்ய வேண்டியது.

அரசுத் தரப்பிலிருந்து, அரசாங்க அலுவலகங்களில் நிலவும் நடைமுறையை மாற்ற வேண்டும். R . T . O அலுவலகத்திலும், பத்திரப் பதிவு அலுவலகம் போன்ற இடங்களில் இருக்கும் விதிமுறைகளை மாற்றி, எளிமைப் படுத்த வேண்டும். இங்கு இருக்கும் விதிமுறைகள் புரியாமலே, பணம் கொடுத்து காரியம் முடிப்பவர்கள் அநேகம் பேர்.

இதுகுறித்து நடவடிக்கை எடுக்காமல் தாமதித்தல், காஷ்மீர் போல தேசம் முழுவதும், மக்களிடம் அதிருப்தி ஏற்பட்டு, காஷ்மீர் போல ஆர்பாட்டங்களும், வன்முறையும் நடக்க வழிவகுத்துவிடும். இந்தியா அரசாங்கம், இந்த அவசர நிலையை உணர்ந்து, தக்க நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்.

1 கருத்துரைகள்:


Fantastic Post! against all Bribe giving taking persons!
Take an Ooth, "We don't get and give Bribes", start from ourself., and hope support some NGo's like SATYAGRAHA,.., doing good job against Bribe.


Post a Comment

Design by WPThemesExpert | Blogger Template by BlogTemplate4U