வாழ்க்கைச் சிற்பிகள்

குரு. தாய் தந்தைக்கு அடுத்தபடியாக, நமது வாழ்க்கையை செதுக்குவதில் பெரும் பங்காற்றுபவர். தெய்வத்திற்கும் மேலாக மதிக்கப்படும், உன்னதமான மனித உறவு.

இந்தியாவின் முதல் ஜனாதிபதி, திரு.ராதாகிருஷ்ணனின், பிறந்த நாள், ஆசிரியர் தினமாக, இன்று தேசம் முழுவதும் கொண்டாடப்படுகிறது. நம் வாழ்நாளில், கால் பகுதியில் மட்டுமே நம்முடன் இருக்கும், இந்த ஆசிரியர்கள்தான், நம்  மொத்த வாழ்க்கைக்கான அடித்தளம் அமைப்பவர்கள். இவர்கள் அமைத்துத் தரும் பாதையிலேயே நம் வாழ்க்கைப் பயணம் அமைகிறது. இத்தகைய ஆசிரியர்களின் மேன்மையை நாம் முழுமையாக உணர்ந்திருக்கிறோமா? இல்லை என்றே எனக்குத் தோன்றுகிறது.

உலகில் மற்ற எந்த தொழிலுக்கும் இல்லாத ஒரு சிறப்பு, ஆசிரியர் பணிக்கு உண்டு. குருவிடம் பாடம் பயின்ற மாணவன், எத்தனை ஆண்டுகள் கழித்து அவரை சந்தித்தாலும், அடையாளம் கண்டு, தன்னை அறிமுகப் படுத்திகொண்டு உரையாடுவான். பால்ய நண்பர்களை கூட பார்த்தும் பேசாமல் செல்பவர்கள் இருக்கிறார்கள். ஆனால், ஆசிரியர்களை பல வருடங்கள் கழித்துப் பார்த்தவர்கள், அவர்களுக்கு உரிய மரியாதையை செலுத்தாமல் செல்வதில்லை.

தாய் தந்தைக்கு அடுத்தபடியாக, ஒரு குழந்தையை நன்கு அறிந்தவர், ஆசிரியர் மட்டுமே. அப்படிப்பட்ட குருவின் கடமை, அவனுக்கு கல்வி பயிற்றுவிப்பது மட்டும் அல்ல. ஒரு நாளின் பெரும் பகுதியை அவருடனேயே செலவிடும் மாணவனின் திறமைகளை அறிந்து, அவற்றை வெளிக்கொணர வேண்டும். மாணவனே அறியாத, அவனது பல ஆற்றல்களை, அவனுக்கு உணர்த்தி, அதனை மேம்படுத்தவும் உதவ வேண்டும்.

கல்வி போதிப்பதென்றால், பாடங்களை மட்டும் கற்றுத் தருவதல்ல. உயர்ந்த பண்புகளையும், நல்லொழுக்கத்தையும், கற்ப்பிக்க வேண்டும்.

மாணவர்களை, அவர்களது தவறுகளுக்காக, தண்டிப்பதை விட, அவற்றை உணர்ந்து, திருத்திக்கொள்ளச் செய்வதே, ஆசிரியரின் பணியாகும். கண்டிப்பும், கருணையும், சரி பாதி கலந்த கலவையாக இருக்கும் ஆசிரியர்கள், மாணவர்கள் தவறு செய்யும்போது, தண்டிக்காமல், அந்த தவறை உணரச் செய்து, அதனை மீண்டும் செய்யாதபடி, நெறிப்படுத்த வேண்டும்.

மாணவர்களுக்கு, அவர்களின் அறிவை வளர்த்துக் கொள்வதற்கு உதவுவதோடு, நற்குணங்களைக் கற்றுத் தர வேண்டும்.

மாணவர்களின் பழக்க வழக்கங்களிலும் மாற்றங்களைக் கொண்டு வரக் கூடிய வல்லமை படைத்தவர் ஆசிரியர். புத்தகங்கள் வாசிப்பது, பொது அறிவை வளர்த்துக் கொள்வது, போன்ற பழக்கங்களை, அவர்களிடம் ஏற்படுத்தும் கடமையும் குருவுக்கு உண்டு. சாதனையாளர்களின் வாழ்க்கையையும், அவர்கள் சந்தித்த சவால்களையும் எடுத்துக் கூறி, அதன் மூலம், எதிர் காலத்தில் மாணவர்கள் சந்திக்கவிருக்கும், சோதனைகளை எப்படி வெல்வது என்பதையும் போதிக்கவேண்டும்.

பண்டைய காலங்களில், அரசர்களுக்கு ஆலோசனை சொல்ல, அமைச்சர்களுக்கு இணையாக ராஜ குருக்களும் இருந்திருக்கிறார்கள். பல சமயங்களில், மந்திரிகளை விட, இந்த ராஜகுருக்கள், அதிக செல்வாக்கு பெற்றிருக்கிறார்கள்.இவர்கள், மன்னனுக்கு, அரசியல் சிக்கல்கள் மட்டுமல்லாது, குடும்ப வாழ்க்கையிலும் ஆலோசனைகள் வழங்கும் வல்லமை படைத்தவர்கள். சந்திர குப்தனை நெறிப்படுத்தி ஒரு மாபெரும் சாம்ராஜ்யத்தை  நிறுவியவரும், அர்த்த சாஸ்திரம் எனும், அரசியல் வேதத்தை எழுதியவருமான சாணக்யர், ஒரு ராஜகுரு தான்.

இத்தைகைய மேன்மைகள் நிறைந்த ஆசிரியர் பணியை, இன்று செய்பவர்கள், சரியாக இருக்கிறார்களா?

மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுப்பது, மதிப்பெண் குறைவாக எடுத்தல், படிப்பில் சரிவர கவனம் செலுத்தாதது, போன்ற சிறிய தவறுகளுக்குக் கூட கடுமையான தண்டனைகள் கொடுப்பது போன்ற வேலியே பயிரை மேயும் செயல்களை செய்வது, வேதனையாக இருக்கிறது.

சுருங்கச் சொன்னால், மாணவன் என்பவன் ஒரு பாறாங்கல் போன்றவன். அந்தக் கல்லில், அழகிய சிற்பம் செதுக்கும் சிற்பி, ஆசிரியர்.இதனை உணர்ந்துகொண்டு ஆசிரியர்கள் செயல்படவேண்டும்.

0 கருத்துரைகள்:

Post a Comment

Design by WPThemesExpert | Blogger Template by BlogTemplate4U