Showing posts with label அலசல். Show all posts
Showing posts with label அலசல். Show all posts

இனவெறியா? கொலைவெறியா?

ஆஸ்திரேலியாவில் மேலும் ஒரு இந்தியர் மீது தாக்குதல். கடந்த வாரம்  நிதின் கார்க் என்ற பஞ்சாபி இளைஞர் ஆஸ்திரேலியாவில் கொடூரமாக கொல்லப்பட்டார்.இந்த சர்ச்சை அடங்குவதற்குள் மற்றும் ஒரு இந்தியர் மீது அசிட் வீசப்பட்டுள்ளது. கடந்த ஓராண்டு காலமாகவே ஆஸ்திரேலியாவில் இந்தியர்கள் மீது கொலைவெறி தாக்குதல்கள் நடந்து வருகிறது.இதன் தொடர்ச்சியாகவே தற்போது நடந்துள்ள சம்பவங்களும் உள்ளன.

இந்த தாக்குதல்களுக்கு ஆஸ்திரேலியா அரசு வெளியிட்டுள்ள அறிக்கை வேதனைக்குரியதாக உள்ளது. அங்கு நடந்து வரும் கொலைகளையும் தாக்குதல்களையும் இந்திய ஊடகங்களே பெரிதுபடுதிகின்றன என்றும் இது போன்ற சம்பவங்கள் மும்பை டெல்லி போன்ற நகரங்களிலும் நடக்கின்றன என்று நம்மையே உதாரணமாக கூறியிருக்கிறார்கள். இது அந்த அரசாங்கத்தின் பொறுப்பற்ற தன்மையையே காட்டுகிறது.

இதற்கிடையில் இந்தியர்கள் மீது நடத்தப்படுவது இனவெறித் தாக்குதலா? இல்லையா? என்ற கேள்வியும் எழுந்துள்ளது. ஆஸ்திரேலியா அரசாங்கம் இதனை இனவெறி தாக்குதல் என்று கூற முடியாது என்றும் இந்திய அரசாங்கமும் இதனை இனவெரியாகச் சித்தரிக்க வேண்டாம் என்றும் கூறியுள்ளது. இவற்றைவிட முக்கியமானது ஆஸ்திரேலியாவில் வசிக்கும் இந்தியர்கள் சிலர் கூறியிருப்பது தான். அவர்கள் மீது நடத்தப்படும் தாக்குதல்களை இந்திய ஊடகங்கள் தான் இனவெறி அடிப்படையிலானது  என்று பெரிதுபடுத்துகின்றன என்றும் பரபரப்புக்காக இத்தகைய செய்திகளை வெளியிடுகின்றன என்றும் கூறியிருக்கிறார்கள்.

இந்த தாக்குதல்கள் அனைத்தும் இனவெறி அடிப்படையில்தான் நடக்கிறது என்று நாம் தீர்மானமாக சொல்லிவிட முடியாது என்றாலும் கடந்த ஒரு வருட காலமாக இந்தியர்கள் குறி வைத்து தாக்கப்படுவதைப் பார்க்கும்போது இனவெறியே காரணமாக இருக்கும் என்று எண்ணத் தோன்றுகிறது.

இந்த விவகாரத்தில் இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் திரு.எஸ்.எம்.கிருஷ்ணாவின் அறிக்கையும் நம்மை சிந்திக்கவைத்துள்ளது. ஆஸ்திரேலியாவுக்கு இந்தியாவிலிருந்து நிறைய மாணவர்கள் மேல்படிப்புக்காக செல்கிறார்கள். ஆனால் அங்கு சூழ்நிலை சரியில்லாததால் மாணவர்கள் வேறு நாடுகளை தேர்வு செய்யவேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளார். மாணவர்கள் ஆஸ்திரேலியாவிற்கு செல்வதை தவிர்க்க வேண்டும் என்று கூறியிருக்கிறார். ஆனால் வேறு நாடுகளுக்குச் சென்று கற்க்கலாம் என்றும் கூறியிருக்கிறார். பெரும்பான்மையான இந்திய இளைஞர்கள் தங்களின் மேற்ப்படிப்புக்கு ஏற்ற இடமாக ஆஸ்திரேலியாவைத் தேர்ந்தெடுக்கக் காரணம் அங்கு கிடைக்கும் தரமான கல்வி தான் என்பதில் சந்தேகமில்லை. இந்திய அமைச்சர் அத்தகைய கல்வியை வேறு நாட்டில் கற்குமாறு கூறுகிறார்.

இதன் அர்த்தம் என்ன? இந்திய மாணவர்கள் வெளிநாட்டில் தான் தரமான கல்வியை கற்க முடியுமா? அத்தகைய தரமான கல்வியை இந்தியாவில் வழங்க முடியாதா?

என்ன வளமில்லை இந்தத் திருநாட்டில்? ஏன் கையை ஏந்த வேண்டும் வெளிநாட்டில்? என்று சுதந்திர காலம் முதல் பாடிக்கொண்டு தான் இருக்கிறோம். அதன் அர்த்தத்தை உணரவில்லை. ஆஸ்திரேலியாவில் இந்திய மாணவர்கள் கற்கும் கல்வியை விட அதிசிறப்பான கல்வியை நம் நாட்டிலேயே வழங்க வேண்டும். பொறியியல் துறையிலும் அறிவியல் விஞ்ஞானத் துறையிலும் இந்தியா எவ்வளவோ முன்னேறியிருக்கிறது. இந்தத் துறைகளில் இந்தியாவில் மட்டுமல்லாது அமெரிக்கா உட்பட பல்வேறு நாடுகளிலும் இந்தியர்கள் சிறப்பாக பணிபுரிந்து வருகிறார்கள். இத்தகைய திறமை நம்மிடம் இருக்கும்போது அதனை நாம் சரியாக பயன்படுத்திக்கொல்ல்வதில்லை என்பதே உண்மை.

சமச்சீர் கல்வி பற்றிய விவாதங்கள் நிகழ்ந்துகொண்டிருக்கும் நேரத்தில் இந்திய மாணவர்கள் வெளி நாடுகளுக்குச் சென்று படிப்பது பற்றி பேசிக்கொண்டிருந்தால் நமது கல்வியின் தரத்தை உயர்த்துவது எப்போது? எதிர்க்காலத்தில் வெளிநாட்டினர் மேற்படிபிற்க்காக இந்திய வரும் சூழ்நிலை உருவாக வேண்டும். அத்தகைய மாற்றம் உருவாக வேண்டிய தருணம் வந்துவிட்டது. இந்திய அரசாங்கம் தன தவறுகளை உணர்ந்துகொண்டு கல்வியின் தரத்தை மேம்படுத்தவேண்டும்.

அதுமட்டுமல்லாது ஆஸ்திரேலிய வாழ் இந்தியர்கள் கூறியிருப்பது இன்னும் வேதனையாக உள்ளது. அங்கு நடக்கும் தாக்குதல்களை இந்திய ஊடகங்களே இனவெறி என்று பெரிதுபடுத்துகின்றன என்று வருத்தப்பட்டுள்ளனர். இது ஆஸ்திரேலியாவில்  தொடர்ந்து வாழ விரும்புகிறார்கள் என்பதை வெளிப்படுத்துகிறது. இதற்க்குக் காரணம் நம் நாட்டில் நிலவும் சூழ்நிலை தான்.

இந்த நிலை மாற வேண்டும். இந்தியர்கள் மட்டுமல்லாது உலக நாட்டினர் அனைவரும் வாழ விரும்பும் நாடாக இந்திய மாற வேண்டும். இந்த மாற்றத்தைக் கொண்டு வர இந்தியர்கள் அனைவரும் ஒன்றுகூடி முயற்ச்சிக்க வேண்டும். அரசாங்கம் கண்டனம் தெரிவிப்பதை விட்டுவிட்டு செயல்களில் இறங்க வேண்டும்.

Design by WPThemesExpert | Blogger Template by BlogTemplate4U